புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மூங்கித்தான்பட்டி டாஸ்மாக் கடையில் கடந்த 16ம் தேதி திருமயத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன், ராமச்சந்திரன், சந்தோஷ் குமார் ஆகிய நால்வரும் திருமயம் அருகே உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளனர்.
மதுக்கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஒன்பது தாள்களைக் கொடுத்து மது பாட்டிலை வாங்கியுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடை விற்பனையாளர் சந்தேகம் அடைந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் நான்கு பேரையும் திருமயம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலிசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகளை அச்சிட்ட முக்கிய குற்றவாளியான நாகர்கோயிலை சேர்ந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவரின் வீட்டில் இருந்து 65 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய ஒரு கம்ப்யூட்டர், ஒரு மடிக்கணினி, ஒரு பிரிண்டர் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கை விசாரணை செய்த போலிஸ் அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில் சுரேஷ், மணிகண்டன், ராமச்சந்திரன், சந்தோஷ்குமார் ஆகிய நால்வரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்தது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஊரடங்கு காரணமாக செலவுக்கு பணம் இல்லாததால் கள்ளநோட்டு அச்சடித்தனர் என்று தெரிவித்தார்.