கொரோனா வைரஸ்: முதியோர் உதவித் தொகையை கொரோனா நிதிக்கு அளிக்க வந்த 85 வயது மூதாட்டி

பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பங்களிக்கும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு, முதியோர் உதவித்தொகையாக தனக்குக் கிடைத்த 3000 ரூபாயை அளிக்க வந்திருந்தார் 85 வயதான மூதாட்டி ஒருவர்.

எனினும், இன்று விடுமுறை நாள் என்பதால் அவரால் அந்தப் பணத்தை அளிக்க முடியவில்லை.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த தொகையை கொரோனா நோய்த் தொற்று தடுப்பு செலவினங்களுக்காகக் கொடுத்து வருகின்றனர்.

இதேபோன்று புதுச்சேரியிலும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து நிதி உதவி அளித்துவரும் நிலையில், புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி தையல்நாயகி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதியோர் உதவித்தொகையாக தனக்கு வந்த 3000 ரூபாயை, புதுச்சேரி கொரானா முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுக்க, பல்வேறு தடைகளையும் தாண்டி சட்டப்பேரவைக்கு வந்திருந்தார்.

தையல்நாயகியின் கணவர் உயிரிழந்த பிறகுத் தனது ஒரே மகளான ஆரோக்கிய மாதாவுடன் கடந்த 25 வருடங்களாக புதுச்சேரியில் வசித்து வருகிறார்.

முதுமை காரணமாக, காது சரியாக கேட்காத இவர் தொலைக்காட்சி செய்திகளில் பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருவதைத் தனது மகள் மூலம் கேட்டறிந்தார்.

தனக்கு வரும் முதியோர் உதவித்தொகையை இதேபோன்று தானும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி கொடுக்கவேண்டும் என மகளிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவால் வெளியே வர முடியாமல் ஒருவார காலமாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் இவர். இதனை தொடர்ந்து, தனது பேரன் மணிகண்டன் உதவியுடன் ஆட்டோவின் மூலம் இன்று சட்டப்பேரவை வளாகம் வந்தடைந்தார்.

பின்னர், முதல்வர் அலுவலகத்தில் காசோலையாக அளித்தால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்த காரணத்தினாலும், வங்கிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதாலும், தான் கொண்டு வந்த 3000 ரூபாயை கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் மூதாட்டி திரும்பிச்சென்றார்.

மீண்டும் வரும் திங்கட்கிழமை அன்று திரும்ப வந்து, காசோலையாக கொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தையல்நாயகி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: