வந்துகொண்டிருக்கும் செய்தி, சுகாதார பணியாளர்களை தாக்கினால் ஏழாண்டு சிறை - இந்திய அரசு
இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பொருத்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார்.
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
நோய்தொற்று பரவல் சட்டம்,1897ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது விரைவில் அமலுக்கு வரும் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், இது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும், விமான சேவைகள் இயங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சேவைகள் தொடங்கும் முன் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்தார்