மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்த ஒரு வாரத்தில் பெண்சிசு உயிரிழந்தது. பெற்றோர் தலைமறைவானதால், பெண் சிசு கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி- கௌசல்யா தம்பதி. இவர்களுக்கு, 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 21ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த பெண் குழந்தை கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தது. யாருக்கும் தெரியப்படுத்தாமல், வீட்டின் அருகிலேயே சடலத்தை புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த சென்ற செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே, சந்தேகமடைந்த கிராம செவிலியர், இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் அளித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முத்துப்பாண்டி, கௌசல்யாவிடம் விசாரணை நடத்த சென்ற போது இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்ட போது, "விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.