You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவது எப்போது?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ் :இன்று நடந்தவை - சில முக்கிய தகவல்கள்

    • வியட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட கொரோனாவால் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
    • கொரோனா தடுப்பு மற்றும் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினர்.
    • இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1008ஆக அதிகரித்துள்ளது. 22,982 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,797 பேர் குணமடைந்துள்ளனர்.
    • கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
    • கொரோனா தொற்று காரணமாக உலகில் சரி பாதி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 3,55,603 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3,36,426 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  3. இந்திய பொருளாதாரத்தை காக்க மே 3க்கு பின் அரசு என்ன செய்ய போகிறது? #BBCExclusive

    இந்திய பொருளாதார சரிவை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியவற்றை தொகுத்து கட்டுரை வடிவில் வழங்குகிறோம்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கையில் பணப்புழக்கம் இருக்க வேண்டும் எனும் நோக்கில் பொருளாதார உதவிகளை கொண்ட தொகுப்பு ஒன்றை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.

    பொருளாதாரத்தில் உண்டாகி உள்ள பாதிப்புகளை சரி செய்யவும் பொருளாதார சரிவு காரணமாக உண்டாகி உள்ள வீழ்ச்சியிலிருந்து மீளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசின் உதவி எப்போது கிடைக்கும்? இந்த உதவித்தொகை எப்பொழுது வெளியாகும்? பண உதவி தேவைப்படுபவர்களுக்கு எப்பொழுது சென்று சேரும்? என்பது குறித்து அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

  4. குணமடைந்த 94 வயது மூதாட்டி

    கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 94 வயது மூதாட்டி குணமடைந்து இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

    குணமடைந்த மூதாட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரூர் அரசு மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  5. தாத்தா - பாட்டியைக் கட்டியணைக்கலாம்

    சுவிட்சர்லாந்து நாட்டில் பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தங்களது வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளை கட்டிப்பிடிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்த அறிவுறுத்தலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    பத்து வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர்கள் முதியவர்களுக்கு கொரோனா வைரஸை பரப்புவதில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனினும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இடையேயான சந்திப்பு குறுகிய நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது.

  6. பிரதமர், அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு

    மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினி-பிசாவுவின் பிரதமர் நூனோ கோம்ஸ் நபியாம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவருக்கு மட்டுமல்லாது அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூவருக்கும் கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

    தலைநகர் பிசாவுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

    செவ்வாயன்று அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சுமார் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறிய நாட்டில் கோவிட் 19 தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  7. நீலகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சுகாதாரத்துறையின் இன்றைய செய்திகுறிப்பில் நீலகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  8. இந்தியாவில் கல்லூரிகள் எப்போது தொடங்கும்?

    இந்தியாவில் 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் பழைய மாணவர்களுக்கும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் தொடங்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

  9. கிருஷ்ணகிரி சென்று வந்த விழுப்புரம் மருத்துவருக்கு கொரோனா

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சிவப்பு மண்டலமாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நோய்த் தொற்று இல்லாத ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்று வந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர், கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவராக பணியாற்றும் தனது மனைவியைச் சந்திக்க கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளார். சில தினங்கள் அங்கேயே தங்கிய பிறகு, கடந்த திங்கட்கிழமை அன்று விழுப்புரம் திரும்பியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து வெளி மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட காரணத்திற்காக நேற்று அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காகச் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பெற்றுக்கொண்ட புறநோயாளிகளிடம் இருந்து இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய, அவரிடம் சிகிச்சை பெற்றவர்களைப் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும், அவருடன் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பரிசோதனை செய்ததில், அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதியானது.

    ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, ஒருவர் கூட பாதிக்காத கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மருத்துவர் செல்ல எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு, "கொரோனா எதிரொலியால் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்காலம் முடிந்தபிறகு 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட மருத்துவர் கிருஷ்ணகிரி செல்வதற்கு முன்பு தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். ஆனால், விழுப்புரம் கொரோனா தொற்றின் சிவப்பு மண்டலமாக இருக்கின்ற சூழலில், அவர் வெளியே சென்றிருக்கக் கூடாது," என சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு விழுப்புரத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க அதிகம் வாய்ப்பிருப்பதால், இவர் மூலமாகக் கிருஷ்ணகிரியில் உள்ள மனைவிக்குத் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், அவரது மனைவி அரசு மருத்துவர் என்பதால் கடந்த சில நாட்களில் அவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்நோய்த் தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் வந்து சென்ற காரணத்தினால், அவரது உறவினர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

  10. கொரோனா நம் உடலுக்கு சென்றால் என்னாகும்?

    கொரோனாவைரஸ் உடலுக்குள்சென்றுஎன்ன செய்கிறது? ஏன் மரணம் கூட ஏற்படுகிறது? இதன் பின் உள்ள அறிவியல் என்ன?

  11. சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 750ஐ கடந்தது, முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ்

    தமிழ்நாட்டில் நேற்றைப் போலவே இன்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத் துறை அளித்த தகவல்களின்படி இன்று தமிழ்நாட்டில் 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 902 ஆக இருந்த நிலையில், இன்று 922ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களில் 63 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து கொரோனோவிலிருந்து குணமடைந்து 82 பேர் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,210ஆக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக இருந்த நிலையில், இன்று மேலும் இருவர் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளார். கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் கடந்த 24ஆம் தேதி உயிரிழந்த 27 வயது வாலிபருக்கு கொரோனா இருந்தது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

    இன்று நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 94 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 4 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரத்தில் 3 பேரும் திருவள்ளூரில் ஒருவரும் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பேரும் இந்நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 768 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழ்நாட்டில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டுமே நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    முன்னதாக இன்று காலை பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருகிறது. இந்தத் தடுப்புப் பணியில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தம்முடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி, தம் மாவட்டங்களில் தடுப்பு முறைகளை செயல்படுத்தியதால், நோய்ப் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்நோய் கட்டுக்குள் இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய நகரம். இங்கு குறுகலான தெருக்களில் அதிகமான மக்கள் வசிக்கின்ற பகுதியாக இருக்கின்ற காரணத்தால், கொரோனா தொற்று எளிதாக மக்களுக்குப் பரவுகிறது. அதுதான் சென்னையில் இப்போது பெருமளவில் அந்நோய் பரவுவதற்குக் காரணம்" என்று தெரிவித்திருந்தார்.

  13. சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் நபர்கள், வீடு திரும்ப நடவடிக்கை

    கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகதங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் தங்கள் வீடு திரும்ப இந்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை இப்போது தளர்த்தப்படவுள்ளது.

    ரயில் மட்டும் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பேருந்துகள் மூலம் இடம் மாற்றம் செய்யப்படுவர்.

    பேருந்துகள் முறையாக கிருமி நாசினிகளை கொண்டு சுத்தப்படுத்தவேண்டும், பயணத்தின்போது சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும், பயணம் தொடங்கும் மற்றும் முடியும் இடங்களில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்கள், அவர்களது பயணம் முடிந்த பின்னர், உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் வீடுகளிலேயோ, தேவைப்பட்டால் அரசின் தனிமைப்படுத்தல் மையங்களிலோ தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.

  14. ‘உலகின் சரிபாதி மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்’

    கொரோனா தொற்று காரணமாக உலகில் சரி பாதி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    1.5 பில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    கோவிட் 19 நோய்த்தொற்றால் உலகளவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,20,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் முறை சாரா தொழிலில் இருக்கும் நபர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதில் பலரும் சில்லறை வர்த்தகம், தயாரிப்பு மற்றும் உணவு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் ஆவர்.

    “கோடிக்கணக்கான மக்களுக்கு வருமானம் இருக்காது. வருமானம் இல்லையெனில் உணவு, பாதுகாப்பு, எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகும். உலகில் உள்ள கோடிக்கணக்கான தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளன” என்கிறார் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் இயக்குநர் கய் ரைடர்

  15. இந்தியாவில் ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1813 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1008ஆக அதிகரித்துள்ளது.

    22,982 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,797 பேர் குணமடைந்துள்ளனர்.

  16. இந்தியாவின் இறப்பு விகிதம் - அமைச்சர் விளக்கம்

    கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழக்கும் விகிதம் உலக அளவில் 7 சதவீதமாக இருந்தாலும் இந்தியாவில் அது 3 சதவீதமாக மட்டுமே உள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உயிரிழந்த நோயாளிகளில் 86% பேர் ஏற்கனவே வேறு சில உடல்நல கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

  17. சமீபத்திய நிகழ்வுகள்...

    கடந்த மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம்

    சமூக முடக்கம் வியட்நாமில் முடிவுக்கு வந்து ஒரு வாரம் ஆகி உள்ள சூழலில், சில கட்டுப்பாடுகளுடன் மெல்ல மொத்த நாடும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

    இந்திய அளவில் ஆடை தயாரிப்பில் முக்கிய நகரமாக உள்ள தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவ பாதுகாப்பு கவச உடை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,945ஆக அதிகரித்துள்ளது.

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 690 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

  18. அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா

    கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இது உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்காகும்.

  19. சிங்கப்பூரில் நிலவரம் என்ன?

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 690 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

    இதில் 8 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் என்றும், மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 15,641 ஆகும்.

    அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டதையடுத்து, நேற்று விடுதிகளில் இருப்போரிடையே அதிககிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுவரை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,128 ஆகஉள்ளது. வைரஸ்தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுகண்ட, ஆனால், வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆகும்.

  20. மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,945ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் புதிதாக 94 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்குப்பின் முழுமையாக குணமடைந்த 55 கோவிட்-19 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 4,087 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும், இது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 68.75 விழுக்காடு என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர்ஹிஷாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    தற்போது 1,758 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 40 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.