யோகி ஆதித்யநாத்: உ.பி மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்பு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இன்று உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து கேஷவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகிய இருவரும் உ.பி. மாநில துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இரு துணை முதல்வர்கள் தவிர்த்து, யோகி அரசாங்கத்தில் 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அதன் பிறகு, சுரேஷ் குமார் கண்ணா, சூரிய பிரதாப் ஷாஹி, ஸவதந்திரா தேவ் சிங், பேபி ராணி மௌரியா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மேலும், உத்தர பிரதேச அமைச்சர்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அர்விந்த் குமார் ஷர்மா, யோகேந்திர உபாத்யாயா, ஆஷிஷ் படேல், சஞ்சய் நிஷத், பூபேந்திர சிங் சௌத்ரி, அனில் ராஜ்பர், ஜிதின் பிரசாதா, ராகேஷ் சச்சன் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் அரங்கில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இணை அமைச்சர்களாக (தனி பொறுப்பு) பதவியேற்றவர்கள்:

நிதின் அகர்வால்

கபில் தேவ் அகர்வால்

ரவீந்திர ஜெய்ஸ்வால்

சந்தீப் சிங்

குலாப் தேவி

கிரீஷ் சந்திர யாதவ்

தரம்வீர் பிரஜாபதி

ஆசீம் அருண்

ஜேபிஎஸ் ரத்தோர்

நரேந்திர கஷ்யப்

தினேஷ் பிரதாப் சிங்

அருண் குமார் சக்சேனா

தயாசங்கர் மிஸ்ரா

இணை அமைச்சர்களாக பதவியேற்றவர்கள்:

மயங்கேஷ்வர் சிங்

தினேஷ் காதிக்

சஞ்சீவ் கோண்ட்

பல்தேவ் சிங் ஓலாக்

அஜித் பால்

ஜஸ்வந்த் சாய்னி

ராம்க்ஷ் நிஷாத்

மனோஹர் லால் மன்னு கோரி

சஞ்சய் கங்வார்

பிரிஜேஷ் சிங்

கேபி மாலிக்

சுரேஷ் ராஹி

சுமேந்திர தோமர்

அனூப் பிரதான் வால்மீகி

அனூப் பிரதீபா சுக்லா

ராகேஷ் ரத்தோர் குரு

ராஜ்னி திவாரி

சதீஷ் ஷர்மா

தானிஷ் ஆசாத் அன்சாரி

இதற்கு முன்னர், யோகி அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களுக்கு, இம்முறை பதவி அளிக்கப்பட்டவில்லை. துணை முதல்வர் பதவியில் இருந்த தினேஷ் ஷர்மா, எரிசக்தி துறை அமைச்சராக இருந்த ஸ்ரீகாந்த் ஷர்மா, அமைச்சர்கள் சதீஷ் மாஹானா, ஸ்வாதி சிங் ஆகியோருக்கு எந்த பதவியும் அளிக்கப்படவில்லை.

முந்தைய அரசில் இடம்பெற்று இருந்த ஒரே முஸ்லீம் அமைச்சரான மோஹசின் ராசாவுக்கும் பதவி அளிக்கப்படவில்லை.

உத்தர பிரதேச மாநில அரசியல் வரலாற்றில், ஒரு முதல்வர் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர், உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும், ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஆனால், இம்முறை யோகி மீண்டும் ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவை பா.ஜ.க மிகப்பெரிய நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில், கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் கலந்துக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே முஸ்லிம் அமைச்சர் யார்?

உத்தர பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர், முஸ்லிம்கள். ஆனால், யோகி அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். உத்தர பிரதேசத்தில் பல்லியா பகுதியைச் சேர்ந்தவர் தானிஷ் ஆசாத் அன்சாரி. இவர் அகில பாரதிய வித்யார்தி பரிக்ஷத்தின் (ஏபிவிபி) உறுப்பினராக இருந்தார்.

இதற்கு முன்பும், யோகி அமைச்சரவையில், மோஹ்சின் ராசா என்ற ஒரு முஸ்லிம் அமைச்சர் பதவி வகித்தார்.

32 வயதான தானிஷ் ஆசாத் அன்சாரி, ஏபிவிபியில் இணைந்து லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவ அரசியலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 வயதுக்குள் உள்ள மாநில முதல்வர்கள்

தற்போது, நாட்டில் 50 வயதிற்குட்பட்ட முதலமைச்சர்கள் பட்டியலில் தற்போது யோகியும், பக்வந்த் மானும் இணைந்துள்ளார்..ஏ.என்.ஐ செய்தி முகமையின் தகவலின்படி, யோகி ஆதித்யாநாத்துக்கு வயது 49 . இந்த மாதம் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பக்வந்த் மானின் வயது 48. தற்போது, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 46 வயதில் அம்மாநில முதல்வரானார். அரவிந்த் கெஜ்ரிவால் 45 வயதில் தில்லி முதல்வரானார். 42 வயதான பீமா காண்டு அருணாச்சல பிரதேச முதல்வராக பதவி வகிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: