You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''ரஜினி அச்சமின்றி பேசுகிறார்'' என்கிறார் குஷ்பூ; மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
துக்ளக் விழாவில் பெரியார் பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செவ்வாய்கிழமையன்று போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
துக்ளக் விழாவில் பெரியார் பற்றி கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என பெரியாரிய அமைப்புகள் தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தான் மன்னிப்பு கேட்கமுடியாது என்றும் அதனை மறந்துவிடுவது நல்லது என்றும் கூறினார். மேலும் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் ரஜினி தவறான ஆதாரத்தைத் தெரிவிப்பதாகக் கூறி சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேநேரம் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் இருப்பதற்கு ஆதரவாகவும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மன்னிப்பு கேட்கமுடியாது என ரஜினி கூறியது தொடர்பாக பேசிய திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், ’பெரியாரைப் பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.ரஜினி அரசியல்வாதி கிடையாது. அவர் நடிகர்தான்.’ என கூறியுள்ளார்.
ரஜினி தனது கருத்தை மாற்றிக்கொள்ளமுடியாது என கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகக் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன். கூறியுள்ளார்.''வரலாற்று ரீதியான கருத்துக்களைப் பேசும்போது பிழைகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், தவறான கருத்தை சொல்கிறார் என ஆதாரங்களைத் தெரிவித்தாலும், கருத்தை பின்வாங்க முடியாது என கூறியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
அவர் வரலாற்றுக் குறிப்புகளை மீண்டும் ஒருமுறை புரட்டிப்பார்க்க வேண்டும். வருத்தம் தெரிவிப்பதும், தெரிவிக்காமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் வரலாற்றை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்,''என திருமாவளவன் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் நடிகையும் ,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பூ பதிவிட்டுள்ளார்.
''ரஜினி கூறிய கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால், அதற்கு மறுப்பு சொல்வது உங்கள் ஜனநாயக உரிமை. ஆனால் ஒரு முடிவை எடுத்த ரஜினி உறுதியாக இருக்கிறார் என்பதை நான் பாராட்டுகிறேன். ரஜினியின் கருத்து சரியானது அல்லது தவறானது என நான் சொல்லமுடியாது. ஆனால் அச்சமில்லாமல் பேசவேண்டும் என்பது முக்கியம். அதை அவர் செய்கிறார்,'' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பூ.
இதை தொடர்ந்து, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி செலுத்தவேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.
’’ஒருவாரமாக பேசாத ரஜினி, நாங்கள் அவரது இல்லத்தை முற்றுகை செய்வோம் என அறிவித்ததும் பேசினார். இவரது கருத்து தவறானது, கருத்தை பின்வாங்க வேண்டும் என்றோம். ஆனால் மன்னிப்பு கேட்கமுடியாது என்கிறார். திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் நீதிமன்றம் மூலமாக நீதி கேட்பதாக முடிவுசெய்துள்ளார்கள். இதுதான் சரியான வழியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.’’ என பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: