மாஸ்கோவில் 133 பேர் பலியான தாக்குதலில் பிடிபட்ட 4 பேரும் யார்? ரஷ்யா புதிய தகவல்
வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 23) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஒரு இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தத் தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விவரித்துள்ளார்.
குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இஸ்லாமிய அரசு எனப்படும் ஐஎஸ் அமைப்பு ஓர் அறிக்கையின் மூலம் தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அமைப்பின் எந்தக் கிளை இதைச் செய்தது எனக் குறிப்பிடவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவை தாக்க ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
மாஸ்கோவில் ‘பெரிய கூட்டங்களை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா அப்போது கூறியிருந்தது. இருப்பினும் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலில் போதுமான, நம்பகமான விவரங்கள் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.
தங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என யுக்ரேன் உடனடியாக மறுத்தது. போர்க்களத்தில் மட்டுமே நாங்கள் தாக்குவோம் என்று அது கூறியது.
மாஸ்கோவில் சனிக்கிழமை பிற்பகல் வரை அதிபர் புதின் ரஷ்ய சோகத்தில் மூழ்கியுள்ள பொதுமக்களிடையே உரையாற்றினார்.
கொலையாளிகளை இரண்டாம் உலகப் போரின் நாஜிக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், ரஷ்ய மக்களுடைய ஒற்றுமையின் பலத்தை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். ஞாயிற்றுக்கிழமை, தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், REUTERS/MAXIM SHEMETOV
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



