You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்களால், பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
குளிக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டும், தனியே வருமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொந்தரவு செய்த நிலையில் சனிக்கிழமை இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக காவல் துறை கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், "எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வீடியோ எடுத்தவர்கள் எனது சித்தப்பா தொலைப்பேசிக்கு அழைத்தனர். அப்போது, உன்னையும், உன் சித்தப்பாவையும் பழிவாங்கவே நீ குளிப்பதை வீடியோ எடுத்துள்ளோம். அதை இந்த தொலைபேசியில் உள்ள வாட்ஸ்ஆப்பிற்கு அனுப்பியிருக்கிறோம் என்றனர். அவர்கள் எனது சித்தப்பா வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியிருந்த வீடியோவில், நான் குளிப்பதை எனக்குத் தெரியாமல் அவர்கள் படமெடுத்தது தெரியவந்தது. பிறகு மீண்டும் போன் செய்தனர். அப்போது அந்த வீடியோ வேண்டுமானால் ஐந்தாயிரம் பணம் தரவேண்டும் என்று கேட்டனர். என் சித்தப்பாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினேன். பணம் கொடுக்க வேண்டாம், இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என எனது சித்தி கூறினார்," என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாணவி, "பிறகு இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு என்னை வேலூர் கோட்டைக்கு வருமாறு அழைத்தனர். வர மறுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினர். அதையடுத்து அந்த வீடியோவை என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். நான் எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்.
மறுநாள் மீண்டும் போன் செய்து அருகே உள்ள ஏரிக்கரை மலைக்கு வருமாறு அழைத்தனர். நான் அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, மூன்று பேரில் ஒருவனைப் பிடித்துக்கொண்டேன், பின்னர் உடனிருந்தவர்கள் ஓடிவிட்டனர். அவனிடமிருந்து தொலைப்பேசியை பிடுங்கி, அதிலிருக்கும் எனது வீடியோவை டெலிட் செய்ய முயற்சி செய்தேன். அப்போது, அந்த தொலைபேசியில் பல பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரிந்தது. அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு, இதுகுறித்து வீட்டிற்கு தெரிவிக்க அங்கிருந்து போன் செய்த நேரத்தில், என்னைத் தலையில் தாக்கிவிட்டு அவன் ஓடிவிட்டான்," என்று கூறிய மாணவி, பிறகே தாம் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, "இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி (வயது 17), கணபதி என்கிற தாமஸ் (வயது 19), ஆகாஷ் (வயது 22) என்ற மூன்று நபர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் இருக்கிறார்," என்று போலீசார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: