அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி உறவை அம்பலப்படுத்திய பெண் மரணம் மற்றும் பிற செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி ஆகியோர் இடையே இருந்த உறவை வெளிப்படுத்திய முன்னாள் அரசுப் பணியாளர் லிண்டா டிரிப் உயிரிழந்துள்ளார்.

கிளிண்டனின் உறவை லிண்டா டிரிப் வெளிப்படுத்தியதால், 1998ல் அவரது அதிபர் பதவியே பறிபோகும் நிலை உருவானது. கிளிண்டன் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு ஏற்பட்டது.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த 70 வயதாகும் லிண்டா உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு அலுவலகமான பெண்டகனில் பணிபுரிந்துவந்த டிரிப், மோனிகாவின் தோழியாக இருந்த நேரத்தில் கிளிண்டனுடனான உறவை அறிந்து கொண்டார். அதோடு 1997ல் மோனிகா லெவின்ஸ்கியுடன் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யத் தொடங்கினார் டிரிப்.

மோனிகா லெவின்ஸ்கியின் நீல நிற உடையில், அதிபர் கிளிண்டனின் விந்தணு இருந்தது என்று கூறப்பட்ட தகவல்களை டிரிப் வெளிப்படுத்தினார்.

உரையாடல்கள் அடங்கிய அந்த டேப்பை, அரசு சிறப்பு வழக்கறிஞரிடம் டிரிப் ஒப்படைக்க, அது கிளிண்டனின் நிர்வாகத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. 1998ல் கிளிண்டனை அதிபர் பொறுப்பில் இருந்து நீக்க நாடாளுமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மோனிகா லெவின்ஸ்கி உடனான தன்னுடைய உறவை மறைத்ததாக 1998ல் குடியரசுக் கட்சியினர் கிளிண்டன் மீது பதவிநீக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றினர். ஆனால், அது செனட் சபையில் நிறைவேறவில்லை.

2001ஆம் ஆண்டு கிளின்டன் நிர்வாகத்தின் இறுதி நாளில் டிரிப், பணி நீக்கம் செய்யப்பட்டார் லிண்டா டிரிப். பின்னர் தனது கணவருடன் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

டிரிப் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதை அறிந்த மோனிகா, "கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், டிரிப் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்" என ட்வீட் செய்திருந்தார். 1998ல் கிளின்டனுக்கு எதிரான விசாரணையில் சாட்சியளித்த மோனிக், "நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். டிரிப்பை வெறுக்கிறேன்" என்று கூறி தன் உரையை முடித்தார்.

தமிழகத்தில் கொரோனா: விரிவான தகவல்கள்

தமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டுமா?

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி காலை அனைத்து மாநில எம்பி-க்களுடனும் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தினார்.

வரலாறு காணாத அளவு சரிந்த இலங்கை ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டாலரின் விற்பனை விலை 200.46 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ ஊழியர்கள் 180 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: