ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்க அடையாளத்தைத் தெரியாமல் வைத்திருக்க முடியாது. அதைத் தவிர்த்திருக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு இதில் தொடர்பிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரானாரின் நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பதிலளித்த சீமான், அன்புமணியின் கடிதத்தில் இருக்கும் வலியின் உண்மைத் தன்மையை மறுக்க முடியாது என்று கூறினார்.
"அந்தோணிசாமி என்பவர்தான் உதவி ஆய்வாளர். எல்லோருக்கும் உண்மைப் பெயரை வைத்துவிட்டு, இவர் பெயரை மட்டும் ஏன் மாற்றினீர்கள் என அன்புமணி கேட்கிறார்.அந்த நடிகர் பேசும்போது பின்னால் வன்னியர் சங்க அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது. அது வன்னியர் சங்க அடையாளம் என உலகத்திற்கே தெரியும். அதைத் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் என் கருத்து," என்றார் சீமான்
"நான் படம் பார்க்கும்போது எனக்கு இதெல்லாம் தோன்றவில்லை. காட்சியிலும் கதாபாத்திரங்களிலும் மூழ்கிவிட்டேன். இவர்கள் சொன்னதுக்குப் பிறகுதான் தெரிகிறது. இல்லாவிட்டால் அப்போதே இதை எடுத்துவிடலாம் என தம்பியிடம் சொல்லியிருப்பேன்., என்றார் சீமான்.இப்போது அதை மாற்றி லட்சுமி, சரஸ்வதி படத்தை வைத்திருக்கிறார்கள். அதைத் தொடக்கத்திலேயே செய்திருக்கலாம். தவிர்த்திருக்கலாம். ஒரு சமூக வலியை வெளிப்படுத்த படத்தை எடுத்து இன்னொரு சமூகத்திற்கு வலியை, வேதனையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று அவர் கூறினார்.
எனக்குத் தெரிந்து சூர்யாவுக்கு இதில் சம்பந்தமிருக்காது. கதை கேட்டிருப்பார், நடித்திருப்பார். காட்சியின் பின்புலத்தை கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்கள்தான் பார்த்திருப்பார்கள்.
எனக்கு சிவகுமார் குடும்பத்தை நன்றாகத் தெரியும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புவார்களே தவிர, புதிதாக பிரச்னைகளை உருவாக்க நினைக்க மாட்டார்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றுதான் இருப்பார்கள். அவர் திட்டமிட்டு செய்திருக்க மாட்டார். இதற்காகஅவரை மிதிப்பது, உதைப்பது என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி பதிவுபோட்டவரை வேண்டுமானால் உதையுங்கள். அதற்கு நான் வேண்டுமானாலும் காசு தருகிறேன்" என்று தெரிவித்தார் சீமான்.