You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் புதிதாக 447 பேருக்கு தொற்று - அண்மைய தகவல்கள்

ஜூன் 30-ம் தேதி வரை வழக்கமான ரயில்களில் பயணம் செய்வதற்காக செய்யப்பட்ட எல்லா முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. லாரியில் சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் 8 பேர் விபத்தில் பலி, 50 பேர் காயம்

    லாரியில் ஏறி சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 8 பேர் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.

    மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற லாரியும் ஒரு பஸ்சும் மோதிக்கொண்டன.

    மத்தியப் பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் உள்ள கண்டோன்மென்ட் காவல்நிலையப் பகுதியில் புதன்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது.

    இந்த விபத்தில் உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

  2. கோவிட்-19: இந்தியாவில் 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,722 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், நோய்த்தொற்று பாதிப்பினால் 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம், இந்தியா முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,549ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,235ஆக உள்ளது.

  3. கொரோனாவின் இரண்டாம் அலை - இனி என்னாகும்?

    உலகுக்கு அடுத்த அதிர்ச்சி : கொரோனாவின் இரண்டாம் அலை - இனி என்னாகும்?

  4. உலக சுகாதார நிறுவனத்தின் புதிய எச்சரிக்கை கூறுவது என்ன?

    “கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார்.

    ஒருவேளை கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டாலும், அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு “பெரும் முயற்சிகள்” தேவைப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    சமீபத்திய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    “நமது சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பரவி வரும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறலாம். மேலும், இது முற்றிலும் அழிய கூடிய நிலையை அடையாமலும் இருக்கலாம்” என்று காணொளி வாயிலாக ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மைக் ரையன் கூறினார்.

    “எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம்.”

    “கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்” என்பதை கணிப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

  5. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முன்னர் நேற்றைய முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    • பிஎம் கேர் நிவாரண நிதி திறட்டப்பட்டதில் கோவிட் 19 தொற்றுக்கு எதிராக போராட 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த 3,100 கோடியில், சுமார் 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்க ஒதுக்கப்படும்.
    • கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மக்களுக்கான பொருளாதார உதவித் தொகுப்பு குறித்த விவரங்களை நேற்று நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
    • ஆயிரக்கணக்கான ஏழைகள், பசியால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான எந்த நிவாரணமும், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    • கோயம்பேடு வியாபாரிகள், அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால்தான் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தில் நேற்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000த்தை கடந்துள்ளது.
    • உலகளவில் இதுவரை 42 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது.
  6. வணக்கம் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து சாய்ராம் ஜெயராமன் மற்றும் சிவக்குமார் உலகநாதன் தொகுத்து வழங்குகிறோம்.

    கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.