மூன்றாம் சார்ல்ஸ் பிரிட்டன் அரசராகப் பிரகடனம் - நிகழ்வில் என்ன நடந்தது?

King Charles III and the Camilla, Queen Consort during the Accession Council at St James's Palace, London

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அரசர் மூன்றாம் சார்ல்ஸ், அரச துணைவியார் கமில்லா ஆகியோர் சனிக்கிழமை நடந்த அக்சஷன் கவுன்சில் கூட்டத்தில்.
பிரசுரிக்கப்பட்டது

லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வில் மூன்றாம் சார்ல்ஸ் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராக முறைப்படி பிரகடனம் செய்யப்பட்டார்.

சனிக்கிழமை காலை நடைபெற்ற பாரம்பரிய நிகழ்வுகளில் ராணியின் இறப்பையொட்டி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடிகள் புதிய அரசர் பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக முழுக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை வரை பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற மேலதிக அறிவிப்புகள் வெளியாகும். அப்போது செப்டம்பர் எட்டாம் தேதி ராணி இறந்ததை ஒட்டி துக்கம் அனுசரிக்கும் விதமாக மீண்டும் அரைக் கம்பத்தில் பறக்கத் தொடங்கும்.

அக்சஷன் கவுன்சிலால் புதிய அரசராக அறிவிக்கப்பட்டவர் பாரம்பரிய வழக்கங்களின்படி நடைபெற்ற நிகழ்வில் அரசராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இத்தகைய ஒரு நிகழ்வு கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை.

Charles III's proclamation ceremony

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய அரசர் பிரகடனத்தால் உற்சாகம்

பிரகடனம் என்பது எதைக் குறிக்கிறது?

ஆக்ட் ஆஃப் செட்டில்மென்ட் 1701 எனும் சட்டத்தின் விதிகளின்படி சார்ல்ஸ் ஏற்கனவே அரசராகத்தான் இருக்கிறார். அவருடைய தாயின் மறைவுக்குப் பிறகு இவர் முறைப்படி அரசர் ஆகிவிட்டார்.

எனவே அக்சஷன் கவுன்சிலின் நோக்கம் என்பது சம்பிரதாயமாக அறிவிப்பது மட்டுமே. நாட்டின் புதிய அரசரின் பெயரை இது அலுவல்பூர்வமாக அறிவிக்கும். ராஜா அல்லது ராணியின் மரணம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் இந்த பிரகடனம் நிகழும்.

ஆனால் இம்முறை இரண்டாம் எலிசபெத் ராணி மரணத்துக்கும் பக்கிங்ஹாம் மாளிகைக்கு அருகிலேயே மத்திய லண்டனில் இருக்கும் புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற இந்த பிரகடன நிகழ்வுக்கும் இடையே சற்று நேரம் அதிகமாகிவிட்டது.

பாரம்பரிய வழக்கங்களுக்கும் மாறாக இம்முறை அக்சஷன் கவுன்சிலின் அறிவிப்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முடிவு செய்தார்.

யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்?

Labour leader Sir Keir Starmer, former British Prime Ministers Tony Blair, Gordon Brown, Boris Johnson, David Cameron, Theresa May and John Major were in attendance for proclamation of King Charles III

பட மூலாதாரம், Getty Images

ப்ரைவி கவுன்சிலை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ப்ரைவி கவுன்சில் என்பது இந்நாள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அரசருக்கு முறைப்படி ஆலோசனை வழங்கும் குழு ஆகும். நோர்மேன் அரசர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து இது இயங்குகிறது. இதில் சுமார் 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இந்த நிகழ்விற்கு 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது அரச துணைவியார் பட்டத்தைப் பெற்றுள்ள, சார்ல்ஸின் 17 ஆண்டு மனைவியான கமில்லா பார்க்கர் பவுல்ஸ், அரசரின் மகனும் புதிய வேல்ஸ் இளவரசருமான வில்லியம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முதல் பாகம் - அரசரின் பெயர் அறிவிக்கப்பட்டது

அக்சஷன் கவுன்சில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டது. அதில் இரண்டாவது நிகழ்வில் மட்டுமே சார்ல்ஸ் கலந்து கொண்டார்.

முதல் தருணத்தில் லார்ட் பிரசிடெண்ட் என்று அழைக்கப்படும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பென்னி மோர்டான்ட் ராணி இறந்ததை அறிவித்தார். இவர் செப்டம்பர் 6ஆம் தேதி பிரதமர் லிஸ் டிரசால் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

இவர் இந்த கவுன்சிலின் எழுத்தரை மூன்றாம் சார்ல்ஸ் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கும் பிரகடனத்தை வாசிக்கச் சொன்னார்.

Soildiers participate in a gun salute for Britain's King Charles, following the passing of Britain's Queen Elizabeth

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, மூன்றாம் சார்ல்ஸ் அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முழங்கிய துப்பாக்கி குண்டுகள்

இந்தக் கூட்டத்தில் கூடியிருந்த சுமார் 200 உறுப்பினர்கள் ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு 'காட் சேவ் தி கிங்' (God Save the King) என்று கூறினர்.

இளவரசர் வில்லியம், பிரதமர் லிஸ் டிரஸ், ஆர்ச்பிஷப் ஜஸ்டின் வில்பை ஆகியோர் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் பின்பு இந்த பிரகடனம் அரச குடும்ப உறுப்பினர்கள், பிரதமர், கேன்டர்பரி ஆர்ச்பிஷப், லார்ட் சான்சிலர், அரசு நிகழ்வுகளை அமைப்பதற்கு பொறுப்பான நோட்பால் கோமகன் இயர்ல் மார்ஷல் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

அனைவரும் கையெழுத்திட்ட பின்பு மீதமுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவிக்கும் பொருட்டு அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பென்னி மோர்டான்ட் கேட்டுக்கொண்டார். அதில் மத்திய லண்டனில் உள்ள ஹைடு பூங்கா மற்றும் லண்டன் டவரில் துப்பாக்கிகள் முழங்குவதற்கான ஆணையும் அடங்கியிருந்தது.

இந்தப் பிரகடனம் பெல்ஃபாஸ்ட், கார்டிஃப், எடின்பரோ மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் வாசிக்கப்பட்டது.

பாகம் இரண்டு - அரசரின் உரை

அக்சஷன் கவுன்சிலின் நடவடிக்கையின் இரண்டாம் பாகமாக புனித ஜேம்ஸ் மாளிகையில் உள்ள அரியணை அறையில் ப்ரைவி கவுன்சில் உறுப்பினர்கள் புதிய அரசரை வாழ்த்தினர். புதிய அரசரால் ப்ரைவி கவுன்சிலில் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்பட்ட முதல் கூட்டம் இது.

Charles III's proclamation ceremony

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்றாம் சார்ல்ஸ் தம் தாயின் மரணத்துக்கு பின் முறைப்படி அரசர் ஆகிவிட்டார். அக்சஷன் கவுன்சில் பிரகடனம் என்பது சம்பிரதாயம் மட்டுமே.

கவுன்சிலின் உறுப்பினர்கள் புதிய அரசரை வரவேற்றதுடன் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் அமராமல் நின்று கொண்டிருந்தனர்.

தமது உணர்ச்சிமிக்க முதல் உரையில் புதிய அரசர் தமது அன்புக்குரிய தாயின் சேவை மிகுந்த வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டதுடன், அவரது காலடித்தடத்தை பின்பற்றுவதற்கும் உறுதிமொழி அளித்தார்.

''நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள சரி செய்ய முடியாத இந்த இழப்பைக் குறித்து ஒட்டுமொத்த உலகமும் என் மீது அனுதாபம் கொள்கிறது. காலம், அர்ப்பணிப்பு மற்றும் பக்தியில் என்னுடைய தாயின் ஆட்சிக் காலம் வேறு எதற்கும் நிகர் இல்லாதது.''

''துயருற்றிற்கும் இந்த நேரத்திலும் அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கைக்கு நாம் நன்றி கூறுகிறோம்,'' என்று அவர் உரையில் குறிப்பிட்டார். தமது உரையில் புதிய பொறுப்புகள் குறித்தும் அரசர் பேசினார்.

''என்னுடைய ஆழமான மரபு மற்றும் எனக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மிகுந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நான் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்,'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

என் அன்புக்குரிய மனைவியின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது என்று அரச துணைவி கமில்லாவை அவர் பாராட்டினார்.

அரசர் சார்ல்ஸ் என்ன உறுதிமொழி ஏற்றார்?

King Charles III and the Camilla, Queen Consort and Prince William, the new Prince of Wales.

பட மூலாதாரம், PA Media

ஆக்ட் ஆப் யூனியனின் சரத்துகளின்படி ஸ்காட்லாந்து தேவாலயத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் புதிய அரசர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஸ்காட்லாந்தில் தேவாலயம் மற்றும் அரசுக்கு இடையே அதிகாரப் பகிர்வு உள்ளது.

இந்த உறுதிமொழியின் இரண்டு பிரதிகளை ப்ரைவி கவுன்சில் முன்பு சார்ல்ஸ் கையெழுத்திட்டார்.

அதில் வேல்ஸ்-இன் புதிய இளவரசர் வில்லியம், அதன் பின்பு அரச துணைவியார் கமில்லா ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டனர்.

கடைசி சாட்சிகள் இதில் கையெழுத்திடும்போது பேண்ட் வாத்தியங்கள் இசைக்க தொடங்கின.

Trumpeters

பட மூலாதாரம், Getty Images

அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிக்கப்பட்ட உறுதிமொழிகளை ஏற்க அரசர் சால்ஸ் மறுத்திருக்கலாம்.

கடைசியாக 1910ஆம் ஆண்டு கத்தோலிக்க மதத்துக்கு எதிரான சொற்கள் இருப்பதாக உறுதிமொழி ஏற்க அரசர் ஐந்தாம் சார்ஜ் மறுத்தார்.

பால்கனியில் என்ன நடந்தது?

இதன் பின்பு நிகழ்வுகள் மாளிகைக்கு வெளியே நடந்தன. ஃப்ரையரி கோர்ட்டில் இருந்து தி மாலுக்குள் அரசர் பிரகடனம் செய்வதை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

''தங்கள் செல்லப் பிராணிகளை தூக்கிக் கொண்டும், மலர்களை ஏந்திக் கொண்டும், ஸ்பைடர் மேன் பைஜாமா அணிந்த ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டும் அவர்கள் வந்தனர்; சூட்டு அணிந்தவர்கள் முதல் சைக்கிளிங் கியரில் இருந்தவர்கள் வரை அங்கு இருந்தனர்,'' என பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் பிரையண்ட் அங்கிருந்து தெரிவிக்கிறார்.

The proclamation of Britain's new King, King Charles III, was read from the Friary Court balcony of St James's Palace in London

பட மூலாதாரம், Getty Images

ஃப்ரையரி கோர்ட்டுக்கு மேலே உள்ள பால்கனியில் கார்ட்டர் கிங் ஆப் ஆம்ஸ் சென்று பிரகடனத்தை வாசித்தார்.

பின்னர் ஸ்டேட் ட்ரம்பேட்டர்ஸ் என்று அழைக்கப்படும் இசைக்கலைஞர்கள் ராயல் சல்யூட் இசைத்தனர்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 'காட் சேவ் தி கிங்' என்ற சொற்களுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அடுத்து என்ன நடக்கும்?

Lord President of the Privy Council (currently Penny Mordaunt MP)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ரைவி கவுன்சில் லார்டு பிரசிடெண்ட் பென்னி மோர்டான்ட் இந்த நிகழ்வை வழிநடத்தினார்.

'காட் சேவ் தி கிங்' என்று ப்ரைவி கவுன்சிலின் எழுத்தர் அறிவிக்கும் முன்பு, ''அரசர், காமன்வெல்த்தின் தலைவர், நம்பிக்கைகளை பாதுகாப்பவர்'' என்று பிரகடனம் செய்தார். இத்துடன் இந்த நிகழ்வு முடிவுக்கு வந்தது.

அதன் பின்பு பென்னி மோர்டான்ட் பிரகடனத்தின் பிரதிகளை வாசித்தார். அவற்றுக்கு அரசர் மூன்றாம் சார்ல்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக ஒப்புதல் அளித்தார்.

ராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் நாளை பொது விடுமுறையாக அறிவித்ததும் அவற்றில் ஒரு பிரகடனமாகும்.

அரசர் சார்ல்ஸின் முடிசூட்டல் நடக்க இன்னும் சில காலம் ஆகலாம். இரண்டாம் எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் உயிரிழந்த பிப்ரவரி 1952க்கும் அவரது முடிசூட்டல் நடந்த ஜூன் 1953க்கும் இடையே 16 மாதங்கள் இருந்தன.