You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கலிஃபோர்னியா காட்டுத்தீ: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம் - என்ன நடக்கிறது அங்கே? மற்றம் பிற செய்திகள்
கலிஃபோர்னியா காட்டுத்தீ
கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெருங்காற்றின் காரணமாக மேலும் பல இடங்களுக்கு பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு சான்பிரான்ஸிகோவில் உள்ள 50 ஆயிரம் பேரை வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளுக்கு மின்சார சக்தியை வழங்கி வரும் பசிஃபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக் முகமை, அடுத்த 48 மணி நேரத்திற்கு மின்சாரத்தைத் துண்டிக்கப் போவதாகக் கூறி உள்ளது. இதன் காரணமாக 20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதுவரை இந்த காட்டுத்தீயின் காரணமாக 10,300 ஹெக்டேர் பரப்பளவிலான காடு எரிந்து நாசமாகி உள்ளது.
கடந்தாண்டும் கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டது. அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, காலநிலை மாற்றத்துக்கும் காட்டுத்தீக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை விவரித்தது.
2018ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 3.15 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் சேதமாகின.
சிலி போராட்டம்: மாற்றத்துக்காக 10 லட்சம் பேர் அமைதிப் பேரணி
சீர்திருத்தம் கோரியும், பாகுபாடுகளைக் களையவேண்டும் என்று வலியுறுத்தியும் சிலி நாட்டின் தலைநகரில் சுமார் 10 லட்சம் பேர் பல மைல் தூரம் அமைதியான முறையில் பேரணியாகச் சென்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் பல மைல்கள் நகரைச் சுற்றி நடந்து சென்று பானைகளைத் தட்டியும், கொடிகளை அசைத்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பல நாள்களாக நடக்கும் இந்தப் போராட்டம் நாட்டின் வரலாற்றுத் தருணம் என்று கூறியுள்ளார் சாண்டியாகோ ஆளுநர் கர்லா ரூபிலார்.
விரிவாகப் படிக்க:சிலி போராட்டம்: மாற்றத்துக்காக 10 லட்சம் பேர் அமைதிப் பேரணி
சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம்
இதுவரை எடுக்கப்பட்டதிலேயே, சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலார் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன் கோளின் சுற்றுவட்ட பாதையினுள் நிறுத்திக்கொண்டு, அங்கிருந்து சூரியனின் பரப்பை ஆய்வு செய்ய தனது தொலைநோக்கியைத் திருப்பும்.
இதிலுள்ள பிற கருவிகள், சூரியனிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் அவற்றின் காந்தபுலம் ஆகியவற்றை கவனிக்கும்.
விரிவாகப் படிக்க:சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம் - விரிவான தகவல்கள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்செனை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.
இரவு முழுவதும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இப்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்சரிவால் குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்றது கவலையடைய வைக்கும் செய்தியாக உள்ளது.
விரிவாகப் படிக்க:'அம்மா ஏன் இன்னும் வரல என்பதே குழந்தையின் கவலையாக இருக்கும்'
தரையில் நகரும் அதிசய விரால் மீன்: அலறும் அமெரிக்கா
இந்த வடக்கு விரால் மீனைப் பிடித்தால் அதை அப்படியே உயிரோடு வைக்காதீர்கள்; கொன்று அதை குளிர்ப்பதனம் செய்து வையுங்கள். ஏனெனில், இவ்வகை மீன்களால் நிலத்திலும் வாழ முடியும்.
இந்த எச்சரிக்கை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் இயற்கை வளத்துறையிடமிருந்து வந்தது. இது வேட்கையுடன் தாக்கும் மீன் தொடர்பாக 15வது எச்சரிக்கை ஆகும்.
விரிவாகப் படிக்க:தரையில் நகரும் அதிசய விரால் மீன்: அலறும் அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்