You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`அன்றைக்கு நான் செய்தது தவறுதான்!'' - மயங்கி விழுந்தது குறித்து சீமான்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `இதைவிட கடுமையான வெயிலில் பிரசாரம் செய்திருக்கிறேன். ஆனால், இப்படியொரு வெயிலை பார்த்ததில்லை. இதுவும் ஒரு படிப்பினைதான்' என்கிறார் சீமான்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர்ப் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி அங்குள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 2 ஆம் தேதி திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதிக்கு சீமான் வந்திருந்தார். அப்பகுதியில் குழுமியிருந்த மக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அருகில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக இயல்பு நிலைக்கு சீமான் திரும்பினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சீமானிடம் நலம் விசாரித்துள்ளனர். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், `எனது உடல்நலன் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
``என்ன நடந்தது?'' என பிபிசி தமிழிடம் பேசிய சீமான், ``அன்றைக்குக் கடுமையான வெயில் நேரம். முதல் நாள் இரவும் 2 ஆம் தேதியன்று காலையிலும் உணவு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் உடல் வியர்த்துக் கொட்டியதால் சோர்வாகி மயங்கிவிட்டேன். ஆனால், ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து, அருகில் இருந்த தம்பி ஜெகதீசனிடம் `வாகனத்தை எடு, போயிரலாம்' எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே மயங்கிவிட்டேன்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய சீமான், ``அன்றைக்கு மக்கள் போராட்டம் நடைபெற்றதால் காவல்துறை வாகனங்களும் ஆம்புலன்ஸும் நின்று கொண்டிருந்தன. அதில் என்னை ஏற்றிவிட்டனர். முகத்தில் தண்ணீர் தெளித்ததால் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன். `என்னை எதற்காக இந்த வண்டியில் ஏற்றுகிறீர்கள்?' எனக் கேட்டேன்.
ஆனாலும் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு மருத்துவர்களும், `உடல்நலனைப் பார்க்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். அன்றைக்கு நான் செய்தது தவறுதான். காலையில் பொதுவாக கூழ், கஞ்சி ஆகியவற்றை சாப்பிடுவேன். திருவொற்றியூர் செல்லும் அவசரத்தில் அன்று எந்த உணவும் எடுக்கவில்லை. இனி கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான படிப்பினை இது. இதைவிட எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், இதுவும் தேவைப்படுகிறது'' என்கிறார்.
``எனது உடல்நலன் தொடர்பாக முதலமைச்சர் நலம் விசாரித்ததில் மகிழ்ச்சி. அரசியலில் முரண்பாடு இருந்தாலும் அன்பு மாறாதது. பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியும், `எந்த ஆண்டும் இல்லாத வெயில் இப்போது வீசுகிறது, என்.சி.சியில் இருந்தபோது பலமுறை மயங்கி விழுந்திருக்கிறோம். டி.வியில் பார்க்கும்போதே நீங்கள் மயங்குவது தெரிந்தது' என்றார். இதைவிட கடுமையான வெயிலில் எல்லாம் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் எதுவும் நேர்ந்ததில்லை. உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான படிப்பினை இது'' என்கிறார் சீமான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்