மதுரை விடுதியில் சக பெண்களை தவறாக படம் எடுத்து அனுப்பிய இளம் பெண் கைது

மதுரை காவல் ஆணையர் அலுவலகம்

பட மூலாதாரம், TN Police

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் ஒரு மாணவி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு மருத்துவரும் புகாருக்கு உள்ளான அந்த மாணவியும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில்,

மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான தனியார் பெண்கள் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி இருக்கிறார்கள்.

இத்தகைய விடுதி ஒன்றின் காப்பாளர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர் குறித்து புகார் கொடுத்துள்ளார்.

அந்த மாணவி மீது அவருடன் தங்கி இருக்கும் சக பெண்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ரகசியப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

புகாருக்கு உள்ளான மாணவி தம்முடன் தங்கி இருக்கும் சக பெண்களை தவறான நோக்கத்துடன் பலமுறை புகைப்படம் எடுப்பதாகவும், அவற்றை வெளி நபருக்கு அனுப்பி வைப்பதாகவும். அந்த புகைப்படங்களை அந்த வெளிநபர் தவறாக பயன்படுத்துவதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவியிடம் விசாரிக்கும் பொழுது முன்னுக்கு பின் முரணாக தகவல் அளிக்கிறார். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை கொடுக்கவும் மறுக்கிறார். எனவே இந்த மாணவியிடம் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதிக் காப்பாளரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் செந்தில்குமார் வழக்கை உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, சென்ற சைபர் கிரைம் போலீசார், விடுதியில் புகாருக்கு உள்ளான மாணவியின் அறையை சோதனை செய்தனர். அவரது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் அனைத்து புகைப்படங்களும் ஒரே நேரத்தில் டெலீட் செய்யப்பட்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மாணவியின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது சக பெண்களின் பல வீடியோக்கள், போட்டோக்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக டெலீட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் அந்த மாணவியைக் கைது செய்தனர்.

சித்தரிப்புப் படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்.

போலீஸ் விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிறிய அளவில் கிளினிக் வைத்து நடத்தி வரும் மருத்துவர் ஆஷிக் என்பவருக்கு இந்த வீடியோக்கள், போட்டோக்களை அனுப்பி வைத்ததாக மாணவி தெரிவித்ததாக பெயர் வெளியிட விரும்பாத அந்த போலீஸ்காரர் தெரிவித்தார்.

இதையடுத்து கமுதி போலீசார் உதவியுடன் மருத்துவர் ஆசிக் என்பவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், அவர் உண்மையிலேயே மருத்துவம் பயின்று இருக்கிறாரா? இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏதேனும் இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து இருக்கிறாரா? என்ற கோணத்தில் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.

விடுதியில் தங்கியிருந்த பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விசாரணையின் விவரத்தை தற்போது கூற முடியாது. விசாரணையின் முன்னேற்ற தகவலை நிச்சயம் தெரிவிக்கிறோம் என சைபர் பிரிவு போலீசார் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: