பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.
ஏப்ரல் 18 பிபிசி தமிழில் வெளியான செய்திகள்
மலேசியா: மலேசியாவில் இன்று புதிதாக 54 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 5,305ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை: இலங்கையில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 முதல் சில விதிமுறைகளின் கீழ் தளர்த்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பிரிட்டன்: வரும் ஏப்ரல் 21ஆம் தேதி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் 94வது பிறந்த நாளுக்காக வழக்கமான துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறு செய்வது முறையாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மலேசியாவுக்கு உதவ சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவக்குழு ஒன்று மலேசியாவுக்கு இன்று வருகை தந்துள்ளது. சீன அரசாங்கம் அனுப்பியுள்ள இந்தக் குழுவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த எட்டு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.