கண்ணீருடன் விடைபெற்றார்: உலகக்கோப்பையில் ரொனால்டோ வசமுள்ள 2 சாதனைகள்

பட மூலாதாரம், Richard SellersSportsphotoAllstar via Getty Images
- எழுதியவர், எம்லின் பெக்லி
- பதவி, பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. போர்ச்சுக்கலுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய கடைசி உலகக் கோப்பை ஆட்டம் இதுவாகும். இதனால், கால்பந்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரின் வாழ்க்கைப் பயணம் மிகப்பெரிய பரிசு இல்லாமலேயே முடிவுக்கு வருகிறது.
டல்லாஸில், மிக்கேல் மெரினோ அடித்த கோல் ஸ்பெயினை அடுத்த சுற்றுக்கு அனுப்பியதால், தனது உலகக் கோப்பை கதை முடிவுக்கு வந்தபோது ரொனால்டோ கண்ணீர் சிந்தினார்.
41 வயதான இவர், ஐந்து முறை பலோன் டி'ஓர், ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோ 2016 சாம்பியன் பட்டங்களை வென்றவர். இவர் தனது கிளப் மற்றும் நாட்டிற்காக உலக சாதனை அளவாக 976 கோல்களை அடித்துள்ளார்.
ஆறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். 2006-ல் தனது முதல் தொடரில் போர்ச்சுக்கல் அரையிறுதியை எட்டியபோது, அவர் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் சென்றார்.
இதுவே தனது கடைசி உலகக் கோப்பை என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தனது நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவாரா என்று கேட்கப்பட்டபோது, "நான் குடும்பத்தினரைச் சந்தித்து, நிதானமாக முடிவெடுப்பேன்" என்று பின்னர் கூறினார்.
ஒவ்வொரு போட்டியிலும் ரொனால்டோவை களமிறக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு போர்ச்சுக்கலுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருந்திருக்குமா என்பது விவாதத்திற்குரியதாகவே இருக்கும்.
இருப்பினும், பிபிசி ரேடியோ 5 லைவ் நிகழ்ச்சிக்காக டெக்சாஸில் இருந்த பிபிசி வர்ணனையாளர் கிறிஸ் சட்டனுக்கு இதில் எந்தக் கேள்வியும் எழவில்லை.
"அவர் ஒரு வயதான நபரைப் போல மைதானத்தில் தள்ளாடுகிறார், அதனால்தான் போர்ச்சுக்கல் வெளியேறியுள்ளது," என்று இங்கிலாந்தின் முன்னாள் முன்கள வீரர் கூறினார்.
"கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒன்றும் செய்வதில்லை; அவர் ஒன்றும் செய்யவில்லை.
"ராபர்டோ மார்டினெஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஒரு வீரரை எப்படி இவ்வளவு தூரம் புகழ்ந்து பேச முடியும்?
"ராபர்டோ மார்டினெஸ் காரணமாகவே போர்ச்சுக்கல் வெளியேறியுள்ளது."
இறுதி விசில் ஒலித்த பிறகு, பயிற்சியாளர் மார்டினெஸ் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்து, "கால்பந்து ஜாம்பவான்" ரொனால்டோவைப் பாராட்டினார்.
"இந்த உலகக் கோப்பையில் அவர் சாதிக்க முயன்றதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்," என்று மார்டினெஸ் கூறினார்.

