செளதி அரேபியா: சாலையில் நடனம் ஆடிய 14 வயது சிறுவன் கைது

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

செளதி அரேபியாவின் பரபரப்பான சாலையின் நடுவே `மெக்ரீனா` எனும் புகழ்பெற்ற பாடலின் நடனத்தை ஆடும் 14 வயது சிறுவனின் காணொளி டிவிட்டரில் வைரலாக பரவிய நிலையில், அச்சிறுவன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

`தவறான பொது நடத்தையை` செய்ததாக இச்சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இச்சிறுவன் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

செளதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜெட்டா நகரின் முக்கிய சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில், தென்மேற்கு செளதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில், `டாபிங்` எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டார்.

இச்சிறுவன் சாலை போக்குவரத்தை மறித்து, சாலையின் நடுவே 1990களில் பிரபலமான பாடலுக்கு நடனமாடுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்தக் காணொளி முதன் முதலில் 2016 ஜூலை மாதம் சமூகவலை தளங்களின் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

பழமைவாத நாடான செளதி அரேபியாவில் நெறிமுறைப்படுத்தபட்ட தண்டனைச் சட்டம் இல்லாததால், அங்குள்ள சிறுவர்களை கைது செய்யவும் தண்டிக்கவும் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.

இக்காணொளி தொடர்பாக ஆதரவான மற்றும் முரண்பட்ட கருத்துகளை சமூக ஊடக பயன்பாட்டாளர்களை வெளியிட்டு வருகின்றனர். இச்சிறுவனுக்கு ஆதரவாக சிலர் கருத்து கூறி வருவதுடன், அச்சிறுவனை `ஹீரோ` என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.

மற்றவர்களோ அச்சிறுவனின் செயல்,`ஒழுக்கக் கேடானது` என கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :