You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஒமிக்ரான்-கொரோனா: தயார்நிலையில் டெல்லி மருத்துவமனைகள் - முதல்வர் கேஜ்ரிவால்

கோவிட் இரண்டாவது அலையின் போது, ​​டெல்லியில் தினமும் அதிகபட்சமாக 26-27 ஆயிரம் பேர் வரை பரிசோதனைக்காக பதிவு செய்யப்பட்டனர். இப்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சீனாவின் ஷி நகரில் கொரோனா கட்டுப்பாடு

    கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனாவின் ஷியான் நகரில் மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது.

    அந்நகரில் 1.3 கோடி பேர் வசிக்கின்றனர்.

    சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள அந்நகரில் இதுவரை 143 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    புதிய கட்டுப்பாடுகளின்படி வீட்டிற்கு ஒருவர், இருநாட்களுக்கு ஒருமுறை தேவையான பொருட்களை வாங்க வெளியில் வரலாம்.

    சீனா அடுத்த வருடம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவிருப்பதால் கொரோனா குறித்த அதிக விழிப்புடன் உள்ளது.

  2. அமெரிக்க பெண் எம்.பி.யிடம் துப்பாக்கி முனையில் கார் பறிப்பு

    அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண் எம்.பி.ஒருவரிடம் இருந்து துப்பாக்கி முனையில் அவரது கார், அடையாள அட்டை, அரசாங்க போன் ஆகியவற்றை பறித்துச் சென்றிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

    ஆளும் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேரி கே ஸ்கேன்லென் என்பவரிடம் பட்டப்பகலில் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் மேரிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என அவரது அலுவலகம் கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பகல் 2.45க்கு நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக மாநகர மேயர் ஜிம் கென்னி கூறியுள்ளார்.

    கொள்ளையர்களைத் தேடும்பணியில் கூட்டரசு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. உதவி வருகிறது.

    பல அமெரிக்க மாநகரங்களைப் போலவே ஃபிலடெல்பியாவில் கடந்த ஓராண்டாக வன் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

    தெற்கு ஃபிலடெல்பியாவில் உள்ள எஃப்.டி.ஆர். பூங்காவில் தனது 2017 அக்யூரா எம்.டி.எக்ஸ். காரை நோக்கி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார் மேரி. அப்போது பின்னால் இருந்து வந்த எஸ்.யு.வி. வகை கார் ஒன்றில் இருந்த இரண்டு ஆண் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி அவரது கார் சாவியைப் பறித்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பினர் என்கிறது அவரது அலுவலகம். ஃபிலடெல்பியாவில் கார் பறிப்புச் சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2019ல் 225 கார் பறிப்பும், 2020ல் 409 கார் பறிப்பும் நடந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 720 கார் பறிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசை மேற்கோள் காட்டி சொல்கிறது சிபிஎஸ் நியூஸ்.

  3. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், விளையாட்டு, சினிமா போன்ற துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், விஷ்ணுப்பிரியா ராஜசேகர், ஜோ மகேஸ்வரன்.எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனியதாகட்டும்.