You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய ஏவுகணை அமைப்பு வாங்க இந்தியாவுக்கு அனுமதி, துருக்கிக்கு தடை: அமெரிக்கா ஏன் இப்படி செய்தது? S-400 ஏவுகணை விவகாரம்
- எழுதியவர், நியாஸ் ஃபரூக்கி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியாவுக்கு சிறப்பு அனுமதி வழங்க வகை செய்யும் விதமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடந்த வாரம் ஒரு சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது. ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியாவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது 'CAATSA' அதாவது'அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்த்தல்' சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு இந்த சிறப்பு விலக்கை அளிக்கும் சட்ட திருத்தத்தில் அமெரிக்க அதிபர் கையெழுத்திடவேண்டும். ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் எதிர்கொள்ளவேண்டிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து இது இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும்.
S-400 என்பது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நிலத்தில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆகும். இந்தியா 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்த பாதுகாப்பு அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் பின்னர் அமெரிக்கா CAATSA இன் கீழ் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தன.
அதே சட்டத்தின் கீழ் அமெரிக்கா தனது நேட்டோ நட்பு நாடான துருக்கி S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதை தடை செய்தது.
இந்தியாவுக்கு அமெரிக்கா இந்த சலுகை கொடுத்தது ஏன்?
இந்த சலுகையை, இந்தியாவிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் சமிக்ஞையாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைப் புரிந்து கொண்டதோடு கூடவே சீனாவைக் கட்டுப்படுத்தும் பெரும் சக்தியாகவும் அது இந்தியாவை பார்க்கிறது என்பதே இதன் பொருள்.
"இந்தியாவை அமெரிக்கா மிகவும் மதிக்கிறது, துருக்கிக்கு வழங்காத சலுகைகளை வழங்குவதற்கும் அது தயாராக உள்ளது என்பதை இந்த சலுகை காட்டுகிறது,"என்று பாதுகாப்பு மற்றும் செயல் உத்தி விவகார வல்லுநர் சுஷாந்த் சிங் கூறுகிறார்.
ரஷ்யாவிடம் இருந்து S-400 பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கு துருக்கியைத் தவிர சீனாவைவும் அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதால், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சிக்கலாக்கும்.
இந்தியாவின் முக்கியத்துவம்
அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார பங்காளி இந்தியா என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
"அமெரிக்காவைப் பொருத்தவரை இந்தச் சலுகை (இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை) மிகக்குறைவான எதிர்ப்பின் பாதையாகும்," என்று பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி கூறுகிறார்.
"இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உதவியாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக சீனாவுடன் இந்தியா சிக்கலான எல்லைப் பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் இது முக்கியமானது. இது தவிர சீனாவின் எழுச்சி குறித்த கவலை அமெரிக்காவுக்கும் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிற்கு இந்த சலுகையை வழங்க முடிவு செய்ததற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்."என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?
• S-400 உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது.
• எதிரியின் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துவதில் இது திறன் வாய்ந்தது.
• S-400 என்பது ஒரு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்ல வசதியான அமைப்பாகும், சாலை வழியாக இதை கொண்டு செல்ல முடியும்.
• உத்தரவு கிடைத்த ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் இதை ஏவமுடியும்.
• இது விமானம், கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
• நில இலக்குகளையும் இது தாக்கவல்லது.
அமெரிக்கா சீனாவைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. இந்த திசையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அது நம்புகிறது. சீனாவுடன் போட்டியிடுவதற்காக, எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை இழக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று சுஷாந்த் சிங் கூறுகிறார்.
" யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் எதிர்க்கின்றன. இந்த நிலையில் இந்த சலுகை முடிவு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. மறு புறம் சீனா - இந்தியா இடையே சர்ச்சை நிலவுகிறது. தற்போது ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதாக கருதப்படுகிறது."
"ரஷ்யா அமெரிக்காவிற்கு நடுத்தர கால எதிரி என்றும், சீனா நீண்ட கால எதிரி என்றும் நான் கருதுகிறேன். புவியியல் ரீதியாக சீனாவை சமாளிக்க இந்தியா நல்ல இடத்தில் உள்ளது" என்று பேடி கூறுகிறார்.
இந்த சலுகையில் அமெரிக்க அதிபர் இன்னும் கையெழுத்திடவில்லை.ஆயினும் 'CAATSA' இன் கீழ் பொருளாதாரத் தடைகள் இந்தியாவிற்கும் கடினமான சூழ்நிலையாக இருந்திருக்கும், மேலும் அமெரிக்காவிற்கும் பல சிக்கலான சூழல்களை உருவாக்கியிருக்கும்.
இந்த சலுகைக்கு அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆதரவு, அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி என்ற உண்மையும், இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை புரிந்து கொள்வது அவசியம் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை பிரதிபலிக்கிறது.
"இது அமெரிக்காவின் உள் அரசியல் நடவடிக்கையாகும். ரஷ்யாவில் என்ன நடந்தாலும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் இரு தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று சுஷாந்த் சிங், கூறுகிறார்.
அமெரிக்காவின் நம்பிக்கை
யுக்ரேன் போரின் காரணமாக அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில், 'CAATSA' இல் இந்தியாவுக்கு சலுகைகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் முடிவு வந்துள்ளது.
நடப்பு சர்வதேச அரசியல் சூழ்நிலையில் இந்தியா முழுவதுமாக மேற்கத்திய நாடுகளுடன் செல்லத் தயங்குவது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயும் வாங்குகிறது.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் குறிப்பிடத்தக்கது என்று ஆய்வாளர் அஜய் சுக்லா கூறுகிறார். "இது விசித்திரமானது அல்லது இது மிகவும் முக்கியமானது என்று நான் கூறமாட்டேன். ஆனால் அமெரிக்க ஆதரவு யுக்ரேனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கவனிக்கத்தக்கது," என்று மேலும் தெரிவித்தார்.
இது போன்ற நேரத்தில், இந்திய-அமெரிக்க உறவுகளில் அமெரிக்காவின் நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கூடவே அனுமதியில்லாமல், S400 மூலம் அமெரிக்க தொழில்நுட்ப பரிமாற்றத்தை இந்தியா செய்யாது என்ற நம்பிக்கையின் ஆதாரம் இது," என்றும் அவர் கூறுகிறார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவும் ரஷ்யாவும் பாரம்பரிய உறவுகளைக் கொண்டுள்ளன என்பதால் இந்த முடிவு தவிர்க்கமுடியாதது என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியா தனது 60 முதல் 70 சதவிகித பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. ஆயுத இறக்குமதியை பன்முகப்படுத்தவும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்திய பாதுகாப்பு படைகள் ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன.
இந்த எல்லா அம்சங்களையும் பார்க்கும்போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா விலகுவது எளிதல்ல என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
துருக்கிக்கு தடை, ஆனால் இந்தியாவை ஏன் தடை செய்யவில்லை?
ரஷ்யாவிடம் இருந்து S-400 தற்காப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அதே காரணத்திற்காக அதன் நேட்டோ நட்பு நாடான துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டபோது, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் பணியில் துருக்கி ஈடுபட்டிருந்தது. S-400 ஏவுகணை , ரஷ்யாவிற்கு சட்டவிரோத தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
எஃப்-35 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு மூலம் சிதைக்கப்படும் அல்லது டிகோட் செய்யப்படலாம் என்று அமெரிக்கா நம்புவதால், எந்த சலுகையையும் (துருக்கிக்கு) வழங்கவில்லை என்று சுக்லா கூறுகிறார்.
இந்தியா விஷயத்தில் அமெரிக்காவுக்கு அத்தகைய பயம் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
"இந்தியாவின் S400 க்கான தேவையை அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது. இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள நம்பிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலாகும். முக்கியமான தொழில் நுட்பம் ரஷ்யர்களுக்கு செல்வதைத் தடுக்க இந்தியா அனைத்தையும் செய்யும் என்று அமெரிக்கா நம்புகிறது."
"துருக்கி நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால் விஷயம் மிகவும் சிக்கலாகிவிட்டது. 'CAATSA' ஆரம்பத்தில் ரஷ்யாவை தண்டிப்பதற்காக கொண்டுவரப்பட்டது. மற்ற நாடுகளை அல்ல,"என்று சுஷாந்த் சிங் குறிப்பிட்டார்.
"துருக்கி நேட்டோவின் உறுப்பினராக உள்ளது. நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால் இந்தியா உட்பட பல நாடுகளும் அணுக முடியாத எல்லா பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை துருக்கியால் அணுகமுடிந்ததால் அது தண்டிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறுகிறார்.
இது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா?
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை அமைப்பு உலகின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். நிச்சயமாக இது இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும். ஆனால் எல்லையில் இந்தியாவுக்கு இது பயனுள்ளதாக நிரூபிக்கப்படுமா?
இது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்கள் பிளவுபட்டுள்ளன.
"சீனாவைப் பொருத்தவரை இந்த அமைப்பு அதிக விளைவை ஏற்படுத்தாது. ஆனால் பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை மிகவும் நவீனமான மற்றும் பயனுள்ள கருவிகள்,"என்று சுஷாந்த் சிங் கருதுகிறார்..
"இந்தியாவிடம் போர் விமானங்களின் பற்றாக்குறை இருப்பதால், வான்வழிப் போரில் இது முக்கியமானதாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
இந்த நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கவலை சீனா. அதே கவலை அமெரிக்காவிற்கும் உள்ளது.
பாகிஸ்தானை பொருத்தவரை இந்த அமைப்பு நிலைமையை பெரிதாக மாற்றாது. ஏனென்றால் பாகிஸ்தானின் அடிப்படைப் பிரச்சனை காஷ்மீர். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று ராகுல் பேடி தெரிவிக்கிறார். ஆனால் இது சீன எல்லையில் விஷயங்களை சிக்கலாக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்." ஏனெனில் இது சீன எல்லையில் உள்ள நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி), கட்டுப்பாட்டுக் கோடாக (எல்ஓசி) மாற்றும், மேலும் எல்ஏசியில் துருப்புகள் நிறுத்தப்படுவது தொடரும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன எல்லையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் நிலைமை மேலும் கடினமாக ஆகக்கூடும்,"என்கிறார் அவர்.
மறுபுறம், ரஷ்யா ஏற்கனவே சீனாவிற்கு S 400 பாதுகாப்பு அமைப்பை வழங்கியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு S-400 அமைப்பு மட்டுமே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மேற்கு எல்லையில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யுக்ரேன் போரில் ரஷ்யாவின் முழு கவனமும் இருப்பதால் மீதமுள்ள ஆர்டரை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆர்டரின் ஒரு பகுதியை ஜூன் மாதத்தில் இந்தியா பெற்றிருக்க வேண்டும் என்றும், அது இன்னும் வரவில்லை என்றும் பேடி கூறுகிறார். "உண்மையில் ரஷ்யாவால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் S-400 இன் சில பாகங்கள் மற்றும் அமைப்புகள், அமெரிக்காவுடன் தொடர்புடைய மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன."
இந்த பாதுகாப்பு அமைப்பின் உண்மையான நன்மை வெகு தொலைவில் உள்ளது. இருந்தாலும், இரு நாடுகளிடமிருந்தும் தனக்கு வேண்டிய நலன்களைப் பெறுவதில் இந்தியா மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்பது தெளிவாகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்