You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் நிலத்தை கொடுத்த பெங்களூரு முஸ்லிம் முதியவர்
இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப்பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
ஆஞ்சநேயர் கோயிலுக்கு நிலம் கொடுத்த முஸ்லிம்
பெங்களூரு அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக முஸ்லிம் முதியவர் வழங்கியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் 65 வயதுக்கும் எச்.எம்.ஜி.பாஷாவுக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவில் பழைய மெட்ராஸ் ரோட்டில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இதையொட்டி ஒரு வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.
மேலும் அந்த கோயிலைப் புனரமைக்க பக்தர்களும், கோயில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர். இதற்காக பாஷாவிடம், சில பக்தர்கள் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஷா, ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள 1.5 சென்ட் நிலத்தைக் கோயிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி அவர் ரூ.1 கோடி மதிப்பிலான 1.5 சென்ட் நிலத்தை வீர ஆஞ்சனேய சாமி கோயில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார் என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாட்டை யாரும் காணக் கூடாது. நாம் அனைவரும் மனிதர்கள். சில அரசியல் தலைவர்கள் சொந்த நலனுக்காக மக்களிடையே சாதி, இனம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தற்போதைய தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது என்று எச்.எம்.ஜி.பாஷா கூறியுள்ளார் என்று தினத்தந்தி செய்தியில் உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை
தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத் திருத்தத்திற்கு கடந்த எட்டு மாதங்களுக்குப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவைக் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
ரயிலில் சிக்கியிருந்த மனித கால்
சென்னை எழும்பூா் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிக்காக விடப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் சக்கரத்தின் அருகில் சிக்கியிருந்த மனித காலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு இறந்தவருடையது என்பது விசாரணையில் தெரியவந்தது என்கிறது தினமணி செய்தி.
மதுரையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தேஜஸ் விரைவு ரயில் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டது. இந்த ரயில் கொடைரோடு மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நிறுத்தங்களில் நின்றது. அதன்பிறகு, அதேநாள் இரவு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: