நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகெங்கும் 3 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.
கடந்த மார்ச் 17-ம் தேதி ஜெர்மன் மக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிவித்த ஜெர்மனி அரசு, அடுத்த மாதம் முதல் 31 ஐரோப்பிய நாடுகளுக்கு கட்டுப்பாடுகளின்றி பயணத்தை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அத்துடன் பிரிட்டன், ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு ஜெர்மன் மக்கள் பயணிக்க அனுமதி அளிக்கும் கோப்பு அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கோடை சுற்றுலா காலம் துவங்க உள்ள நிலையில், ஜூன் 15 முதல் பயணிகளை அனுமதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தின் 75 வது ஆண்டுவிழா ராணுவ அணிவகுப்பை ரஷ்யா நடத்தும் என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் வழக்கமாக வருடா வருடம் மே 9-ம் தேதி நடத்தப்படும் இந்த ராணுவ ஒத்திகை கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த ராணுவ ஒத்திகையின் போது, மாஸ்கோவில் உள்ள சிவப்பு சதுக்கத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு நடக்கும்.
இந்தநிலையில், ஜூன் 24-ம் தேதி ராணுவ அணிவகுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு புதின் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் கிட்டதட்ட 2.5 கோடி சோவியத் மக்கள் இறந்தனர். இந்த போரின் வெற்றி தின அணிவகுப்பு சோவியத் நாடுகளுக்கு மிக முக்கியமானது.
சிங்கப்பூரில் கோவிட் 19 நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,343ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 383 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இன்று நோய் கண்டறிவதற்கான பரிசோதனை குறைந்த எண்ணிக்கையில்தான் செய்யப்பட்டது என்றும், அதனால்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அங்கு கோவிட் 19 நோய்க்கு இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். ஏனைய உலக நாடுகளைப் போன்றே சிங்கப்பூரின் பொருளாதார கட்டமைப்பும் அண்மைய சில மாதங்களில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவி கியட் இதனை அறிவித்துள்ளார். வேலைகள், பயிற்சித் தொகுப்புத் திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் வேலைகளும் 25 ஆயிரம் பயிற்சித் திட்டங்களும் 30 ஆயிரம் திறன் பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
தொகுப்புத் திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் புதிய வேலைகளை பொதுத் துறை ஏற்படுத்தும் என்றும், அரசாங்க அமைப்புகள் வர்த்தகங்களுடன் இணைந்து பணியாற்றி 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் துணைப் பிரதமர் அறிவித்ததாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நியூயார்க் பங்குசந்தை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் பங்குசந்தையின் வர்த்தக தளம் வழக்கமானதை போல காட்சியளிக்காது என்கிறார் அதன் தலைவர் ஸ்டேசி கன்னிங்ஹாம்.
வர்த்தகர்கள் கூட்டமாக கூடி கத்துவதை போல அல்லாமல், இனி வெகு சில வர்த்தகர்களே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மாஸ்க் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் அவர்.
மே 25-ம் தேதி மாலை சென்னையில் இருந்து கோவை சென்ற 6E 381 இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என கோவை விமான நிலைய மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் இதுவரையான தரவுகளின் அடிப்படையில், இன்று மாலை வரை 1278 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் இன்றைய தினமே பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இன்று ஒரே நாளில் 96 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானோர் குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, குவைத் நாட்டிலிருந்து வருகைத் தந்த 88 பேரும், கடற்படையைச் சேர்ந்த 8 பேரும் இன்று அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்தியாவில் உள்நாட்டு விமான பயணம் நேற்று முதல் துவங்கியது. இந்நிலையில் நேற்று (மே 25) நள்ளிரவு வரை இயக்கப்பட்ட 832 விமானங்களில் 58,318 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும் இன்று (மே 26) மாலை 5 மணிவரை இயக்கப்பட்ட 608 விமானங்களில் 41,673 பயணிகள் பயணித்துள்ளானர் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மருந்தை இனி கவனமாகப் பயன்படுத்த இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் 19 நோய்க்கான முழுமையான சிகிச்சை முறையை கண்டறிவதற்கான சோதனை முயற்சியில் இந்த மருந்து பயன்படுத்தப்படுவது நீடிக்கும் என டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
"அந்த மருந்தை உட்கொள்ளும்போது பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் இந்தப் பக்க விளைவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். எனவே இதை உட்கொள்பவர் மருத்துவர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவது அவசியம்," என்றார் நூர் ஹிஷாம்.
