இந்தியாவில் கொரோனா: ஒரே நாளில் 4 ஆயிரம் மரணம், ஸ்டாலினிடம் பேசிய மோதி, கங்கணாவுக்கு தொற்று

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமெடுத்துப் பரவுகிறது. இன்று காலை வெளியான தரவுகளின்படி முந்தைய 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொடர்பான 5 முக்கியத் தகவல்கள்:

1. இன்று காலை இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி முந்தைய 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, கொரோனா தொற்று ஏற்பட்டு 4,187 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் மொத்தமாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை -2,18,92,676. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை - 2,38,270. இன்னும் குணமாகாதவர்கள் எண்ணிக்கை - 37,23,446. தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை - 16,73,46,544.

முதல்வரோடு பேசிய மோதி

2. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோரை தொலைபேசி மூலம் அழைத்து பிரதமர் நரேந்திர மோதி கொரோனா தொற்று நிலவரம் குறித்துப் பேசியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

கொரோனாவை மகாராஷ்டிரம் சமாளிக்கும் விதம் குறித்து பிரதமர் பாராட்டியதாகவும், ஆக்சிஜன், தடுப்பூசி விஷயத்தில் தங்களை வலுவூட்டும்படி முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும் மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் தெரிவிப்பதாகவும் கூறுகிறது ஏ.என்.ஐ.

நேற்று தொலைபேசி மூலம் தம்மை அழைத்த பிரதமர் நரேந்திர மோதி தமது மன்கி பாத் உரை போலவே தம்மிடம் பேசியதாகவும், தாம் கூறவிரும்பியதை கவனிக்கவில்லை என்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. கடந்த 7 நாள்களில் இந்தியாவின் 180 மாவட்டங்களில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. முகமை.

4. பெருந்தொற்றை ஒட்டி, கடந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகள் அனைவருக்கும் இந்த ஆண்டும் 90 நாள் சிறைவிடுப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

5. பாலிவுட் நடிகையும், கடந்த சில காலமாக சர்ச்சைக்குரிய காரணங்களால் செய்தியில் தொடர்ந்து இருப்பவருமான கங்கணா ரனாவத் தமக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

ஆட்சேபனைக்குரிய இவரது பதிவுகள் காரணமாக ட்விட்டர் இவரது கணக்கை சில நாள்களுக்கு முன்பு தடை செய்தது.

கடந்த சில நாள்களாக தமக்கு சோர்வாகவும், பலவீனமாக இருந்ததாகவும், கண்ணெரிச்சல் இருந்ததாகவும் எனவே இமாச்சலப்பிரதேசம் செல்ல விரும்பியதாகவும், அதற்காக தாம் கோவிட் பரிசோதனை செய்தபோது தமக்கு பாசிட்டிவ் வந்திருப்பதாகவும் அவர் தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தம்முடைய உடம்பில் அந்த வைரஸ் விருந்து கொண்டாடிக்கொண்டிருப்பது தமக்குத் தெரியாது என்றும், அதை தாம் இப்போது அழிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். உங்கள் மீது அதிகாரம் செலுத்த எதையும் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :