ஈரோடு கொடுமணலில் தொல்லியல் ஆய்வுகள் துவங்கின

பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் கொடுமணலில் தொல்லியல் ஆய்வுகள் இன்று காலையில் துவங்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதி. 1985லிருந்தே மத்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை கொடு மணலில் அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன.

அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பே இங்கு அகழாய்வு துவங்கவிருந்த நிலையில், கொரோனா காரணமாக மாநிலம் முழுவதும் அகழாய்வுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த வாரம் மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து கீழடி, ஆதிச்ச நல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் துவங்கப்பட்டன. இப்போது கொடுமணலிலும் ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: