"தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதால், கொரோனா நோயினைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, காவல்துறை உள்ளிட்டோரின் 40 நாள் கடும் உழைப்பை வீணாகிவிடும்," என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சியில் உள்ள அவரது வீட்டின் வெளியே, குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை செய்வதைத் தவிர்த்து, தேவையில்லாத விஷயங்களைச் செய்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தவறான ஒன்று.
கடந்த 40 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பாடுபட்ட அனைத்து காரியங்களும், இதுபோன்ற காரியங்களால் வீணாகிவிடும்.
மது விற்பனை செய்வதினால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமில்லாமல், குடும்ப வன்முறை அதிகரிக்கும். கேரள மாநில அரசு மதுக்கடைகள் திறக்கக் கூடாதென்ற முடிவில் இருக்கிறார்கள், இதுவரையில் மதுக்கடைகள் திறப்பது குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை .
ஆனால் தமிழக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு கொரோனா தடுப்பிற்கு உதவ எந்தவொரு நிதியுதவியும் அளிக்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பிலும் கண்டம் தெரிவித்து வருகிறோம். ஆனால் ஆளும் அதிமுக மத்திய அரசிற்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இதுகுறித்து அமைதியாக இருப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.