You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்செக்ஸ் 60,000: மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்?
- எழுதியவர், கௌதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
வரலாறு காணாத முறையில் இந்தியப் பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சென்றிருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? பங்குச் சந்தை குறியீட்டை உயர்த்தும் முக்கியப் பங்குகள் எவை? இதில் உள்ள ஆபத்துகள் என்ன?
2019ஆம் ஆண்டிலேயே பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்தது. ஜனவரி 2019 முதல் ஜனவரி 2020 வரை இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.6 சதவீதத்துக்கு மேல் இருந்தது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை தடதடவென சரிந்தது. 2018 - 19 காலகட்டத்தில் உள்நாட்டில் வாகன விற்பனை 2.62 கோடியாக இருந்தது, 2019 - 20 காலகட்டத்தில் 2.15 கோடியாகவும், 2020 - 21 காலத்தில் 1.86 கோடியாக சரிந்ததாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM) தரவுகள் கூறுகின்றன.
2019ஆம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தல், செப்டம்பர் மாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளை தற்காலிகமாக உயர்த்தின.
ஜனவரி 2020-ல் அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ் குறியீடு. அதன் பிறகு மெல்ல சரியத் தொடங்கி, கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் மற்றும் பாதிப்புகள் வந்த பின் மார்ச் 2020-ல் 25,638 புள்ளி வரை தொட்டது.
அதன் பின் மீண்டும் சென்செக்ஸ் பழைய படி 40,000 புள்ளிகளுக்கு மேல் வருவது எப்போது என காத்திருந்தனர். சென்செக்ஸ் ஆகஸ்ட் 2020லேயே 40,000 புள்ளிகளைக் கடந்து முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. ஜனவரி 2021-ல் 50,000 புள்ளிகளையும், செப்டம்பர் 2021-ல் 60,000 புள்ளிகளையும் கடந்து ஒட்டுமொத்த உலக முதலீட்டாளர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது பங்குச் சந்தை.
மார்ச் 2020 வீழ்ச்சியில் இருந்து சென்செக்ஸ் இப்போது சுமார் 134 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய ஐந்து பங்குகள் மட்டும் சென்செக்ஸ் 50,000 முதல் 60,000 வரை ஏறியதில் சரிபாதிக்கு காரணமாக இருந்ததாக ப்ளூம்பர்க் தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தன் வட்டி விகிதங்களை அதிகரிக்காதது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்தது, மோதி பைடன் சந்திப்பு போன்றவைகள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
மிக முக்கியமாக கடந்த இரு மாதங்களாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 2021-ல் 16,556 கோடி ரூபாயும், செப்டம்பரில் (25ஆம் தேதி வரை) 23,182 கோடி ரூபாயும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
அது போக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020 - 21 நிதி ஆண்டின் ஜூன் வரையிலான காலாண்டில் மைனஸ் 24.4 சதவீதமாக இருந்தது, கடந்த 2021 - 22 நிதி ஆண்டின் ஜூன் வரையிலான காலாண்டில் 20.1 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டது சந்தையின் பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் 2,388 நிறுவனங்கள் ஜூன் 2021 வரையிலான காலாண்டில் லாபம் கண்டிருக்கின்றன, 1,423 நிறுவனங்களின் நிதி நிலையில் பெரிய மாற்றங்கள் இல்லை. 675 நிறுவனங்கள் மட்டுமே நஷ்டம் கண்டிருப்பதாக மும்பை பங்குச் சந்தை வலைதளம் கூறுகிறது. ஆக கொரோனாவைத் தாண்டி நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது இதன் மூலம் உறுதியாகிறது.
சென்செக்ஸின் இந்த அபார வளர்ச்சிக்கு ஐடி, டெக்னாலஜி, நுகர்வோர் பொருள்கள், ரியாலிட்டி, மின்சாரம், உலோகம் என பல துறை சார் குறியீடுகளும் கடந்த ஓராண்டு காலத்தில் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. அது சென்செக்சிலும் எதிரொலித்துள்ளது.
என்ன ஆபத்துகள் இருக்கின்றன?
ஒரு பங்கின் அடக்கவிலையை விட சந்தை விலை (Price to Book Value) அதிகமாக இருக்கிறது. அதே போல ஒரு நிறுவனம் பணத்தை ஈட்டும் அளவை விட, சந்தை விலை (Price Earnings Ratio) மிக அதிகமாக இருக்கிறது.
எப்போதெல்லாம் இப்படி சந்தை விலை அதன் நிதி நிலைகளைத் தாண்டி மிக அதிகமாகச் செல்கின்றதோ, அப்போதெல்லாம் சந்தை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும், அப்போது பங்குகளின் விலை குறையும். எனவே முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டிய காலமிது.
இந்திய பங்குச் சந்தையில் மிகப் பெரிய முதலீட்டாளராக கருதப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 60,000 என்பது வெறும் எண்தான், இன்னும் இந்திய சந்தைகள் மேல்நோக்கிப் போகும் என ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியுள்ளார்.
மும்பை பங்குச் சந்தையின் முதன்மைச் செயல் அதிகாரியான ஆஷிஷ் செளஹான், மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த நேர்காணலில் "எப்போதெல்லாம் சந்தை நல்ல ஏற்றம் காண்கிறதோ அப்போதெல்லாம் முதலீட்டாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் தொடரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள்
- சீனா மீண்டும் சோஷியலிசத்தை நோக்கித் திரும்புவதாக தோன்றுவது ஏன்?
- உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி?
- 'நினைத்ததைவிட மோசம்' - காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை
- ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உரை - முக்கிய விவரங்கள் இதோ
- DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்