தமிழகத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - சென்னையில் நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் ஒருலட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

    இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1,01,539பேர் இந்தியா முழுவதும்கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றைய எண்ணிக்கையை விட இன்று கூடுதலாக 4,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 134 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3163 ஆக உள்ளது.

  2. நேற்றைய முக்கிய நிகழ்வுகள்

    • பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அறிவித்திருந்தன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என கத்தார் அறிவித்துள்ள நிலையில், அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.
    • மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் புதிதாக 2033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • சென்னையில் கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது.
    • வரும் மே 31-ஆம் தேதி வரை, இந்திய அரசு நான்காவது முறையாக சமூக முடக்கத்தை நீடித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    • கொரோனாவை வெற்றிகரமாக வியட்நாமில் மதுபான கூடங்கள், திரையரங்குகள் மற்றும் ஸ்பாக்களை திறக்கப்பட்டுள்ளன.
    • கொரோனா வைரஸ் ஜப்பானில் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் 2015க்கு பிறகு முதல் முறையாக பொருளாதார மந்தநிலையை ஜப்பான் சந்தித்துள்ளது.
    • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2021ஆம் ஆண்டுவரை மீட்க இயலாது என அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவர் எச்சரித்திருந்தார்.
  3. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் நந்தக்குமார் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.