1. இன்று மதிய நிலவரப்படி, சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,16,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 282,872 ஆக உள்ளது, 14,180,17 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 79,528 பேரும், பிரிட்டனில் 31,930 பேரும் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 44,029 ஆகிடிவ் நோயாளிகள் உள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறுகிறது.
2. நாடு தழுவிய ஊரடங்கு மே 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை 3 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனையை தொடங்கினார்.
இதில் கொரோனா வைரஸ் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக சமூக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படலாம்.
3. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையைத் துவங்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிறப்பு சேவையாக இயக்கப்படும் இந்த ரயில்கள், டெல்லியில் இருந்து ஹெளரா, பாட்னா, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு வழிதடத்திற்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது.
4. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையில் புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. அந்த வகையில், இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் மக்கள் வழக்கம்போல் வீடுகளை விட்டு வெளியே செல்ல தொடங்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அது போல ஆஸ்திரேலியாவிலும் சமூக முடக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வணிக வளாகங்களில் திரண்டுள்ளனர். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது அங்கு கவலையை எழுப்பி உள்ளது.
5. கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இன்று முதல் முடக்க நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன. பிரான்சில் இன்று முதல் குறைந்த மாணவர்களுடன் தொடக்கப் பள்ளிகள் இயங்க உள்ளன. துணிக்கடைகள், புத்தகக் கடைகள், முடித்திருத்தகங்கள், பூக்கடைகள் உள்ளிட்டவையும் இன்று முதல் செயல்படவுள்ளன. ஆனால், உணவகங்கள், திரையரங்குகள், மதுபான விடுதிகள் மீதான தடை நீடிக்கிறது.
6. இலங்கையில் இன்று முதல் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இதன் மூலம், கடைகள் மட்டுமின்றி, சில கட்டுப்பாடுகளுடன் பேருந்து சேவைகளுடன் தொடங்குகின்றன.