தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் 1,136 குறைவு

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

இன்றைய (பிப். 26) நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,136 ரூபாய் குறைந்துள்ளது என, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 23-ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 719-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 752-க்கும் விற்பனை ஆனது. யுக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடுத்த மறு நாளே தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.232 உயர்ந்து கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ரூ.1,856 உயர்ந்து பவுன் ரூ.39 ஆயிரத்து 608 ஆகவும் விற்பனை ஆனது. இந்த திடீர் விலை ஏற்றம் பொதுமக்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து அதில் முதலீடு செய்ய தயக்கம் காட்டியதும், தங்கத்தில் முதலீடு செய்ததுமே தங்கத்தின் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி தங்க விலை திடீரென வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று மாலை நேர நிலவரப்படி ரூ.142 குறைந்து கிராம் ரூ.4 ஆயிரத்து 809-க்கும், ரூ.1,136 குறைந்து பவுன் ரூ.38 ஆயிரத்து 472-க்கும் விற்பனையானது. ஆனால் 23-ந்தேதி நிலவரப்படியிலான விலையை எட்டவில்லை. மாறாக சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், விலை குறைந்து காணப்பட்டது. இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: யுக்ரேன் ரஷ்யா இடையேயான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும், யுக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈடுபட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கருதி, பொருளாதார பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார்கள். ஆகவே அதன் விலை நேற்று (நேற்று முன்தினம்) அதிகளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு இரு நாடுகளுக்கும் உதவ உலக நாடுகள் எதுவும் முன்வராததால், பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் நிகழவில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யும் ஆர்வத்தை குறைத்து, மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போது தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும் எனக் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை- கருத்து தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு சட்டப்‌ பேரவையில்‌ தாக்கல்‌ செய்யப்படவுள்ள வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ இடம்‌ பெற வேண்டிய அம்சங்கள்‌ தொடர்பான கருத்துகளைத்‌ தெரிவிக்க பொது மக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது என 'தினமணி ' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது இதுகுறித்து வேளாண்மைத்‌ துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்‌ குறிப்பில், வேளாண்‌ நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பாக, விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌, நிறுவனங்கள்‌, வேளாண்‌ விஞ்ஞானிகள்‌, விவசாயிகள்‌ சங்கப்‌ பிரதிநிதிகள்‌, வேளாண்‌ விளைபொருள்‌, ஏற்றுமதியாளர்கள்‌ என பல்வேறு வகையான பிரிவுகளைச்‌ சேர்ந்த மக்களின்‌ கருத்துகளைக்‌ கேட்டு அதற்கேற்ப வேளாண்‌ நிதிநிலை அறிக்கையைத்‌ தயாரிக்குமாறு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவறுத்தியுள்ளார்‌.

இதன்படி சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ வேளாண்‌ நிதிநிலை அறிக்கை குறித்த கருத்துக்‌ கேட்பு கூட்டம்‌ வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்‌ மாநிலத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளிலிருந்தும்‌ விவசாயிகள்‌, வேளாண்‌ வர்த்தகர்கள்‌, வேளாண்‌ ஏற்றுமதியாளர்கள்‌, வேளாண்‌ தொழில்‌ சார்ந்த கோழி வளர்ப்பு, மீன்‌ வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல்‌ சார்ந்த பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டு கருத்துகளைத்‌ தெரிவித்தனர்‌. இதேபோன்று விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, விவசாய சங்கப்‌ பிரதிநிதிகள்‌, வேளாண்‌ விஞ்ஞானிகள்‌, ஏற்றுமதியாளர்கள்‌ உள்ளிட்ட வேளாண்மையில்‌ ஈடுபட்டுள்ள அனைத்துத்‌ தரப்பு மக்களின்‌ கருத்துகளைக்‌ கேட்டறியும்‌ வகையில்‌ மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ கூட்டங்கள்‌ நடத்தப்படவுள்ளன.

மேலும்‌, காணொலிக்‌ காட்சிகள்‌ வழியாகவும்‌, அனைத்துப்‌ பிரிவுகளைச்‌ சேர்ந்த மக்களிடமிருந்தும்‌ கருத்துகள்‌ பெறப்படவுள்ளன. இத்துடன்‌, மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ நடைபெற்று வரும்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டங்களில்‌ தெரிவிக்கப்பட்ட கருத்துகளும்‌ தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கூட்டங்களில்‌ கலந்து கொள்ள இயலாத மக்களும்‌ தங்களது கருத்துகளை அரசுக்குத்‌ தெரிவிக்கலாம்‌. அதன்படி, மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ விவசாயிகள்‌ எதிர்கொள்ளும்‌ பிரச்னைகள்‌, அதற்கான தீர்வு குறித்த கருத்துகள்‌, அறிவுரைகள்‌ உள்ளிட்ட விவரங்களை அரசுக்கு கடிதம்‌ அல்லது, மின்னஞ்சல்‌, வாட்ஸ்‌ ஆப்‌ மூலமாக அரசுக்குத்‌ தெரிவிக்கலாம்‌. கடிதங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி: வேளாண்மை உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ அரசுச்‌ செயலாளர்‌, வேளாண்மை- உழவர்‌ நலத்துறை, தலைமைச்‌ செயலகம்‌, புனித செயின்ட்‌ ஜார்ஜ்‌ கோட்டை சென்னை.

இதேபோல மின்னஞ்சல் வாட்ஸ்அப் ட்விட்டர் மற்றும் உழவன் செயலி மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர் எதிர்வரும்‌ நிதியாண்டுக்கான வேளாண்‌ நிதிநிலை அறிக்கை விரைவில்‌ தாக்கல்‌ செய்யப்பட உள்ளது. இதனால்‌, விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, விவசாய சங்கப்‌ பிரதிநிதிகள்‌, வேளாண்‌ விஞ்ஞானிகள்‌, ஏற்றுமதியாளர்கள்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பிரிவு மக்களும்‌ கருத்துகளை விரைந்து, தெரிவிக்கலாம்‌ என்று வேளாண்மைத்‌ துறை அமைச்சர்‌ எம்‌ ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ தெரிவித்துள்ளதாக செய்தி தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

மூதாட்டி ஒருவர் தன் 62 வயதில், 6,130 அடி உயர அகஸ்தியர் மலையில் ஏறி சாதனை

மூதாட்டி ஒருவர் தன் 62 வயதில், 6,130 அடி உயர அகஸ்தியர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

மூதாட்டி ஒருவர் தன் 62 வயதில், 6,130 அடி உயர அகஸ்தியர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளதாக 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

பெங்களூரில் உள்ள ஹனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகரத்னம்மா, 62. இளம்வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு மலைகளில் ஏறியுள்ளார். திருமணத்திற்கு பின் குழந்தைகள், கணவரை கவனிக்க நேரிட்டதால் அவர் மலையேற்றம் செல்வதை தவிர்த்து வந்தார். கடைசியாக தனது 22வது வயதில் மலையேற்றம் சென்றிருந்தார். அதன் பின் அவர் செல்லவில்லை.

தற்போது மகன், மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதாலும், கணவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாலும் மீண்டும் மலையேற்றத்தில் ஈடுபட நாகரத்னம்மா விரும்பினார். இதுகுறித்து தன் மகன் சிவகுமாரிடம் தெரிவித்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற மகனும் முடிவு செய்தார். அதன்படி அண்டை மாநிலங்களான கேரளா - -தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6,130 அடி உயர அகஸ்தியர் மலையில் ஏற நாகரத்னம்மா முடிவு செய்தார். இதையடுத்து மகனுடன் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயில் மூலம் சென்றார். அகஸ்தியர் மலையில் மலையேற்றம் மேற்கொள்ள இருந்த 13 பேர் கொண்ட குழுவுடன், நாகரத்னம்மாவும் இணைந்து கொண்டார். மூதாட்டி என்பதால் நாகரத்னம்மா மலையேறுவாரா என வனத்துறையினர் நினைத்தனர். இதை தவறு என நிரூபிக்கும் விதமாக இளைஞர்களுக்கு போட்டியாக நாகரத்னம்மா வேகமாக மலையேறினார். மலை உச்சிக்கு சென்ற அவர், குழந்தையை போல துள்ளி குதித்தார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அவர், புடவை கட்டி கொண்டு மலையேறி உள்ளார். இதை வனத்துறை அதிகாரி ஒருவர் 'வீடியோ' எடுத்து தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் நாகரத்னம்மாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: