You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக தோன்றிய சீனாவின் வுஹான் நகரில் புதிதாக 5 பேருக்கு கோவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் வட கிழக்கு பகுதியான சூலான் நகரில் புதிதாக தொற்றுகள் கண்டறியப்படுவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி பிபிசி நேயர்களே
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ்: இன்று என்னவெல்லாம் நடந்தது - சில தகவல்கள்
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,37,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 283,526 ஆக உள்ளது, 14,242,30 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 79,607 பேரும், பிரிட்டனில் 32,140 பேரும் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1559 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44,029 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 20,917 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்கிறார் அவர். இந்தியாவில் குணமடைபவர்களின் விகிதம் 31.15% என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கிறார்.
தமிழகத்தில் புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளதால், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது.இன்று 789 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 538 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கையை இலங்கை அரசு இன்று (மே 11) தொடங்கியுள்ளது
கோவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இடைக்கிடை தளர்த்தப்பட்டாலும், ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமலில் வைக்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் கொரோனா அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று முதல் தளர்த்தப்பட்டது..
மலேசியாவில் இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,726 ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,882 ஆகியுள்ளது.இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் 19 நோயாளிகளில் இருவர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். இதன் மூலம் வைரஸ் தொற்றியோரில் 90 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையில் புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. அந்த வகையில், இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் மக்கள் வழக்கம்போல் வீடுகளை விட்டு வெளியே செல்ல தொடங்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல ஆஸ்திரேலியாவிலும் சமூக முடக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வணிக வளாகங்களில் திரண்டுள்ளனர். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது அங்கு கவலையை எழுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் இன்றைய நிலவரம்
’ஆயிரம் கோடி தேவை’: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்
தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக முன்னர் கேட்டிருந்த ரூ.2000 கோடி மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.1,000கோடியை விரைவாக தரவேண்டும் என பிரதமருடனான ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர், நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த நிதியை விரைந்து கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பேசிய காணொளி ஆலோசனை சந்திப்பில், நடப்பு நிதியாண்டில் 33% தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும் என்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையால், தமிழகத்தில் உயிரிழப்பு 0.67% ஆக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27% பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 37 அரசு பரிசோதனை மையங்களும் 17 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன என்றும் இந்த மையங்களின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 13 ஆயிரம் சோதனைகள் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு அதிக எண்ணிக்கையிலான பிசிஆர்(PCR) கிட்டுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளதால், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது.
இன்று 789 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 538 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புள்ள மாவட்டங்களாக சென்னை(538), செங்கல்பட்டு(90), திருவள்ளுர்(97) உள்ள நிலையில், பிற மாவட்டங்களில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமாரி, பெரம்பலூர், ராணிப்பேட்டைவேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு ஆறு நபர்கள் பலியாகியுள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 92 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,051ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்ய 2,43,952 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் 11,584மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் இல்லை என்றும் பிற இடங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பார்சல் தரும் உணவகங்கள், டீ கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தனிக்கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். இருந்தபோதும், விற்பனை மந்தமாக இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை நகரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளதால், திருமழிசை பகுதியில் தற்காலிக சந்தை இயங்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் காய்கறிகளின் விலை கட்டுப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகள், கண்காட்சி வளாகங்கள் தற்காலிக முகாம்களில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
"என்னுடைய ரயில் எப்போது வரும்?", சென்னை சென்ட்ரலில் கூடும் கூட்டம்
வெளிமாநில தொழிலாளர்கள் ரயில்களுக்காக பதிவுசெய்து, டிக்கெட் கிடைத்தவுடன்தான் வரவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தாலும் ஊர் செல்லும் பரிதவிப்போடு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொழிலாளர்கள் வருவது தொடர்ந்தபடியே இருக்கிறது.
தென்னக ரயில்வேயின் தலைமையகத்திற்கு வெளியில் ஒரு அழுக்குப் பையோடு 40 டிகிரி வெயிலில் உட்கார்ந்திருக்கிறார் 26 வயது தீபக் பந்திர். பிஹார் மாநிலம் பட்னாவிலிருந்து சிறிது தூரத்திலிருக்கிறது இவரது கிராமம். திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அத்திப்பட்டு புதுநகரில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தார் தீபக். ஊரடங்கினால் வேலை போன பிறகு, இத்தனை நாட்களாக ஏதோ கையில் இருந்த காசை வைத்து சமாளித்திருக்கிறார். பிறகு பிஹாருக்கு ரயில் செல்வதாகத் தெரிந்தததும் இதற்காகப் பதிவும் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை.
சிங்கப்பூர் நிலவரம்
சிங்கப்பூரில் அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் - சமூக இடைவெளி விட வேண்டும் என்ற விதிமுறையை மீறியவர்களுக்கு சுமார் 16,000 ரூபாய் அபராதமாக விதிப்பு.
தன் வாயாலயே சிக்கிய திருத்தணிகாசலம்-நடந்தது என்ன?
ஆரம்பத்தில் சிறிய வேலைகளைச் செய்துவந்த அவர், 2000 ஆம் ஆண்டுக்கு சற்று முன்பே தன்னை ஒரு பாரம்பரிய பச்சிலை வைத்தியராக அறிவித்துக்கொள்ளத் துவங்கினார். அந்த காலகட்டத்தில் எய்ட்சிற்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூறிவந்தார்.
மாநில அரசுக்கு கூடுதல் சுதந்திரம் - கேரள முதல்வர்
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான பிரச்சனையை எதிர்கொள்கிறது. அதனால் சமூக முடக்க விவகாரத்தில் தேவையான முடிவுகளை எடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் சுதந்திரம் தர வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில முதல்வர்கள் காணொளி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா?, இந்தக் கட்டுரை உங்களுக்கானது
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?
எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.
சமூக முடக்கத்தால் என்ன பயன்?- கேள்வி எழுப்பிய மம்தா
மாநில எல்லைகளை திறந்துவிட்டீர்கள், ரயில் சேவையை திறந்துவிட்டீர்கள் மற்றும் விமான நிலையங்களையும் திறந்துவிட்டீர்கள். பின் சமூக முடக்கத்தை தொடர்வதில் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
இரான் விமான நிறுவனம் பல நாடுகளுக்கு கொரோனாவை பரப்பியதா?
ரயில் போக்குவரத்து - எதிர்க்கும் மாநில முதல்வர்கள்
குறிப்பிட்ட சில ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்து, முன் பதிவையும் தொடங்கி உள்ள சூழலில், சில மாநில முதல்வர்கள் ரயில் போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநிலங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டாம் என மாநில முதல்வர்கள் காணொளி ஆலோசனை கூட்டத்தில் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.
அது போல சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கூறி உள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஒரே நாளில் தமிழ்நாட்டில் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 798 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002ஆக அதிகரித்துள்ளது.
கொரரோனா வைரஸ்: சில முக்கிய தகவல்கள்
விரைவாக இயல்புக்கு திரும்புவது சாத்தியமில்லை
விரைவாக இயல்புக்கு திரும்புவது சாத்தியமில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டுருவாக்குவதற்கான திட்டம் என்று அழைக்கப்படும் 50 பக்க திட்டத்தை வெளியிட்டு இவ்வாறாக பேசினார்.
இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது?
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்க சட்டமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதேவேளை, சில பகுதிகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டன.
இலங்கை வரலாற்றில் மக்கள் இன்று வரையான காலம்வரை இவ்வாறு முடங்கியிருக்கவில்லை என மூத்த தமிழ் ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இரவு 7 மணிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்திக்கிறார்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து விவரிக்க இருக்கிறார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.
இரண்டாவது முறையாக பரவும் கொரோனா; அதிர்ச்சியில் நாடுகள்