காந்தி அரையாடை விரதம் பூண்ட மதுரை மண்ணில் இன்று நான் கால்பதித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என மதுரை காந்தி அருங்காட்சியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா (87) தெரிவித்துள்ளார்.
இவர் காந்தியின் நான்காவது மகன் தேவ்தாஸ் காந்தியின் மகளாவார். காந்தி ஸ்மிரிதியின் துணைத் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கும் தர்ஷன் ஸ்மிரிதியின் தலைவராக ஒன்பது ஆண்டுகளுக்கும் இவர் பதவி வகித்துள்ளார்.காந்தி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 22ஆம் தேதி மதுரை காந்தி அருங்காட்சியகம் கொண்டாடவிருக்கிறது.
இந்த விழாவில் மகாத்மா காந்தி மற்றும் ராஜகோபாலாச்சாரியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்து கொள்கிறார்.
அதில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகை தந்து காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு எனது தாய் நிலம்.போன்றது. இங்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமன்றி காந்தி அரையாடை பூண்ட மதுரை மண்ணில் கால் பதித்து இருப்பது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது.
இந்தியாவில் வாழ்கின்ற விவசாயிகளே செயல்படும் மனிதர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒரு அடையாளமாக தன்னை மகாத்மா காந்தி வெளிப்படுத்திக் கொண்ட ஒரு தருணம் நிகழ்ந்த மண் தான் இந்த மதுரை.
ஒரு சாதாரண விவசாயி போலவே தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டார் காந்தி. தன்னுடைய வாழ்க்கையில் பலவற்றை சோதனையாகவே மேற்கொண்டு அதனையே வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆன்மிகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர் ஆனால் அதற்காக துறவறம் பூண்டு இமயமலைக்கு செல்ல விரும்பவில்லை. இந்த மக்களோடு வாழ்ந்து தாம் உணர்ந்த ஆன்மீகத்தை பரப்ப விரும்பினார்.
நமது வாழ்க்கையில் சில மனிதர்கள் தான் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்வதை நாம் உணர்ந்திருப்போம். எனது பார்வையில் அந்த சிறப்பிற்கு உரியவர்களாக காந்தியும் ராஜாஜியும் வாழ்ந்து காட்டினார்கள். தன் வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு கர்மயோகியாகவே வாழ்ந்தவர் மகாத்மா காந்தி.
ஒருபோதும் ஆன்மிகம் தொடர்பாக அவர் பேசவில்லையே தவிர ஆனால் இந்திய மக்கள் முன்பாக வாழ்ந்து காட்டினார்.
பல்வேறு வண்ண உடைகளோடு நீங்கள் வாழ்கிறீர்கள் ஆனால் உங்கள் தாத்தா காந்தி அப்படி வாழவில்லையே என்று என்னிடம் கூட சிலர் கேட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்வேன் வெள்ளை நிறம் என்பது அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியதாகும்.
அப்படி ஒரு வெண்மை நிறத்தோடு வாழ்ந்தவர் தான் மகாத்மா அவர் தந்த வண்ணங்கள் தான் இன்றைக்கு நம்மோடு இருப்பவை என்று கூறுவேன்.
மதுரை மக்கள் காந்தியின் மீதும் காந்தியத்தின் மீதும் மிகுந்த பிடிப்பு கொண்டவர்களாக இருப்பது வெளிப்பாடுதான் காந்தி அரையாடை ஏற்ற இந்த நூற்றாண்டு விழா. இதில் பங்கேற்பதை மிகுந்த பெருமையாக நான் கருதுகிறேன் என்று தாரா காந்தி கூறினார்.
புது டெல்லி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயக்குநர் அண்ணாமலை மற்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் விதூர் பரதன் காந்தி நினைவு அருங்காட்சியகம் இயக்குநர் நந்தா ராவ் காந்திய கல்வி நிறுவன முதல்வர் முனைவர் முத்துலட்சுமி ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.