பட மூலாதாரம், Lars BaronGetty Images
ரொனால்டோ விளையாடியிருக்க வேண்டுமா?
கடந்த சில முக்கியப் போட்டிகளில், ரொனால்டோ ஆட்டத்தைத் தொடங்க வேண்டுமா என்பது ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
அவர் தனது நாட்டிற்காக 146 கோல்களை அடித்துள்ளார், இது ஆண்கள் சர்வதேச கால்பந்தில் ஒரு சாதனையாகும். ஆனால் சமீப காலமாக, அவர் களத்தில் வேறு எதையும் பெரிதாக வழங்குவதில்லை என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
விளையாட்டையும் தாண்டிய புகழும் அந்தஸ்தும் இருப்பதால், மார்டினெஸ் அவரை அணியிலிருந்து நீக்கத் துணியவில்லை.
ஆனால், உலகின் சிறந்த தடுப்பாட்டக்காரர்கள் மற்றும் நடுக்கள வீரர்கள் நிறைந்த ஒரு அணி, கடைசி 16 சுற்றுக்கு முன்னேறுவதை விட சிறப்பாகச் செயல்பட எதிர்பார்த்திருக்கலாம்.
கடந்த இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் வெல்ல உதவிய வீரர்களில் 4 பேர் போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தனர். இடது பக்க தடுப்பாட்டக்காரர் நூனோ மெண்டஸ், நடுக்கள வீரர்கள் விட்டினா மற்றும் ஜோவோ நெவ்ஸ், மற்றும் இந்த கோடையில் ஏசி மிலானில் இணைந்த முன்கள வீரர் கோன்காலோ ராமோஸ் ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.
மான்செஸ்டர் யுனைடெட்டின் புருனோ பெர்னாண்டஸ் பிரீமியர் லீக்கின் ஆண்டின் சிறந்த வீரர்.
"ராமோஸ் எப்படி களமிறங்காமல் போனார்?" என்று சட்டன் கேட்டார்.
"இது ஒரு மேலாளருக்கு ஒரு முழுமையான அவமானம், அவர் தனது நட்சத்திர வீரரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்."
"போர்ச்சுகல் இதுவரை கண்டிராத மிகவும் புகழ்பெற்ற வீரர் அவர்தான், ஆனால் நீங்கள் அதைவிட வலிமையாக இருக்க வேண்டும்."
ரொனால்டோ இந்தத் தொடரை மூன்று கோல்களுடன் முடித்தார்; உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு கோல்களும், குரோஷியாவுக்கு எதிராக ஒரு பெனால்டி கோலும் அடித்தார்.
ஆனால், 10 வீரர்கள் அதிக கோல்கள் அடித்திருந்த போதிலும், 2026 உலகக் கோப்பையில் ரொனால்டோவின் 18 ஷாட்களை விட நான்கு வீரர்கள் மட்டுமே அதிக ஷாட்களை அடித்திருந்தனர்.
தற்போது 7 கோல்களுடன் அதிக கோல் அடித்த வீரர்களில் ஒருவராக இருக்கும் எர்லிங் ஹாலண்ட் அடித்த அதே எண்ணிக்கையிலான ஷாட்களை ரொனால்டோ அடித்திருந்தார்.
ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் தனது சக வீரருக்கு ஒரே ஒரு வாய்ப்பை மட்டுமே உருவாக்கினார்.
போர்ச்சுகலின் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது நிமிடங்கள் தவிர மற்ற அனைத்து நிமிடங்களிலும் ரொனால்டோ விளையாடியிருந்த போதிலும், உலகக் கோப்பையில் சுமார் 366 வீரர்கள் அவரை விட அதிக முறை பந்தைத் தொட்டிருந்தனர்.
மார்டினெஸ் கூறுகையில், "உங்களுக்கு ஒரு கோல் தேவைப்படும்போது, குறைந்தபட்சம் 90 நிமிடங்களுக்காவது கிறிஸ்டியானோவை வெளியே எடுக்க முடியாது. அவர் உடல்ரீதியாகத் திறமையானவர். அவரது இருப்பு மற்றும் அவரது அனுபவம் எங்களுக்குத் தேவை." என்றார்.

பட மூலாதாரம், Aric Becker AFP via Getty Images
மெஸ்ஸி - ரொனால்டோ தொடரும் ரசிகர்களின் விவாதம்
ஸ்போர்டிங், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் யுவென்டஸ் அணிகளின் முன்னாள் முன்கள வீரரான ரொனால்டோ மற்றும் அவரது நீண்டகாலப் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் புகழ், கால்பந்து ரசிகர் வட்டத்தையே கிட்டத்தட்ட மாற்றிவிட்டது.
பலர், வெறுமனே ஒரு கிளப்பை ஆதரிப்பவர்களாக இல்லாமல், தங்களை ரொனால்டோ அல்லது பார்சிலோனா ஜாம்பவானும் முன்னாள் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் முன்கள வீரருமான மெஸ்ஸியின் ரசிகர்களாகவே கருதுகின்றனர்.
இந்தக் கோடையில் வெளியான ஒரு பிபிசி ஐபிளேயர் (BBC iPlayer) ஆவணப்படத்தில் இவர்களது போட்டி இடம்பெற்றது.
இருவரில் யார் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர் என்ற விவாதத்தில், இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.
ஆனால் 2022 வரை, அவர்கள் இருவருக்கும் எதிராக இருந்த ஒரே விஷயம், அவர்கள் உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதுதான். உலகக்கோப்பையை புகழ்பெற்ற பீலே மற்றும் டியாகோ மரடோனா இருவரும் வென்றிருந்தனர்.
மெஸ்ஸி 2022-ல் கத்தாரில் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பையை வென்றார். இப்போது ரொனால்டோ அதை வெல்லாமலேயே ஓய்வு பெறுகிறார்.
இரு வீரர்களும் தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் வேளையில், ரொனால்டோ சௌதி அரேபியாவிலும், மெஸ்ஸி அமெரிக்காவில் இன்டர் மயாமி அணியுடனும் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் மெஸ்ஸிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.
இந்த உலகக்கோப்பையில் 7 கோல்களுடன் அவர் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவராக உள்ளார். இது 2022-ல் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கைக்குச் சமம்.
ரொனால்டோவுடன் இணைந்து யுனைடெட் அணியில் விளையாடிய சக வீரரான வெய்ன் ரூனி கூறுகையில்,"அவர் ஒரு மேதை, ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கால்பந்துக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் அளித்த பங்களிப்பு மிகவும் அரிதானது. இந்தத் தொடரை வெல்ல முடியும் என்று அவர் நம்பியிருந்ததால், அவர் ஏமாற்றமடைவார். ஆனால் காலம் எல்லோரையும் கடந்து செல்கிறது. இது கால்பந்துக்கு ஒரு சோகமான நாள்." என்றார்.

பட மூலாதாரம், Pat Elmont and Karl Bridgeman - FIFA/FIFA via Getty Images
உலகக்கோப்பையில் ரொனால்டோவின் சாதனைகள்
தனது நீண்டகால விளையாட்டு வாழ்க்கையின் காரணமாக, ரொனால்டோ இன்னும் இரண்டு உலகக் கோப்பை சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.
- ஆறு உலகக்கோப்பைகளில் கோல் அடித்த ஒரே வீரர் இவர்தான்
- மெஸ்ஸியைப் போலவே இவரும் ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பை போட்டிகளில் 11 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே நாக்-அவுட் சுற்றில் அடிக்கப்பட்டது. அதுவும் இந்த ஆண்டு குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் (last 32) பெனால்டி மூலம் அடிக்கப்பட்ட கோலாகும்.
கடந்த உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகளில் ரொனால்டோ மாற்று ஆட்டக்காரராக (பெஞ்சில்) அமரவைக்கப்பட்டார் - அப்போதைய பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடனான கருத்து வேறுபாட்டால் இவ்வாறு நடந்தது; 2008-க்குப் பிறகு ஒரு முக்கியத் தொடரில் அவர் ஆட்டத்தைத் தொடங்காதது அதுவே முதல் முறை.
முன்னாள் பிளாக்பர்ன் முன்கள வீரர் சட்டன் பேசுகையில்"கடந்த உலகக் கோப்பையில், பயிற்சியாளர் ரொனால்டோவை அணியில் சேர்க்காமல் விடுவதற்குத் துணிந்தபோது, 'லாஸ்ட் 16' சுற்றில் ராமோஸ் விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்தார். இப்போது நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, ரொனால்டோவின் வயதும் நான்கு ஆண்டுகள் கூடியுள்ளது; இப்போது என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்."
ஆட்டத்திற்குப் பிறகு பிபிசியிடம் பேசிய போர்ச்சுகல் ரசிகர்கள், ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்ததில் வருத்தம் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் பேசுகையில்"ரொனால்டோவை நேரில் பார்ப்பது எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அவர் எங்களுக்கு மிக முக்கியமானவர். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். இம்முறை எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ரொனால்டோவின் பங்களிப்பு மிக அழகானது. நாம் அழத் தேவையில்லை, அவரை நேரில் பார்த்ததற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்." என்று கூறினார்.

பட மூலாதாரம், GettyImages
போர்ச்சுகல் பயிற்சியாளர் விலகுகிறார்
ஸ்வான்சீ, விகான் மற்றும் எவர்டன் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான மார்டினெஸ், 2016 முதல் 2022 வரை பெல்ஜியம் அணியையும், 2023 முதல் போர்ச்சுகல் அணியையும் வழிநடத்தினார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர், 2018 உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் (அங்கு பிரான்ஸிடம் தோல்வியடைந்தது), ஆனால் 2022-ல் குழு நிலையிலேயே (group stage) வெளியேறியது
கடந்த ஆண்டு போர்ச்சுகல் அணியுடன் 'நேஷன்ஸ் லீக்' பட்டத்தை வென்ற அவர், இந்த உலகக் கோப்பை வெளியேற்றத்திற்குப் பிறகு பதவியிலிருந்து விலகுகிறார். "உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்துடனேயே நான் போர்ச்சுகலுக்கு வந்தேன்; அதை வெல்ல முடியாத நிலையில், தொடர்ந்து செயல்படுவதில் அர்த்தமில்லை," என்று அவர் கூறினார்.
"எனது ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது."

பட மூலாதாரம், Sanjin Strukic/Pixsell/MB Media/Getty Images
சட்டன் மேலும் கூறுகையில் "உலகக் கோப்பையை வெல்ல முயற்சிப்பதும், போர்ச்சுகலுக்காகச் சிறந்த அணியை களமிறக்குவதுமே அவரது பணியாக இருந்தது. அதை அவர் செய்தாரா? நிச்சயமாக இல்லை. இந்த அணியை அவர் கையாண்ட விதம் மிகவும் மோசமானது." என்றார்.
"பெல்ஜியத்தின் தலைசிறந்த வீரர்களைக் கொண்டு பெரிய சாதனைகளைப் படைக்க வாய்ப்பிருந்தும், அந்த அணியின் நிலையை அவர் சீர்குலைத்தார்; இறுதியில் அவர்கள் கேலிக்குரியவர்களாகவே மாறினர்.
"இப்போது போர்ச்சுகல் அணியின் விஷயத்திலும், ஒரு பயிற்சியாளர் அப்படி நடந்துகொண்டதைப் பார்ப்பது மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































