சிப் நெருக்கடி: உலகத்தை அச்சுறுத்தும் பெரும் தொழில்நுட்பச் சிக்கல்

சைமன்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

பண்டிகைக் காலத்தில் தொழில்நுட்பக் கருவிகளை ஏற்கனவே வாங்காதவர்களுக்கு அவை சரியான நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்று உலகின் தலைசிறந்த சிப் வடிவமைப்பு நிறுவனத்தின் அதிபர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

சிப் நிறுவனமான ARM-இன் தலைமை நிர்வாகி சைமன் செகர்ஸ், தயாரிப்புக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி இதுவரை கண்டிராத "மிக தீவிரமானது" என்று கூறுகிறார்.

இதற்கு முன் எப்போதும் இல்லாத இந்த நெருக்கடி 2022-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் சரி செய்யப்பட வாய்ப்பில்லை என்று அவர் கணிக்கிறார்.

சில நேரங்களில் சிப் எனப்படும் மின்சுற்று அட்டைக்கான காத்திருப்புக்கு 60 வாரங்களை வரை ஆகக்கூடும் என்கிறார் அவர்.

உலக அளவில் கிறிஸ்துமஸுக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் தொழில்நுட்ப உலகம் நெருக்கடியில் இருக்கிறது.

போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை சைமன் எச்சரித்தார். "உங்கள் எல்லா சாதனங்களையும் இன்னும் வாங்கவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றமடையலாம்" என்று அவர் கூறினார்.

"இதற்கு முன் இப்படி எப்போதும் இருந்ததில்லை"

ARM நிறுவனத்தின் சிப்கள் தான் உலகின் பல ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் பிரிட்டனின் NVIDIA நிறுவனத்தால் கடந்த செப்டம்பரில் வாங்கப்பட்டது.

ஆனால் இந்த கையகப்படுத்தும் உடன்பாடு இப்போது ஐரோப்பிய கமிஷன் போட்டி விசாரணையின் கீழ் இருக்கிறது. ARM தொழில்நுட்பம் தாராளமாகக் கிடைப்பதைக் கட்டுப்படுத்து என்விடியா நிறுவனம் எதையும் செய்யும் என்று நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

'இது சிக்கலானது; பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது'

இந்தச் சிக்கல் ஏற்பட்டதற்கு மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்றுதான் என்கிறார் சைமன். தொற்றுநோய் பாதிப்பின்போது இதற்கு முன் இல்லாத அளவுக்கு மாறுபட்ட பல கருவிகளின் தேவை ஏற்பட்டது. பொதுமுடக்கம் அமலில் இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு மக்கள் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினர். குழந்தைகள் வீட்டில் இருந்தே கல்வி கற்க நேரிட்டது. இதற்கெல்லாம் புதிய கருவிகள் தேவைப்பட்டன என்று இந்தச் சிக்கல் குறித்து சைமன் விளக்குகிறார்.

மேலும் கார்களுக்கான திடீர் தேவை அதிகரிப்பு, ஆசியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையேயான புவிசார பதற்றங்களும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

5G இன் வெளியீடு, Huawei மீதான அமெரிக்கத் தடைகள் உள்ளிட்டவையும் இந்த நெருக்கடிக்குக் காரணிகள் என்று சுட்டிக் காட்டப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :