You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா: சிங்கப்பூரில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு; இந்தியாவில் அண்மைய நிலை என்ன?

செவ்வாய் காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,70,042 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'இந்தியா இஸ்லாமியர்களுக்கு சொர்க்கமாக உள்ளது' - பாஜக அமைச்சர்

    இந்தியா இஸ்லாமியர்களுக்கு சொர்க்கமாக உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான துறையின் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அவர்களது சமூக, பொருளாதார மற்றும் மத உரிமைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூறியிருந்ததற்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    இந்திய ஊடகங்களும் இஸ்லாமியர்களை எதிர்மறையான வகையில் காட்டுவதாக அந்த கூட்டமைப்பின் மனித உரிமைகள் அமைப்பு கூறியிருந்தது.

  2. புதுச்சேரியில் நாளை முதல் 'ரேபிட் டெஸ்ட் கிட்' பரிசோதனை

    கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், "மத்திய அரசிடமிருந்து ரேபிட் பரிசோதனை கருவி இன்று புதுச்சேரிக்கு வருகிறது. இது நாளை முதல் புதுச்சேரியில் பயன்படுத்தப்படும். அடுத்த இரண்டு நாட்களில் காரைக்கால், மாஹே, யானம் பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்."

    "இதுவரை புதுச்சேரியில் மூன்று நபர்கள் மட்டுமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்," எனத் தெரிவித்துள்ளார்.

  3. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தூக்கமில்லையா?

    கொரோனா பரவுவதால் ஊரடங்கு நிலை அறிவித்த பிறகு தூங்க முடியவில்லை என பலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    ஊரடங்கு உத்தரவிற்கு முன் சரியான நேரத்தில் தூங்கியவர்கள் கூட இப்போது தூக்கமின்மை பிரச்சனையால் தவித்து வருகின்றனர்.

  4. ஊரடங்கைத் தளர்த்தும் நியூசிலாந்து

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பிறகு அடுத்த வாரத்திலிருந்து ஊரடங்கு உத்தரவை தளர்த்த இருப்பதாக நியூசிலாந்து அரசு நேற்று அறிவித்தது.

    இதற்காக அந்நாடு கடைப்பிடித்த கடுமையான நடைமுறை உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது.

    நேற்று ஐந்து பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1445 ஆக உயர்ந்துள்ளது,

  5. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள், டிரம்ப்பை வலியுறுத்தும் மாகாண ஆளுநர்கள்

    ஊரடங்கை ரத்து செய்யக் கோரி அமெரிக்காவில் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ஆதரிப்பதாகவும், சமூக முடக்கத்தை விரைவாக அந்தந்த மாகாண ஆளுநர்கள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் முன்பு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.இப்படியான சூழலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த சில மாகாண ஆளுநர்கள் இந்த போராட்டங்களை டிரம்ப் ஆதரிக்க கூடாதென்றும், அமெரிக்காவில் வேகமாக கொரோனா பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர்.

  6. ஆஸ்திரேலியா: வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை கோரும் 5 லட்சம் பேர்

    ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பற்றோருக்கான நல உதவிகள் கேட்டு 517,000 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் குறைந்தது 14 லட்சம் பேர் வேலையிழக்கலாம் என கணிக்கப்பட்டு இருந்தது.மோரிசன், “கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அவை பலனளிப்பதாகவும்,” தெரிவித்துள்ளார்.

  7. உலக சுகாதார அமைபுக்கு நன்கொடை அளித்த அலிபாபா நிறுவனர்

    அலிபாபா நிறுவனர் ஜாக் மா உலக சுகாதார நிறுவனத்திற்கு 100 மில்லியன் மாஸ்குகளையும், ஒரு மில்லியன் N95 மாஸ்குகளையும், மற்றும் ஒரு மில்லியன் பரிசோதனை கருவிகளையும் நன்கொடையாக அளிக்கிறார். சீனாவை சேர்ந்த இந்த பெருங்கோடீஸ்வரர் ஆப்ரிக்காவில் உள்ள 54 நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை தானமாக அளித்திருக்கிறார்

  8. கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா?

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

    முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.

  9. இந்தியாவில் நடப்பது என்ன?

    இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    அவர் குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர் ஒருவரின் உறவினர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதனை அடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனாவில் தாக்கம் குறைந்து வருவதைத் தரவுகள் உணர்த்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதாவது கொரோனா தொற்று, எண்ணிக்கையில் இரண்டு மடங்காக 3.4 நாட்களைக் கடந்த வாரம் எடுத்துக் கொண்டது. இப்போது 7.5 நாட்களாக இது உள்ளது.

  10. "உங்க கையால் குழி தோண்டி, யார் உடலையாவது புதைத்திருக்கிறீர்களா?"

    தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    "12 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் என்பதால் ஜேசிபியை வைத்து அப்போதுதான் தோண்ட ஆரம்பித்திருந்தோம். 15 நிமிடம்கூட ஆகியிருக்காது. சுமார் 50 -60 பேர் கையில் கற்களையும் கட்டைகளையும் வைத்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள். எங்களுடன் இருந்த சுகாதார ஆய்வாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என எல்லோருமே தாக்கப்பட்டோம்" என கண்ணீருடன் நினைவுகூர்கிறார் மருத்துவர் பிரதீப்.

  11. சீனாவில் சமீப நிலவரம் என்ன?

    சீனாவில் திங்களன்று 11 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சீனா வந்தவர்கள்.

    அவர்களில் ஆறு பேர் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டவர்கள்.

  12. போலி செய்திகளை நீக்கும் ஃபேஸ்புக்

    உலக நாடுகள் விதித்துள்ள ஊரடங்கு விதிகளை மீறும் வகையில் ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஈவென்ட்டுகளை (events) அந்த சமூக வலைத்தள நிறுவனம் நீக்கி வருகிறது.

    சமூக விலகலை கடைபிடிக்க முடியாத நிகழ்வுகளுக்கு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்க முடியாது என்கிறது அந்த நிறுவனம்.

    கோவிட்-19 குறித்த போலியான தகவல்களையும் தங்கள் தளத்தில் இருந்து நீக்கி வருகிறது ஃபேஸ்புக்.

  13. கொரோனா வைரஸ்: இந்திய நிலவரம்

    இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 18,601 என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

    அவர்களில் 590 பேர் இறந்துள்ளனர்; 3251 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 14759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  14. கட்டுப்பாடுகளை நீட்டித்தது ஹாங்காங்

    கொரோனாவை எதிர்கொள்ள கட்டுபாடுகளை நீட்டித்துள்ளது ஹாங்காங்.

    கடந்த இரண்டு மாதங்களில் முதல்முறையாக திங்கட்கிழமை புதிதாக யாரும் கொரோனாவால் அங்கு பாதிக்கப்படவில்லை.

    இதுவரை அங்கு 1025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 பேர் பலியாகி உள்ளனர்.

    இப்படியான சூழலில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மே மாதம் 7 வரை நீட்டித்துள்ளது ஹாங்காங் நிர்வாகம்.

  15. குடியேற்றம் தற்காலிகமாக ரத்து: டொனால்ட் டிரம்ப்

    'கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல்' என்று அவர் கூறும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

  16. கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை

    கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கேரளம் முன்மொழிந்த கன்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை (ஊநீர் சிகிச்சை) முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    கொரோனா பரவலை ஒட்டி கேரள மாநில அரசு அமைத்த மருத்துவ நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்த குருதியியல், குருதி மாற்றியல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அவசர சிகிச்சை வல்லுநர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உலகளாவிய தொற்றாக உருப்பெற்றுள்ள கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க இந்த ஊநீர் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது.

  17. கொரோனா வைரஸ்: பரிசோதனை கூடத்திலிருந்து பரவியது என்பது உண்மையா?

    சீனாவில் வுஹானில் உள்ள ஒரு வைரஸ் ஆய்வு நிலையத்தின் உயிரி பாதுகாப்புத் தன்மை குறித்து அமெரிக்காவின் ரகசியத் தகவல் பரிமாற்ற ஆவணங்களில் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி உலகின் கவனத்தை ஈர்த்த அதே வுஹானில் தான் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.

    வுஹான் பரிசோதனை நிலையத்திலிருந்து தான் இந்த வைரஸ் வெளியாகியுள்ளது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    அப்படி ஏதும் இருந்தால் என்ன, இப்போதைய நோய்த் தொற்று பற்றி நாம் புரிந்து கொள்ள இதில் ஏதாவது இருக்கிறதா?

  18. கொரோனா வைரஸ்: சர்வதேச செய்திகள்

  19. கொரோனா வைரஸுக்கும் உருளைக்கிழங்கிற்கு வந்த லேட் பிலைட் நோய்க்கும் என்ன தொடர்பு?

    020ம் ஆண்டில் மனித இனத்திற்கு பெரிய சவாலாக கொரோனா வைரஸ் இருப்பது போலவே, 1961ல் உதகையில் விளைந்த உருளைக் கிழங்குகள் ’லேட் பிலைட்’ என்ற பூஞ்சை தொற்று நோய் தாக்கத்திற்கு ஆளானபோது, ‘நீலகிரி உருளை’ என்ற ரகமே அழியும் நிலை ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழலை உண்டாக்கியது.

    தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில், ஒவ்வொரு தாவரமும் பலவிதமான நோய்களை எதிர்த்து போராடி வளர்கின்றன. லேட் பிலைட்(Late Blight) தாக்கத்தில் இருந்து, உருளைக் கிழங்கு மீண்டுவந்தது ஒரு சாதனை என்கிறார்கள்.

    அயர்லாந்து நாட்டில் 1845ல் உருளைக் கிழங்கு சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, உணவுப்பஞ்சம் ஏற்பட்டதற்கு காரணம் இந்த லேட் பிலைட் தொற்றுநோய்தான். இந்த நோய், அயர்லாந்து குடிமக்களின் பிரதான உணவான உருளை கிழங்கை பாதித்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்கி, அண்டை நாடுகளுக்கு குடியேறும் நிலை ஏற்பட்டதால், இந்த பாதிப்பு 'ஐரிஷ் பஞ்சம்' என்ற அறியப்படுகிறது.

  20. ‘பணத்தையும் கொடுத்து பெட்ரோலையும் தருகிறது அமெரிக்கா’

    வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக (நெகடிவ்) மாறி இருக்கிறது அமெரிக்க பெட்ரோலிய எண்ணெய் விலை.

    அதாவது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு பதிலாக , எண்ணெயை எடுத்து செல்ல வாடிக்கையாளர்களுக்கு பணம் தருகிறார்கள் அமெரிக்காவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள்.

    கொரோனா காரணமாக உலகமே முடக்கப்பட்டுள்ளதால் நுகர்வானது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய்க்கான தேவையும் குறைந்திருக்கிறது.

    எண்ணெயை யாரும் வாங்காததால் அவை சேமித்து வைக்க அடுத்த மாதம் முதல் இடப் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பணத்தையும் கொடுத்து எண்ணெய்யையும் தருகிறது அமெரிக்கா.

    எரிசக்தி துறை பங்கு வர்த்தக நிபுணர் ஸ்டீவார்ட் கிளிக்மேன், “எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் நம்பிக்கை தருவதாக இல்லை,’ என்கிறார்.