சென்னை சாலைக்கு மீண்டும் பெரியார் பெயர்: அதிகாலையில் திடீரென மாற்றியது யார்?

பெயர் பலகை
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் ஈ.வெ.ரா பெரியார் சாலை என்ற பெயரை நீக்கிவிட்டு, `கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு' என ஆங்கிலேயர் காலத்துப் பெயர் வைக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் `ஈ.வெ.ரா பெரியார் சாலை' என்ற பெயர் பலகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை செய்தது யார் என்பதுதான் விவாதப் பொருள்.

கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு

சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் பெயரை கடந்த 1979 ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம் செய்தார். பெரியார் நூற்றாண்டையொட்டி அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இந்தப் பெயர் மாற்ற நிகழ்வு நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியார் சாலையானது, `கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு' என உருமாற்றம் அடைந்ததாக தகவல் பரவியது.

நெடுஞ்சாலைத் துறை இணையத்தளங்களில் பெரியார் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறி தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் கொதிப்படைந்தன. `யாருடைய வேண்டுகோளுக்காக மாற்றம் செய்யப்பட்டது. உடனே பெயர் மாற்றத்துக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், மே 2 ஆம் தேதிக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும்,' என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

பா.ஜ.கவுக்கு என்ன தொடர்பு?

எல். முருகன்

பெரியார் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கவே, இதற்கு விளக்கம் அளித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன், ` நெடுஞ்சாலைத்துறையின் பதிவில், `கிராண்ட் வெஸ்டர்ன் சாலை' என்றுதான் உள்ளது. மாநகராட்சியின் பதிவில்தான், `ஈ.வெ.ரா பெரியார் சாலை' என மாற்றியுள்ளனர். இதற்கும் பா.ஜ.கவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தி.மு.க ஆட்சியில் இருந்தபோது நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் ஏன் பெயரை மாற்றவில்லை?' என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக, நேற்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் தி.மு.க எம்.பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரில்மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ` சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. ஆவணத்தில் பெயர் மாற்றாமல் இருப்பது குறித்து பா.ஜ.க தலைவர் முருகன் சொல்வது சற்றும் பொருத்தமற்றது. அவர் அந்த காலத்தில் பிறந்திருக்கவே மாட்டார். கடந்த 52 ஆண்டு காலமாக அண்ணா சாலை என்றும் 46 ஆண்டுகாலமாக காமராஜர் சாலை என்றும் பெரியார் ஈவெரா சாலை 43 ஆண்டு காலமாகவும் அவ்வாறாகத்தான் அழைக்கப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலரே, ஆவணங்களில் இருப்பதாக ஒப்புக் கொண்டார். இவர் யார்?' என தெரிவித்தார்.

பெயர் பலகை

மேலும், தமிழக நெடுஞ்சாலைத் துறை அளித்த விளக்கத்திலும், ` சென்னை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் அது ஈ.வெ.ரா சாலை என அழைக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசின் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டர்ன் சாலை என்றுதான் உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க, பா.ஜ.க மோதல்கள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் `ஈ.வெ.ரா.பெரியார் சாலை' என்ற பெயர் பழையபடி மாற்றப்பட்டது. ` எதிர்ப்பின் காரணமாக அரசே செய்துவிட்டதா?' என்ற தகவலும் பரவியது. இது தொடர்பான விசாரணையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் பழையபடி தந்தை பெரியார் பெயர் இடம்பெற்ற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

இன்று அதிகாலையில் மத்திய ரயில் நிலையம் அருகில் த.பெ.தி.க தொண்டர்கள் ஆறு பேர் சரக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். பின்னர், பெயர்ப் பலகையின் முன்னால் ஆட்டோவை நிறுத்தி அதன்மேல் சாரம் கட்டிவிட்டு `பெரியார் ஈ.வெ.ரா சாலை' என்ற பெயரை ஒட்டியுள்ளனர். சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் பணியின்போது காவலர்கள் யாரும் அப்பகுதியில் தென்படவில்லை. இதன்பின்னர், காலையில் அதே பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி கைதானார்கள்.

எடப்பாடி பழனிசாமி மௌனம் ஏன்?

எடப்பாடி

பட மூலாதாரம், Getty Images

`சட்டரீதியாக போராடாமல் அதிகாலையில் பெயர்ப் பலகையை ஒட்டியது சரியா?' என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``இதில் என்ன தவறு இருக்கிறது? தேர்தல் முடிந்த பிறகு காபந்து அரசு செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பெயரை நீக்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கும்போது, எங்களுக்கான அதிகாரத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டோம். ஆமாம். நாங்கள்தான் பழையபடி பெயரை மாற்றியமைத்தோம். இதுதொடர்பாக, அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இதுவரையில் முதல்வர் பழனிசாமி எதையும் பேசாமல் மௌனம் காக்கிறார். என்ன நடந்தது, இது யாருடைய தவறு என்பது குறித்தும் அவர் பேசவில்லை. எனவே, எங்கள் வேலையை நாங்கள் செய்தோம்" என்றார்.

போராட்டம்

பா.ஜ.கவின் எண்ணம் என்ன?

`` பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு `பெரியார் சாலை' என எம்.ஜி.ஆர் பெயர் வைத்தார். அதை நீக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? தலைவர்களின் பெயர் வைப்பது என்பது காலம்காலமாக நடப்பதுதான். அந்தவகையில், ஆந்திராவில் `பிரகாசம்' என்ற பெயரில் மாவட்டமே உள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் வடமாநில தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. இங்கு படேல் சாலை, திலகர் திடல், விவேகானந்தர் நினைவகம் ஆகியவை உள்ளன. மக்களுக்காக உழைத்தவர்களுக்காக அவர்களை நினைவுகூரும் வகையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. நாம் மொழி, இனம் பார்க்காமல் செய்கிறோம். ஆனால், பா.ஜ.கவின் எண்ணம் அப்படிப்பட்டதல்ல.

டெல்லியில் அக்பர் சாலை, ஒளரங்கசீப் சாலை போன்றவை காலங்காலமாக உள்ளன. ஆங்கிலேயேர் காலத்து ஆவணங்களில் இந்தப் பெயர்கள் உள்ளன. இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தப் பெயர்களை மாற்றிவிட்டு இந்துத்துவ தலைவர்களின் பெயர்களை வைத்துவிட்டனர். தற்போது பெரியார் சாலையின் பெயர் மாற்றப்பட்டதற்கு இவர்கள் சொல்லும் காரணம், ஆவணங்களில், `கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு' என்றுதான் உள்ளது என்கிறார்கள். அப்படியானால், இத்தனை காலம் அந்தப் பெயர்ப் பலகையை யார் வைத்தது, ஆவணங்களைப் பார்க்காமல் நெடுஞ்சாலைத்துறை வைத்திருக்குமா?" என்கிறார்.

ராமகிருஷ்ணன்

எம்.ஜி.ஆருக்கு துரோகம்?

`ஆவணங்களில் இத்தனை ஆண்டுகாலம் பெயர் மாற்றப்படாமல் இருந்தது யார் தவறு?' என்று கேட்டபோது, `` முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் நெடுஞ்சாலைத்துறை உள்ளது. ஆவணங்களில் மாற்றப்படாமல் இருந்திருந்தால் அதற்கான வேலையை இவர்கள் செய்திருக்க வேண்டும். அவர்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக எம்.ஜி.ஆர் இருக்கிறார். பெரியார் பெயரை மாற்றியதன் மூலம், எம்.ஜி.ஆருக்கு இவர்கள் செய்கின்ற துரோகமாகத்தான் பார்க்கிறோம். ஆவணங்களில் உள்ளவற்றைத் திருத்தி எடப்பாடி பழனிசாமி பெயர் வாங்கியிருக்கலாம்.

தமிழ்நாட்டின் அடையாளங்களை பா.ஜ..க அழிக்க நினைக்கிறது. தேர்தலுக்கு முன்னால் செய்திருந்தால் டெபாசிட்டை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில்தான் தேர்தல் முடிந்த பிறகு இவ்வாறு செய்துள்ளனர். பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களை நீக்கும் வகையில் முதலில் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்களை வைத்துவிட்டு பின்னர் இந்தப் பெயர்களையும் நீக்குவதுதான் அவர்களின் இலக்கு. மே 2 ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சி அமையும்போது பெரியார் பெயரை சட்டப்படி நிலை நிறுத்த பாடுபடுவோம்" என்கிறார்.

பின்னணியில் அதிகாரிகளா?

`பெரியார் பெயர் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?' என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``பெயர் மாற்ற விவகாரம் சில நாள்களாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக மாற்றினார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. இது அதிகாரபூர்வமான அறிவிப்பா.. இணையத்தளத்தில் ஏற்பட்ட குளறுபடியா எனத் தெரியவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``மூன்று நாள்களுக்கு முன்னரே பெரியார், அண்ணா, காமராஜர் பெயரை மாற்றிவிட்டதாகக் கூறினார்கள். பெயர் மாற்றம் என்றால் அதனை அரசாணையில் வெளியிடுவார்கள். இந்த விவரங்கள் நெடுஞ்சாலைத்துறை இணையத்தளத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், இதனைப் பரிந்துரையாக வைத்திருக்கிறார்களா எனவும் தெரியவில்லை. தேர்தல் நடத்தை விதிகளுக்குள் நாங்கள் இருப்பதால் இது குறித்த விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார்.

`அப்படியானால், அதிகாரிகளே முடிவெடுத்துச் செயல்பட்டு ட்டார்களா?' என்றோம். ``போராட்டம் நடத்துகிறவர்களும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதிகாரிகளே செய்து விட்டார்களா, எந்த அடிப்படையில் இதனைச் செய்துள்ளனர் எனவும் தெரியவில்லை" என்கிறார்.

காணொளிக் குறிப்பு, பெரியார் வாழும்போது எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: