தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. முதல் முறையாக, இசைத் தட்டுக்கு பதிலாக, இசைக்கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
இதைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் கூறி, புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்கினார்.
ஆளுநர் உரையின் போது, அதிமுக, விசிக கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஆளுநர் தனது உரையில், ''கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு இநதியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது. ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒமிக்ரான் ஆய்வகம் தமிழ்நாட்டில்தான் முதலில் அமைக்கட்டது. மருத்துவ காப்பீட்டுக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 12ம் தேதி அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும்'' என்றார்.


