திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ராம. ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினர் அளிக்க வேண்டும்’ என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று ராம.ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார். அதில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், கோயில் தரப்பிலோ அல்லது அரசு தரப்பிலோ தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், “உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே தீபத் தூணில் வழக்கம் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக மனுதாரர் உள்பட 10 பேர் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடப்படுகிறது. அவர்களுக்கு போதிய பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் காரணமாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகம் பகுதியிலிருந்து ராம.ரவிக்குமார் உள்பட 10 பேர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு புறப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 67 மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர்கள் இரு ராணுவ வாகனங்களில் அணி வகுத்துச் சென்றனர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை பகுதியில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் பிறப்பித்தார்.
மேலும், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முன்னிலையாகி முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை முற்பகலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.