தற்போதைய நிலவரப்படி கோவிட் 19 நோய் கண்டவர்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஏனெனில் அந்நோயாளிகள் மூன்று, நான்காம் கட்டங்களை அடைந்துவிடாத வகையில் இம்மருந்து தடுப்பதாக அவர் விவரித்தார்.
குறிப்பிட்ட உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு இம்மருந்து கடும் பக்க விளைவுகளை, குறிப்பாக இருதய செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய தகவல்களின் பேரில் மலேசியா இம்மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்குமா என்று நூர் ஹிஷாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்தே இம்மருந்தை கவனத்துடன் பயன்படுத்தப் போவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இன்று ஒரே நாளில் மலேசியாவில் புதிதாக 187 பேருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,604 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 115 ஆக நீடிக்கிறது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 'ஒரு வாய்ப்பாக' கருதி சில முடிவுகளை எடுக்கிறதா பாஜக அரசு? மோதி அரசின் 20 லட்சம் கோடிஇந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துமா? - பொருளியல் துறை பேராசிரியர் ஜோதி சிவஞானம் என்ன சொல்கிறார்?
மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.
இதன்படி, குறித்த நாடுகளில் கொரோனா வைரஸ் எவ்வாறான விதத்தில் பரவுகின்றது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிடுகின்றது.
போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலான வழிகாட்டியொன்றை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி, மிக முக்கியமான இரண்டு கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தென் ஆபிரிக்காவிற்கு எதிரான ஒரு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும், இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிடுகின்றது.
"முடக்கநிலை அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் மட்டுமே ஆனது. ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகின்றன. இதுவே இந்த முடக்கநிலையின் வெற்றி," என பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. தற்போது முடக்கநிலையைத் தளர்த்தும்போது அதையும் எதிர்க்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி இரட்டை நாக்கில் பேசுகிறது, என்று அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 646 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒன்பது நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்த ஒன்பது நபர்களும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தில் பெண்களைவிட ஆண்களே அதிகம் இறப்புகளுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இன்று இறந்த ஒன்பது நபர்களில் நான்கு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் அடங்குவர். மேலும் இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இன்று பாதிப்புக்கு உள்ளான 646 நபர்களில் 54 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா,மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் துபாயில் இருந்து வந்த 54 நபர்களுக்கு தொற்று உறுதியானதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 68 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில், இதுவரை 4,31,739 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 10,289 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 611 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,342ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், 5,906 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து தானாக முன்வந்து வழக்கு விசாரணை செய்த உச்சநீதிமன்றம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் தவறிவிட்டன என கூறியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயண, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை இலவசமாக வழங்க மத்திய அரசும் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனையை தீர்க்க ஒருங்கிணைந்த மற்றும் தெளிவான நடவடிக்கை தேவை எனவும் கூறிய நீதிமன்றம், வியாழக்கிழமையன்று பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்து மருத்துவமனைகளில் தற்போது ஒரே ஒரு கொரோனா நோயாளி மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு இப்போது 22 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது.
ஐம்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் 1500 பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளது. 21 பேர் இறந்துள்ளனர்.
மே மாதம் பெரும்பாலான நாட்களில் புதிய தொற்று எதுவும் ஏற்படாத நிலையில்,’’ கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுத்துவிட்டோம்’’ என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமூக முடக்கத்தை அந்நாடு நீக்கியுள்ள நிலையில், தனது எல்லைகளை திறக்கும் போது முக்கிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 174 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,807 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 8,915 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 362,342 பேருக்கு அங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 131,129 பேர் குணமடைந்துள்ளனர்.
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துதல் விதிகளை மீறியதால் 27 வயது இளைஞருக்கு நான்கு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இதுபோல தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை.
கிம் என அறியப்படும் அந்த நபர், சொல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு இரண்டு வாரங்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியே வந்ததால், அவர் பிடிக்கப்பட்டு கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார். ஆனால், அங்கிருந்தும் வெளியேற முயற்சித்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
தென் கொரியாவில் தனிமைப்படுத்தும் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறியவர்களை கண்காணிக்க அவர்களது கையில் எலட்ரானிக் கருவியை அணிந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 17 பேர் இக்கருவியை அணிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் கீழ் இந்தியாவில் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் தூத்துக்குடி-சென்னை இடையிலான விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் இன்று பகல் தூத்துக்குடி வந்தடைந்தது.
இதில் வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்ட சுகாதார துறையினர் சார்பில் பயணிகளுக்கு கபசுர குடிநீர் பொடியை அதிகாரிகள் வழங்கினர்.
மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கக்கோரி கைகளில் அழியாத மை மூலம் சீலிட்டு அனுப்பினர்.