இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன், கொரோனா தொற்றின் காரணமாக புதன்கிழமையன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ராமகோபாலனுக்கு, கடந்த 27ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை ராமகோபாலன் உயிரிழந்துள்ளார்.

ராமகோபாலனின் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், ராமகோபாலனின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியம் மன வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நல்ல நண்பர்! பெரியவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறே என்று கூறியுள்ளார்.

சீர்காழியை பூர்விகமாகக் கொண்ட ராமகோபாலன், 1940கள் முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தார். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸின் அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ராமகோபாலன், 1980ல் இந்து முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கினார்.

மீனாட்சிபுரம் மதமாற்றம் நிகழ்வுக்குப் பிறகு, இந்த அமைப்பு பிரபலமானது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் விநாயகர் ஊர்வலங்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்புவரையும்கூட, இந்த விநாயகர் ஊர்வலங்களில் ராமகோபாலன் பங்கேற்று வந்தார்.

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு ஆதரவாகவும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மத மாற்றங்களுக்கு எதிராகவும் கடுமையாக குரல் கொடுத்து வந்தார் ராமகோபாலன்.

1982ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களை மத மாற்றம் செய்யும் முயற்சி நடந்தபோது அதை கடுமையாக எதிர்த்து போராடினார் ராமகோபாலன். தமிழ்நாட்டில் 1990களில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் நடக்கும்போது சென்னையில் இவரது அமைப்பினர் சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பல முறை வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை செய்யத் தொடங்கியது.

இந்து மதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் இவரது அமைப்பைச் சேர்ந்த திருக்கோயிலூர் சுந்தரம், 1981ஆம் ஆண்டில் இஸ்லாமியவாத அடிப்படைவாதிகளால் கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தில் கொல்லப்பட்டார்.

2013இல் வெள்ளையப்பன், 2014இள் கே.பி.எஸ். சுரேஷ் குமார், சி. சசி குமார் என பலரும் கொல்லப்பட்ட நிலையில், அவை அனைத்தும் மத ரீதியிலான கொலை வழக்குகளாக கருதப்பட்டன. ராமகோபலனுக்கும் அச்சுறுத்தல் இருந்ததால், 24 மணி நேரமும் தமிழ காவல்துறை சார்பில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: