You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசர் சார்ல்ஸ், தேசத்திற்கான தனது முதல் உரையில் என்ன பேசினார்?
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசர் சார்ல்ஸ் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 8, வியாழக்கிழமை அன்று அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அவர் உரையாற்றினார்.
லண்டனில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் ராணியின் நினைவாக நடைபெற்ற சேவையின் ஒரு பகுதியாக இது நடந்தது. இதில் பிரதமர் லிஸ் டிரஸ், எதிர்க்கட்சித் தலைவர் சர் கீர் ஸ்டார்மர், லண்டன் மேயர் சாதிக் கான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் மக்களும் அதில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே ஏராளமானோர் கூடி 96 வயதில் உயிரிழந்த ராணிக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அரசர் சார்ல்ஸ் தனது உரையில் கூறிய சில முக்கிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.
1. மறைந்த தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்
அரசர் சார்ல்ஸ், தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு அஞ்சலி செலுத்தி தனது உரையைத் தொடங்கினார்.
அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் "ஓர் உத்வேகம்" மற்றும் "எடுத்துக்காட்டு" என்று ராணியை விவரித்தார்.
"தாயின் அன்பு, பாசம், வழிகாட்டுதல், புரிதல், முன்மாதிரியாகத் திகழுதல் ஆகியவற்றுக்காக எந்தவொரு குடும்பத்தையும் போலவே நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்."
அவருடையது "நன்கு வாழ்ந்த வாழ்க்கை" என்று அவர் அரசர் சார்ல்ஸ் கூறுகிறார். மேலும், "அவர் மறைந்த நிலையில் அவருக்கு மிக ஆழமாக இரங்கல் வெளிப்படுகிறது" என்றும் கூறினார்.
2. தேசத்தையும் காமன்வெல்த்தையும் குறிப்பிட்டார்
அரசர் சார்ல்ஸ் ராணியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் அடைந்த துயரம் குறித்து மட்டும் பேசவில்லை. ஆனால், அந்த இழப்பு தேசத்திலும் அதற்கு அப்பாலும் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசினார்.
"எனது குடும்பத்தினர் அனைவரும் அனுபவிக்கும் தனிப்பட்ட வருத்தத்துடன், பிரிட்டன், ராணி அரசுத் தலைவராக இருந்த நாடுகள், காமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் உள்ள உங்களில் பலருடன், 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆழ்ந்த நன்றியுணர்வைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தக் காலத்தில் என் அம்மா, ராணியாக, பல நாடுகளின் மக்களுக்குச் சேவை செய்தார்," என்று அவர் கூறினார்.
"என் தாயின் நினைவாக நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது சேவை வாழ்வை நான் மதிக்கிறேன். அவரது மரணம் உங்களில் பலருக்கும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது என்பதை நான் அறிவேன். அந்த இழப்பின் உணர்வை அளவிட முடியாத அளவுக்கு உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்."
3. அவர் மன்னராகத் தனது பங்கு குறித்துப் பேசினார்
தனது உரையின்போது, அரசர் சார்ல்ஸ் புதிய அரசுத் தலைவராக அவர் எடுத்துக்கொள்ளும் கடமைகள் குறித்தும் பேசினார்.
"இங்கிலாந்து திருச்சபையுடன் (சர்ச் ஆஃப் இங்கிலாந்து) அரியணைக்கு உள்ள குறிப்பான உறவுகள், பொறுப்புகளைப் போலவே, அரியணைக்கு ஒரு வகிபாகமும், கடமைகளும் உள்ளன. இந்த திருச்சபையில்தான் எனது நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது," என்று அவர் கூறினார்.
"அந்த நம்பிக்கையிலும் அது புகட்டும் நெறிகளிலும், மற்றவர்களுக்கான நம் கடமை உணர்வைப் போற்றுவது, நமது தனித்துவமான வரலாற்றின் மதிப்புமிக்க மரபுகள், சுதந்திரங்கள், பொறுப்புகள் மற்றும் நமது நாடாளுமன்ற ஆட்சி முறை ஆகியவற்றின் மீது மிகுந்த மரியாதையுடன் நான் வளர்க்கப்பட்டேன்."
"ராணி இத்தகைய அசைக்க முடியாத ஈடுபாட்டுடன் செய்ததைப் போல், நானும் இப்போது உறுதியளிக்கிறேன். கடவுள் எனக்களிக்கும் மீதமுள்ள நேரம் அனைத்தையும் நம் தேசத்தின் இதயத்திலுள்ள அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த வழங்கியுள்ளார்."
"நீங்கள் பிரிட்டனிலோ அல்லது உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களில் எங்கு வாழ்ந்தாலும், உங்கள் பின்னணி அல்லது நம்பிக்கை எதுவாக இருந்தாலும், என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ய முயல்வேன்."
4. அவர் தனது குடும்பத்தைப் பற்றிப் பேசினார்
அரசர் தனது உரையில் தனது குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர்கள் ஏற்கவுள்ள சில முக்கியப் பொறுப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
அவரது மனைவி கமில்லா இப்போது அரசரின் துணைவியாக ராணியாக இருக்கிறார். அதேநேரத்தில் அவரது மகன் வில்லியம் வேல்ஸ் இளவரசராகிறார்.
"எனது வாரிசாக, வில்லியம் இப்போது ஸ்காட்டிஷ் பட்டங்களை எடுத்துக் கொள்கிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அவர் எனக்குப் பிறகு கார்ன்வால் கோமகன் ஆனார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மேற்கொண்டுள்ள கார்ன்வால் கோமகனுக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.
இன்று, நான் அவரை வேல்ஸ் இளவரசர் ஆக்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த பட்டத்தை என் வாழ்க்கை மற்றும் கடமைகளின்போது ஏந்தியிருந்ததற்கு நான் மிகவும் பாக்கியம் பெற்றுள்ளேன்," என்றார்.
தனது உரையில் அவர் இரண்டாவது மகன் ஹேரியையும் குறிப்பிட்டுள்ளார்.
"ஹேரியும் மேகனும் தங்கள் வாழ்க்கையை வெளிநாட்டில் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான என் அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்."
5. சில இதயபூர்வமான வார்த்தைகளுடன் முடித்தார்
அரசர் தன் வாழ்நாள் முழுவதும் தனது தாயார் செய்த அனைத்துக்கும் நன்றி கூறி மாளிகையிலிருந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.
"என் அன்பான அம்மா, என் அன்பான மறைந்த தந்தையுடன் சேர்வதற்கான உங்கள் கடைசி பெரிய பயணத்தைத் தொடங்கும்போது உங்களுக்கு இதைச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய நம் குடும்பம் மற்றும் தேசங்களின் குடும்பத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி.
"தேவதைகள் உங்கள் ஓய்வுக்காகப் பாடட்டும்."
அரச குடும்பசெய்தியாளர் சான் காக்லனின் பகுப்பாய்வு
துக்கத்தின்போது அவரது குடும்பத்தைப் பற்றிய மறைக்கப்படாத உணர்ச்சிகள் நிறைந்த, அரசர் சார்ல்ஸின் மிகவும் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திய பேச்சு இது.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகியோர் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக மாறுவார்கள், அடுத்த தலைமுறைக்கு இது கைமாற்றப்படுகிறது என்ற தலைப்பு அறிவிப்பும் இதில் அடங்கும்.
அவர் தனது வாழ்வின் மையத்தில் இருந்த இரண்டு பெண்களை கௌரவப்படுத்தினார். அவரது தாயான ராணி மற்றும் அவரது "அன்பான மனைவி" கமில்லா.
அவர் தனது தாயின் இழப்பில் அடைந்த "ஆழ்ந்த வருத்தம்" அவரது "நன்கு வாழ்ந்த வாழ்க்கை" மற்றும் அவரது "கடமைக்கான தியாகங்கள்" பற்றிப் பேசினார். பல தசாப்தங்களாக மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு இடையே, அவர் தனது சேவை உணர்வுடன் உறுதியாக இருந்தது குறித்துப் பேசினார்.
புதிய அரசர் புதிய ராணியாகும் அவருடைய மனைவி கமில்லா "உறுதியான அர்ப்பணிப்புடன்" இருப்பதாகப் பாராட்டினார். அவரது வாழ்வில் கமில்லா வகிக்கும் முக்கியமான மற்றும் வேறு யாராலும் நிரப்ப முடியாத பங்கை தெளிவுபடுத்தினார்.
"ஹேரி, மேகன் வெளிநாட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டியெழுப்புகிறார்கள்" என்பது குறித்த அன்பின் வெளிப்பாடும் இருந்தது.
மற்றுமொரு தெளிவான செய்தியாக, சார்ல்ஸ் நீண்டகாலத்திற்கு அரசராக இருப்பார், அரியணை அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடவுள் தனக்களிக்கும் நேரத்தில் அர்ப்பணிப்போடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
எந்த ஆடம்பரமும் இல்லாமல், ஆட்சி செய்வதைவிட சேவை செய்வதாக உறுதியளிக்கும் வகையில், அதுவொரு முக்கியமான தொனியை அமைக்கும் பேச்சாக இருந்தது. மேலும் இந்த உரை அவருடைய இரண்டு விருப்பங்களான ஷேக்ஸ்பியரையும் மதத்தையும் தொட்டுச் சென்றது.
அரச உலகில் எதுவும் தற்செயலானதாக இல்லை என்றாலும், பக்கிங்ஹாம் மாளிகையிலிருந்து ஆற்றிய இந்த உரை வலிய அதற்கான சுய அடையாளத்தைக் கொண்டிருந்தது.
அவருடைய தாய் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை வழங்கப் பயன்படுத்திய அறையில் அவர் பேசும்போது, இனிப்பு பட்டாணி மற்றும் ரோஸ்மேரி ஆகியவை இருந்தது அவரது நினைவைப் போற்றும் வகையில் இருந்தது.