You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம் என்ன செய்கிறது?
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.
பெய்ரூட் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஐஆர்ஜிசி, இஸ்ரேல் மீண்டும் "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்" ஈடுபட்டால், அதற்கான பதிலடி "மிகப் பெரியதாக" இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் "அனைத்து" இலக்குகளும் அதில் அடங்கக்கூடும் என்றும் எச்சரித்தது.
இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
இரான் கூறியது என்ன?
ஹைஃபாவுக்கு தென்கிழக்கே உள்ள ரமத் டேவிட் விமானப்படை தளத்தைத் தாக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி)கூறியது.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.
"ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின்" வடக்குப் பகுதியில் உள்ள பல "இராணுவ நிலைகள்" மீது தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக இரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏப்ரல் மாதம் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் "தொடர்ந்து மீறப்பட்டதைத்" தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியது. இரானின் தெற்குப் பகுதியில் இரானியக் கப்பல்கள் மற்றும் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும் இந்த மீறல்களில் அடங்கும்.
ஏப்ரல் 17 முதல் அமலில் உள்ள போர்நிறுத்தம் பெயரளவில் மட்டுமே உள்ளது. இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு தரப்பினரும் அதைத் தொடர்ந்து மீறி வந்துள்ளனர்.
வார இறுதியில் இரானிய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கடந்த வாரம் கூறியது. அதேவேளையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கத் தளம் ஒன்றை இலக்கு வைத்ததாக இரான் கூறியது.
இரான் தனது பாதுகாப்பையும் தேசிய நலன்களையும் காத்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியது. லெபனான் அல்லது இரான் மீது தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால், அதற்கு "வலுவான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி" கொடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.
லெபனானில் பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், டெஹ்ரானில் அரசாங்கத்திற்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புகைப்படங்களில் காணப்பட்ட பல போராட்டக்காரர்கள், இரானின் கொடிகளையும், இரானின் ஆதரவு பெற்ற லெபனானிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்பான ஹெஸ்பொலாவின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
டிரம்ப் கூறியது என்ன?
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு இரானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் பேசுகையில்: "அவர்கள் ஏற்கனவே தங்கள் ஏவுகணைகளை ஏவிவிட்டார்கள், போதும் என்ற நிலை வந்துவிட்டது. நாம் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஓர் ஒப்பந்தத்தை எட்டுவோம்." என்று கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் பல அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களிடம் பேசியுள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசுவதற்கு முன்னதாக, இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று நெதன்யாகுவை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமான 'ஆக்சியோஸ்' (Axios)-இடம் டிரம்ப் கூறினார்.
'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' (Times of Israel) செய்திப்படி, "இன்றிரவு இனி எந்தத் தாக்குதல்களையும்" பார்க்க விரும்பவில்லை என்று கூறி, இஸ்ரேலின் 'சேனல் 12' (Channel 12) செய்திச் சேனலிடமும் அமெரிக்க அதிபர் அதே கருத்தை வலியுறுத்தினார்.
"இரானின் தாக்குதல்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இரு தரப்பினரும் தங்கள் வேலையைச் செய்தனர். இஸ்ரேல் தாக்கியது, இரானும் தாக்கியது. இப்போது நமக்கு மேலும் தாக்குதல்கள் தேவையில்லை." என்று டிரம்ப் கூறியுள்ளார்.
தான் "இப்போதே" நெதன்யாகுவை அழைத்து, "பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, 'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) உடனான உரையாடலில், இரானுடனான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு வேறு "வழியில்லை" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
"இஸ்ரேலில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல்" காரணமாக, ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.
அனைத்து அமெரிக்க அரசு ஊழியர்களும் "தங்கள் இடத்திலேயே இருக்குமாறும், பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும்" அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் என்ன செய்கிறது?
தலைமைத் தளபதி (Chief of General Staff) நிலைமையை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் (IDF) தங்களது டெலிகிராம் (Telegram) பக்கத்தில் தெரிவித்தன.
"உத்தரவு கிடைத்தவுடன் முழு உறுதியுடன் எதிரியைத் தாக்குவோம்" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஐயல் ஜமீர் (Eyal Zamir) கூறியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
இரான் பொதுமக்களின் மீது "தொடர் தாக்குதல்களை" நடத்துவதை இஸ்ரேலிய ராணுவம் அனுமதிக்காது என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Efi Defrin) செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"மேலும் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு" இஸ்ரேல் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்புகள் "நிறுவப்பட்டுள்ளதாகவும்", தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி "நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும்" டெஃப்ரின் மேலும் கூறினார்.
"லெபனான் முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளைத் தொடரும்; ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும்." என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மோதல் குறித்த அச்சம் அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
உலகளாவிய அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) கச்சா எண்ணெய் விலை 2.6% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 95.50 டாலராகவும், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை 2.5% உயர்ந்து 92.75 டாலராகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதிலிருந்து, எரிபொருள் விலைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டுள்ளன.
இரானுக்கு இஸ்ரேல் பதிலடி
மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
"சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இரானிய பயங்கரவாத ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தாக்கியது," என்று இஸ்ரேலிய ராணுவம் (IDF) தனது டெலிகிராம் பக்கத்தில் கூறியுள்ளது.
உயிரிழப்புகள் அல்லது தாக்குதல்கள் நடந்த சரியான இடம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இரானிய அரசு தொலைக்காட்சி தகவல்
இஸ்ரேல் ராணுவ அறிவிப்பைத் தொடர்ந்து, மூன்று நகரங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக இரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
"டெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹானில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டன," என்று அரசு தொலைக்காட்சி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மத்திய நகரமான கராஜுக்கு அருகிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு