வியட்நாமில் கொரோனா பாதித்தவர் பலி - பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

Vietnam: Man gets five years in jail for spreading Covid

பட மூலாதாரம், THANH NIEN

பிரசுரிக்கப்பட்டது

வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லீ வான் த்ரி எனும் அந்த இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்று நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. அந்த எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்து விட்டார்.

வியட்நாமில் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் குறைவாகவே இருந்தது. எனினும் டெல்டா திரிபு காரணமாக அங்கு சமீபத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் 13,300க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான உயிரிழப்புகள் கடைசி சில மாதங்களில் நிகழ்ந்தவை. இதுவரை வியட்நாமில் கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் ஹோ சி மின் சிட்டி நகரைச் சேர்ந்தவர்கள்.

இதன் காரணமாக ஹோ சி மின் சிட்டியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளன.

உண்மையை மறைத்த இளைஞர்

28 வயதாகும் லீ வான் த்ரி ஹோ சி மின் நகரத்திலிருந்து தமது சொந்த மாநிலமான கா மாவிற்கு ஜூலை மாத தொடக்கத்தில் வந்துள்ளார்.

கொரோனா

ஜூலை மாதம் லீ வான், கா மா மாநிலத்திற்கு வந்தபொழுது வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என விதி இருந்தது.

ஆனால் அவர் சுய தனிமைப்படுத்தல் செய்துகொள்ளவில்லை. ஆனால் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது

அவர் இரு சக்கர வாகனம் மூலம் பயணித்து வந்தது குறித்த தகவல்களை மறைத்ததுடன் தனிமைப்படுத்துதல் விதிகளை பின்பற்றாமல் இருந்துள்ளார்.

இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் சென்ற சமூக நல மையம் ஒன்றின் ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது ஒரே நாள் மட்டுமே நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் உறுதியானது.

இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உடன் இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :