பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்: ’கொரோனாவை தடுக்கும் பொறுப்பை மாநில முதல்வர்களிடம் பிரதமர் அளிக்க வேண்டும்’

பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் ஒரு தலைவர் அமர்ந்துக்கொண்டு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக அந்தந்த மாநில முதல்வர்களிடமே பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகிறார்.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பிபிசியின் அரவிந்த் சாப்ராவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், ''டெல்லியில் உள்ள இணை செயலாளர் ஒரு முறை கூட பஞ்சாப் வரவில்லை, நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு தெரியாது. எனவே மத்திய அரசு மாநிலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கூற எதுவும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

'' மாநில முதலமைச்சர்களாக நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுகிறோம். எங்கள் மாநிலம் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். இணை செயலாளருக்கு எங்கள் மாநிலம் குறித்து பெரிதாக எதுவும் தெரியாது''.

''உங்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்'' இதுவே மத்திய அரசாங்கம் மாநில முதல்வர்களிடம் சொல்ல வேண்டியது.

''எடுத்துக்காட்டாக பட்டியாலா எடுத்துக்கொள்ளுங்கள். பட்டியாலா நகரமா ? மாவட்டமா ? மத்திய அரசாங்கம் பட்டியாலாவை எப்படி அணுகுகிறது ? அந்த மாவட்டத்தில் மொத்தம் 5 நகரங்கள் உள்ளன. அனைத்து நகரங்களும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆனால் மாவட்டம் முழுவதற்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.''

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் முன்பு பிரதமர் நரேந்திர மோதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறதே அந்த ஆலோசனையில் நீங்கள் கலந்துக்கொண்டிர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''இதுவரை நடந்த நான்கு ஆலோசனை கூட்டங்களில் முதல் முறையாக நான்காவது கூட்டத்திற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 35 நாட்களுக்கு பிறகு நேற்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் தான் பிரதமருடன் உரையாற்றினேன்''.

தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கையாக மத்திய அரசு சூழ்நிலை கருதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் பொறுப்பை மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கருதுகிறார்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் பேரிடர் மீட்பு நிதியான 72 கோடியை தவிர மத்திய அரசாங்கம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர வேறு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனவும் பஞ்சாப் முதல்வர் குறிப்பிடுகிறார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்த சென்ற நிகழ்வுகளை அரசாங்கம் எப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''டெல்லியில் இருந்து பிற மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் பலர் நடந்தே சென்றனர். டெல்லி அரசாங்கம் ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தால், நிச்சயம் பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மேற்கு மகாராஷ்டிராவில் இருந்த தொழிலாளர்களை மீண்டும் பஞ்சாப் அழைத்து வர நாங்கள் 80 பேருந்துகளை ஏற்பாடு செய்தோம்'' என்றார் அமரிந்தர் சிங்.

பஞ்சாபில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளி மாநிலத்தில் இருந்து பலர் பஞ்சாபிற்கு வருகை தந்தது தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களால் தான் அதிகம் பரவுகிறது என்றார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிராவில் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்மாநில அரசாங்கம் கூறியது. ஆனால் உண்மையில் பஞ்சாப் வந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தான் பல தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: