மாம்பழம் விலை கிலோவுக்கு 2 லட்சத்துக்கு அதிகமா? மாமரத்தை பாதுகாக்க காவலர்களா?

பிரசுரிக்கப்பட்டது

கோடைக்காலம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் பழங்களில் ஒன்று மாம்பழம். தமிழ்நாட்டில் சேலத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் அதன் சுவைக்கு மிகவும் பெயர் பெற்றவை. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் விளையும் மாம்பழம் 2.70 லட்சம் ரூபாய் வரை விலைக்கு போவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது தோட்டத்தில் விளையும் இரண்டு மியாசாக்கி மா மரங்களை பாதுகாக்க நான்கு காவலர்களையும் ஆறு நாய்களையும் பணியில் அமர்த்தியுள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த மாம்பழ ரகமான இதற்கு சந்தையில் கடும் கிராக்கி நிலவுவதாக அவற்றை பயிரிட்டு வளர்த்து வரும் சங்கல்ப் பரிஹார் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் கூறுகின்றனர்.

மும்பையில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தங்களது நிலத்தில் விளைந்த மாம்பழத்தை கிலோ 21,000 ரூபாய்க்கு வாங்கியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் அரிய மாம்பழ ரகங்களில் ஒன்றாக கூறப்படும் இவற்றின் விலை கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அதிகபட்சமாக கிலோவுக்கு 2.70 லட்சம் ரூபாய் வரை சென்றதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த அந்த தம்பதியினர் மேலும் கூறுகின்றனர்.

இந்த தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு மாமரக் கன்றுகளை நட்டபோது அது ரூபி நிற ஜப்பானிய மாம்பழங்களாக விளையும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

உலகின் மிகவும் விலை மதிப்புமிக்க மாம்பழங்களில் ஒன்றாக கருதப்படும் மியாசாக்கி மாம்பழங்களை அவற்றின் வடிவம் மற்றும் பளபளப்பான நிறத்தின் காரணமாக பலரும் 'சூரிய முட்டை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த பணம் கொழிக்கும் மாமரம் குறித்து தெரிந்து கொண்ட உள்ளூர் திருடர்கள் சிலர், அவற்றைத் திருடி செல்ல பழத்தோட்டத்திற்குள் நுழைந்ததால், தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மியாசாக்கி மாம்பழத்தின் பெயர் அவை விளையும் ஜப்பானில் உள்ள ஊரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சராசரியாக இந்த ரக மாம்பழம் ஒன்று 350 கிராம் எடை கொண்டதாக உள்ளது.

எதிர் ஆக்சிகரணிகள், (antioxidant) பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த இந்த மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அறுவடை செய்யப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :