You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: மலேசியாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பி உதவும் சீனா

உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,242,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,557,493 ஆக அதிகரித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்

    சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டுகளை பெற்று வந்த சிங்கப்பூர், கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.

    அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

  3. 'ரேபிட் டெஸ்ட் கிட்'டின் விலை குறித்து சர்ச்சை

    கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதைத் துரிதமாகக் கண்டறிய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்'கள் இன்று தமிழகத்தை வந்தடைந்திருக்கும் நிலையில், அவற்றின் விலை அதிகமாக இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

  4. 'மலேசியாவில் 56% பேர் குணமடைந்துள்ளனர்'

    மலேசியாவில் இன்று புதிதாக 54 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 5,305ஆக அதிகரித்துள்ளது.

    அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயிலிருந்து 135 பேர் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெவித்துள்ளார்.

    மேலும் மலேசியாவில் இதுவரை 3,102 கிருமித்தொற்று நோயாளிகள் குணமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது 2,115 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை சுமார் 56 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்றும், பலியானவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது என்றும் இன்று நிர்வாகத் தலைநகர் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நூர் ஹிஷாம் மேலும் குறிப்பிட்டார்.

  5. இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்கு

    இலங்கையில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 முதல் சில விதிமுறைகளின் கீழ் தளர்த்தப்படவுள்ளது.

    ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

  6. துப்பாக்கி குண்டு முழக்கம் இல்லாத அரசியின் பிறந்தநாள்

    வரும் ஏப்ரல் 21ஆம் தேதி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் 94வது பிறந்த நாளுக்காக வழக்கமான துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறு செய்வது முறையாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எலிசபெத் அரசியாக பதவியேற்ற 68 ஆண்டுகளில் துப்பாக்கி குண்டு முழக்க மரியாதை இல்லாத முதல் பிறந்தநாள் இதுதான் என்று கருதப்படுகிறது.

  7. சீன மருத்துவக்குழு மலேசிய பயணம்

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மலேசியாவுக்கு உதவ சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவக்குழு ஒன்று மலேசியாவுக்கு இன்று வருகை தந்துள்ளது.

    சீன அரசாங்கம் அனுப்பியுள்ள இந்தக் குழுவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த எட்டு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த மருத்துவக்குழுவினர் மலேசியாவில் இரண்டு வார காலம் தங்கி இருப்பார்கள் என்றும், கொரோனா வைரஸ் தொற்றை துடைத்தொழிப்பதில் தங்களுக்கு உள்ள அனுபவங்களை மலேசிய சுகாதாரத் துறையுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

  8. கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஏன் அவசியம்?

    கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுகள் தோன்றும் போதெல்லாம் ஏன் உலக சுகாதார அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது? அந்த அமைப்பிற்கு நிதி உதவி குறைந்தால், அது உலக மக்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

  9. தமிழ்நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ்

    தமிழ்நாட்டில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுவரை தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 82 பேர் குணமடைந்துள்ளனர்.

  10. ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை யாரெல்லாம் உட்கொள்ளலாம்?

    மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள், கோவிட்-19 நோய் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்து தாங்களும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இருப்பவர்கள் தவிர வேறு யாரும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், பொதுமக்கள் தாங்களாகவே அந்த மாத்திரைகளை உட்கொள்வது உடல்நலத்தின் மீது மோசமான விளைவுகளை உண்டாக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர் பரிந்துரை செய்யப்படாத நபர்களுக்கு அந்த மாத்திரைகளை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஸ்பெயினில் 20,000த்தை கடந்த உயிரிழப்புகள்

    கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 565 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் ஸ்பெயினில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 20,043ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இத்தாலியை அடுத்து கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது.

  12. ''தடகள வீரர்களுக்கு இது சோதனை காலம்''

    கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தடகள வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யமுடியாததால், தங்களின் உடற்கட்டு குறைவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

  13. சிங்கப்பூர் புதிய உச்சத்தை தொட்ட நோய்த்தொற்று பாதிப்பு

    சிங்கப்பூரில் மேலும் 942 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் இதுவரை ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவே ஆகும்.

    இன்று நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களில் பலர் ஓய்வில்லங்களில் (Dormitories) வசித்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை திறம்பட கட்டுப்படுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு வந்த சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சிங்கப்பூரில் இதுவரை 5,992 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்; 708 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  14. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் நிலவரம்

    இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்ட சில முக்கிய தகவல்களின் தொகுப்பு:

    • இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 14,378 பேரில் இதுவரை 480 பேர் உயிரிழந்துள்ளனர்; 1992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    • நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணடைந்தோர் அளவு 13.85 சதவீதாகவும், உயிரிழந்தோர் அளவு 3.3 சதவீதமாகவும் உள்ளது.
    • நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில், 14.4 சதவீதம் பேர் 0-45 வயதுப் பிரிவையும், 10.3% பேர் 45-60 வயதுப் பிரிவையும், 33.1% பேர் 60-75 வயதுப் பிரிவையும், அதிகபட்சமாக 42.2% பேர் 75 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவையும் சேர்ந்தவர்கள்.
    • நாட்டின் 23 மாநிலங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் வேகமாக உள்ளது. அதே வேளையில், 45 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
    • இந்தியாவில் ஏற்பட்டுள்ள மொத்த நோய்த்தொற்று பாதிப்பில் 4,291 பேர் (29.8%) டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
    • தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதியானவர்களில் 84% பேர், டெல்லியில் 63% பேர், தெலங்கானாவில் 79%, ஆந்திரப்பிரதேசத்தில் 61% பேர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 59% பேர் இந்த ஒற்றை நிகழ்வில் பங்கேற்றவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.
  15. இந்திய கடற்படை கட்டடத்தை இலக்கு வைத்த கொரோனா வைரஸ்

    பெரும்பாலான திருமணமாகாத ஆண்களுக்கான விடுதிகளைப் போலவே இந்தக் கட்டத்திலும் தனித்தனியான சமையலறைகள் இல்லை. எனவே அனைவருக்கும் ஒரே இடத்தில்தான் உணவு சமைக்கப்படுகிறது.

    இந்த கட்டடத்தில் உள்ள அறைகளுக்கு தனித்தனிக் கழிவறைகளும் கிடையாது ஆதலால் அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான கழிவறைகளையே பயன்படுத்தியுள்ளனர்.

  16. விதிகளை கடைபிடிக்காத ஐந்து பேர் அரசு முகாமிற்கு மாற்றம்

    கர்நாடகாவின் கொடைபைல் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள மின் தூக்கியில் எச்சில் துப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவர்கள் இருவரும், உடன் வசித்து வந்த மற்ற மூவரும் அரசின் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    மின் தூக்கியில் எச்சில் துப்பிய இரு வெளிநாட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  17. விரைவு பரிசோதனை கருவியில் முதல் முறையாக பரிசோதனை

    சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வருவிக்கப்பட்ட விரைவு பரிசோதனை கருவிகளை (Rapid Test Kit) கொண்டு இன்று (சனிக்கிழமை) சேலத்தில் 20 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர்கள் அனைவருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

    மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 12,000 விரைவு பரிசோதனை கருவிகள் தமிழகத்திற்கு வந்துசேர்ந்துள்ளன. அவற்றில் சேலம் மாவட்டத்திற்கு 1,000 கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

  18. ஜெர்மனியில் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிப்பு

    ஜெர்மனியில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஜெர்மனியில் புதிதாக 3,609 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 242 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ராபர்ட் கோச் ஆய்வு நிறுவனத்தின் தரவு கூறுகிறது. இதன் மூலம், கோவிட்-19 நோய்த்தொற்றால் ஜெர்மனியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,110ஆக அதிகரித்துள்ளது.

    ஒரு மாதகால முடக்க நிலையின் காரணமாக ஜெர்மனியில் கொரோனா வைரஸின் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் 12ஆம் தேதி முதல் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையை விட, கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர் கூறியிருந்தார்.

  19. 450 கோடி மக்களை முடக்கிய கொரோனா

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுமார் 450 கோடி மக்கள் ஊரடங்கு, பொது நடமாட்டக் கட்டுப்பாடு, பயணத் தடை போன்ற முடக்கநிலைகளில் ஒன்றை எதிர்கொண்டுள்ளனர்.

    அதாவது உலக மக்களில் பாதிக்கும் மேற்பொட்டோரை ஏதாவது ஒருவகை கட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது இந்த கோவிட்-19 தொற்று பரவல்.

    ஐ.நாவின் கணக்குப்படி 2019இல் உலக மக்கள்தொகை சுமார் 772 கோடி.

  20. ''ஊரடங்கு வேண்டாம்'' எச்சரிக்கும் டிரம்ப்

    கொரோனா வைரஸ் தொற்று குறித்த இன்றைய சர்வதேச தகவல்கள் காணொளி வடிவில்.