மீண்டும் திறக்கப்பட்ட உணவுவிடுதிகள், காஃபி ஷாப்கள் - மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியர்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல், உணவுகளுக்கு பப்களும் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மதுபான விடுதிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் இன்னமும் கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிக மக்கள்தொகை உள்ள நகரான சிட்னியில் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் சிட்னியில் உள்ள அனைத்து விடுதிகளும் இன்று திறக்கப்படவில்லை.
மேலும் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்களில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துவந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இதுவரை ஆஸ்திரேலியாவில் 100க்கும் குறைவான மரணங்களே பதிவாகியுள்ளன.


