You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தமிழ்நாட்டில் காணாமல் போன மகனை 23 ஆண்டுகள் கழித்து பஞ்சாபில் சந்தித்த தாயின் உணர்வுபூர்வமான தருணம்
தமிழ்நாட்டில் காணாமல் போன தனது மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாபில் சந்தித்திருக்கிறார் ஒரு தாய்.
கோவை நீலாம்பூர் ஆச்சாங்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. கணவரை இழந்த இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் பிரகாசம் கடந்த 2003ஆம் ஆண்டு தனது 16 வயதில் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்றவர் அதன் பின் திரும்பவே இல்லை.
அவரை தேடி சுந்தரி எடுத்த முயற்சிகளுக்கு 23 ஆண்டுகளுக்கு பின் பலன் கிடைத்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட காலம் கொத்தடிமையாக பிரகாசம் இருந்தது தெரியவந்தது.
ஒரு பத்திரிகையாளரின் உதவியுடன் தனது மகன் உயிருடன் இருப்பதை அறிந்த தாய், மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு பஞ்சாப்பில் உள்ள காப்பகத்திற்குச் சென்று தனது மகனைச் சந்தித்தார்.
பாட்டியாலாவில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது, இருபது ஆண்டுகளுக்கும் மேலான பிரிவு முடிவுக்கு வந்து தாய் தனது மகனை கண்ணீருடன் தழுவிக்கொண்டார்.
தற்போது அங்குள்ள அரசு அதிகாரிகள் முறைப்படி பிரகாசத்தை தாயிடம் ஒப்படைத்ததுடன், அவருக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு