தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன புதிய கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி காணொளி வழியாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய நரேந்திர மோதி, "அனைவருக்கும் பொங்கல், மகர சங்கராந்தி வாழ்த்துகள். தை பிறந்தால் வழி பிறக்கும்.' என்று தமிழில் பிரதமர் மோதி பேசினார்.
''ஒரேநேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது, இதுதான் முதல்முறை. அண்மையில் உத்தர பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிககள் தொடங்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மொத்தம் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது, 596 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இது 54% அதிகம்.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. அதிகரித்துள்ள மருத்துவ கட்டமைப்புகளால், மருத்துவ சுற்றுலாவிற்கு ஏற்ற நாடாக இந்தியா உள்ளது. தரமான, சிறந்த மருத்துவ சேவைக்கான மையமாக இந்தியா உள்ளது.'' என்றார்.
மேலும், "தமிழ் மொழி, கலாச்சாரத்தின் செழுமையால் நான் ஈர்க்கப்பட்டேன்.
ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேசியது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணம். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கையை அமைக்கப்பட்டுள்ளது. எனது மக்களவை தொகுதியில் உள்ள இந்த இருக்கை, தமிழ் குறித்த ஆர்வத்தை பெரியளவில் தூண்டும் வகையில் உள்ளது.
தாய்மொழி வழிக் கல்வியை அரசு ஊக்குவிக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.'''என்றார்.
இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா உள்ளிட்டோர் சென்னையில் இருந்து பங்கேற்றனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் திருப்பூரில் இருந்து பங்கேற்றனர்.