மும்பையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் சடலங்களுக்கும் ஒரே அறை

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மே 7ஆம் தேதியன்று பல இந்திய செய்தி ஊடகங்களில் அதிர்ச்சிக்குரிய ஒரு காணொளி வெளியானது. அந்த காணொளி சமூக ஊடகங்களிலும் வைரலானது.

அந்த காணொளி பலரின் இதயத்துடிப்பை நிறுத்தும் வகையில் இருந்தது. அந்தக் காணொளியில் அப்படி என்ன இருந்தது?

அந்த காணொளியில் ஒரு மருத்துவமனையின் உட்பகுதி காட்டப்படுகிறது. அங்கு சுமார் 20 படுக்கைகள் இருக்கும். சில படுக்கைகளில் கருப்பு பாலிதீன் பையால் மூடப்பட்ட சடலங்கள் இருக்கின்றன.

சில படுக்கைகளில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் நோயாளிகள் படுத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாசம் அளிப்பதற்காக வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எந்த விதமான பாதுகாப்பு உடையும் அணியாமல் சிலர் அங்கு நடந்து கொண்டிருந்தனர்.

இந்தக் காணொளி மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சியோன் மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்டது என செய்திகள் வெளியிடப்பட்டது.

'உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்'

இந்த அதிர்ச்சி தரும் காணொளி வெளிவந்த பின்னர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களையும், உயிரிழந்தோரையும் ஒரே இடத்தில் வைத்துள்ளனர் என சர்ச்சை உருவானது.

உடனே ஊடகங்களிலிருந்து மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டனர்.

"கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அவர்கள் உறவினர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் சடலங்கள் மருத்துவமனையிலேயே உள்ளன. இப்போது அந்த சடலங்களை நாங்கள் அப்புறப்படுத்திவிட்டோம். மேலும் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து வருகிறோம்," என சியோன் மருத்துவமனையின் டீன் பிரமோத் இங்லே பி.டி.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

அந்தச் சடலங்கள் பிணவறையில் ஏன் வைக்கப்படவில்லை எனக் கேட்டபோது, "பிணவறையில் மொத்தம் 15 பிரிவுகள் மட்டுமே உள்ளன. அதில் 11ல் ஏற்கனவே சடலங்கள் உள்ளன. அனைத்து சடலங்களையும் பிணவறைக்கு மாற்றினால் கோவிட்-19 ஆல் இறக்காதவர்களின் சடலத்துக்கும் பிரச்சனை ஏற்படும்," என்கிறார் இங்லே.

மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய ஒரு குழு அமைத்து 24 மணி நேரத்திற்குள் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

காணொளி மூலமாக இந்த உண்மையை இந்த விதத்தில் வெளியே கொண்டு வந்தது தவறு மேலும் விசாரணை நடந்து கொண்டுள்ளது என மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியுள்ளார்.

வருங்காலத்தில் இவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காகவே இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உறவினர்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்ற வழிமுறை இருக்க வேண்டும். உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார் பெட்னேகர்.

நிதேஷ் ரானே மற்றும் கிரிட் சோமையாவின் குற்றசாட்டு:

சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் சியோன் மருத்துவமனை நிர்வாகம், மும்பை மாநகராட்சி ஆகியவை செயல்படும் முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நோயாளிகளை சடலங்களின் பக்கத்தில் இருக்க வைப்பது குறித்து தனது கடும் எதிப்பை தெரிவித்துள்ளார்.

நிதேஷ் ரானேவின் இந்த ட்வீட் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதன்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரிட் சோமையாவும் ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.

நிதேஷ் ரானே இந்த காணொளியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த காணொளியில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆகியவை காட்டப்பட்டது.

நேற்று இந்த நிலையை ஏற்று கொள்ள மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. ஆனால் இப்போது இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கப்பட்டது.

மருத்துவமனையில் சரியான பைகள் இல்லை. அதனால் பாலீதீன் பைகளில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன என்றார் கிரிட் சோமையா.

நான் சியான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கே கொரோனா வார்டு எண் 5க்கு சென்று சடலங்களை நோயாளிகளுடன் வைத்திருப்பதை பார்த்தேன். இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளித்தேன் என ட்வீட் செய்துள்ளார் பிஜேபி தலைவர் கிரிட் சோமையா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: