You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா: “வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர கடற்படை கப்பல்கள் தயார்”

கொரோனா தொற்றால் இதுவரை உலகில் 2 லட்சத்து, 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து உலக அளவில் 10 லட்சம் குணமாகியுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஒரே பாதுகாப்பு உடையை மீண்டும் அணிய வற்புறுத்தப்படும் கென்ய சுகாதார பணியாளர்கள்

    கென்யாவில் உள்ள பெரும்பாலான சுகாதார பணியாளர்கள், ஒரே பாதுகாப்பு உடையை மீண்டும் அணிய வற்புறுத்தப்படுவதாக கென்யாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பாலான சுகாதார பணியாளர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை அரசு சரிவர அளிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

    அந்த நாட்டில் 17.8 % விழுக்காட்டினருக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. ஸ்பெயினில் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கிறது

    ஸ்பெயினில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,824-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் அங்கு 268 பேர் வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

    அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 1781 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் பொது முடக்க நிலையை நான்கு கட்டங்களாக தளர்த்தப் போவதாகவும், வரும் ஜுன் இறுதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விடும் எனவும் ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தது.

  3. ”கோமாளிகளுக்கு உதவி செய்யுங்கள்”

    மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் சாலையோர கலைஞர்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் கலைஞர்கள் பலர் இணைந்து வியாழனன்று அரசிடம் நிதியுதவி கேட்டு போராட்டம் நடத்தினர்.

    கொரோனா ஊரடங்கால் அவர்கள் அன்றாட வேலை தடைபட்டு இருப்பதால் இந்த போராட்டம் நடைபெற்றது.

    ”கோமாளிகளுக்கு உதவி செய்யுங்கள்” என்பது அவர்களின் முழக்கத்தில் ஒன்றாக இருந்தது.

    இதுபோன்ற கலைஞர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் அளிப்பது அல்லது ஏதாவது விழாவில் மகிழ்விப்பது போன்றவற்றை சார்ந்தே வாழ்கின்றனர். ஆனால் இந்த தொற்று காரணமாக விழாக்கள் ஏதும் நடைபெறுவதில்லை.

    ஆனால் மெக்சிகோவில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியேறுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுப்பட்ட கலைஞர்கள் தாங்கள் வழக்கமாக நிகழ்ச்சியில் அணிந்துகொள்ளும் உடையை அணிந்திருந்தனர்.

  4. போராளிகளின் கூட்டு முயற்சியால் கோவிட்-19-ஐ வென்ற ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 230 நபர்களில், 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.ஒருவர் மரணமடைந்துள்ளார். இதன் மூலம் கொரோனா தொற்று அற்ற மாவட்டமாக ஈரோடு உருவாகியுள்ளது. எது எப்படி சாத்தியமானது?

  5. டென்மார்க் - குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அனுமதி

    இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் மூலம், ஊரடங்கு விதிகளைத் தளர்த்தத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடான டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் ஒட்டுமொத்தமாக இதுவரை தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டென்மார்க்கில் இப்போது சிறு வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும் முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் பிற சிறு தொழில் நிறுவனங்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  6. கொரோனா வைரஸுக்கு பிளாஸ்மா சிகிச்சை தீர்வளிக்குமா?

  7. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று 17 ஆயிரத்தை கடந்தது

    சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 932 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

    6 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக கொரோனா தொற்றுகள் நாடாக உருவெடுத்துள்ளது.

    சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள்தான் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர்.

    கொரோனா தொற்றின் தீவிரத்தை சிங்கப்பூர் அரசு குறைவாக மதிப்பிட்டதே, இந்த அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் உருவாக காரணம் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  8. கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் நடப்பது என்ன? (காணொலி)

  9. கொரோனாவிலிருந்து அதிகம் குணமானவர்களை கொண்டிருக்கும் டாப்-5 நாடுகள்

    ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழக தரவுகளின்படி, உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகளை கீழே காணலாம்:

    1.அமெரிக்கா -1,53,947 (மொத்த தொற்றுகள்- 10,70,026 )

    2.ஜெர்மனி- 123,500 (மொத்த தொற்றுகள்- 1,63,009 )

    3. ஸ்பெயின் -1,12,050 (மொத்த தொற்றுகள்- 2,13,435 )

    4. சீனா - 78,523 (மொத்த தொற்றுகள்- 83,956 )

    5. இத்தாலி- 75,945 (மொத்த தொற்றுகள்- 2,05,463 )

  10. ரஷ்யா பிரதமருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    ரஷ்ய பிரதமர் மிஷுஷ்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் புதினுடன் வீடியோ கால் மூலம் பேசிய மிஷுஷ்டின் இந்த தகவலை உறுதி செய்தார்.

    தற்போது அவர் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்படைந்த முதல் அரசியல் தலைவராக மிஷுஷ்டின் மாறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம்தான் அவருக்கு ரஷ்ய பிரதமர் அளிக்கப்பட்டது.

    ‘’கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று மக்களிடம் தொடர்ந்து கூறிக் கொண்டு இருக்கிறேன். எனவே மக்கள் இதனை மனதில் கொண்டு, வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.’’ என ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ரஷ்யாவில் நேற்று மட்டும் 7,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

  11. கோவிட்-19 தொற்றால் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த குடும்பம்

    தூத்துக்குடியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த முதியவர் ஒருவர், மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். இது எப்படி நிகழ்ந்தது?

  12. மகராஷ்டிராவில் நேற்று 27 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

    மகராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதமானது 4.37 % விழுக்காடாக உள்ளது.

    தற்போது வரை அந்த மாநிலத்தில் மொத்தம் 10498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 459-ஆக உள்ளது.

  13. கொரோமா தடுப்பு மருந்து: இந்தியாவின் பங்கு என்ன?

    உலக அளவில் தடுப்பு மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்யும் அரை டஜன் நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன. அப்படியென்றால் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக நாடுகள் இந்தியாவிடம் தான் காத்துக் கிடக்க வேண்டுமா?

    இந்த செய்தியை காணொலி வடிவில் பார்க்க:

  14. மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    சென்னையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 14 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் என்பவர் , கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.

    மேலும் அவரின் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.

    இந்நிலையில் சைமனின் உடலை அடக்கம் செய்யாவிடாமல் தடுத்த ஒரு பெண் உட்பட 14 நபர்களை கைது செய்த அண்ணாநகர் காவல் நிலைய அதிகாரிகள், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சைமனின் மரணத்திற்கு பின்னர், கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது

  15. கொரோனா: ஆந்திர மாநிலத்தில் நிலவரம் என்ன?

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.

    இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1463-ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33-ஆக உள்ளது.

  16. ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களை மீட்க சிறப்பு ரயில்

    தெலங்கானா மாநிலத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில், இன்று காலை ஹைதராபாத்திலிருந்து கிளம்பியுள்ளது.

    சம்மந்தப்பட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால், இது போன்ற மீட்பு ரயில்களை இயக்க ஆவண செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  17. ’’வட சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் தொற்று அதிகரிக்கிறது ‘’

    வடசென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், கொரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    கட்டுப்பாடு மண்டலங்கள் என அறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ’’முதியவர்கள் வெளியிடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு செய்துவருகிறோம். கடந்த 28 நாட்களாக தொடர்ந்து புதிதாக நோய் தொற்று இல்லாத மண்டலங்களை கண்காணித்து, கட்டுப்பாடு மண்டலங்கள் பட்டியலில் இருந்து அவை நீக்கப்படும்.’’ என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

  18. ’கொரோனா உச்சத்தை பிரிட்டன் கடந்து விட்டது’ - போரிஸ் ஜான்சன்

    கொரோனா வைரஸின் உச்சத்தை பிரிட்டன் கடந்து விட்டது என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகளை எப்படி தொடங்குவது என்பது குறித்த விரிவான திட்டத்தை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    தற்போது வரை பிரிட்டன் சுமார் 26,771 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 1,71,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  19. தெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும் இலங்கை மாணவர்கள்

    தெற்காசிய நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கை மாணவர்களை மீட்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக கடந்த 10 நாட்களில் 1065 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான 9 விமானங்கள் மூலம் இந்த மாணவர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படும் மாணவர்கள் குறித்து கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு பேசியது.

    ’’இலங்கைக்கு அழைத்து வரப்படும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதன் பின்னரே நாட்டிற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்’’ என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

  20. மீண்டும் சீனா மீது குற்றம்சாட்டும் டிரம்ப்

    கொரோனா வைரஸ் தொடர்பாக மீண்டும் சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தை விமர்சனம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

    ’’ சீனாவின் ஆய்வுக்கூடங்களில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன்.’’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், சீனாவின் கொள்கை பரப்பாளர் போல செயல்படுவதற்கு உலக சுகாதார நிறுவனம் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

    முன்னதாக, கொரோனா வைரஸ் மனிதர்களாலோ அல்லது மரபணு மாற்றம் மூலமாகவோ உருவாகவில்லை என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.