You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருடு போன நகையை மீட்க மதுரை கிராம மக்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலா’ - காணொளி
ஒரு வீட்டில் களவு நகை, பணம் ஆகியவை களவுபோய்விடுகிறது. திருடியது சுற்றத்தில் யாரோதான் என்பதும் தெரிந்துவிடுகிறது.
அந்த நகையையும் பணத்தையும் மீட்க மக்கள் ஒரு யோசனை செய்கிறார்கள். அரைமணிநேரம் விளக்குகள் அணைக்கப்படும். திருடியவர் அதனை ஒரு பொது இடத்தில் கொண்டுவந்து வைக்க வேண்டும்.
இது தமிழ் சினிமாவில் பார்த்த காட்சி தானே, என்கிறீர்களா?
அதுதான் இல்லை.
மதுரையில் ஒரு கிராமத்தில் சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
மதுரை திருமங்கலத்தை அடுத்த பெரிய பொக்கம்பட்டி கிராமத்தில், ஒரு விவசாயின் வீட்டில் 26 சவரன் தங்க நகை, 20,000 ரொக்கப் பணம் ஆகியவை திருடுபோனது.
அதைக் கண்டுபிடிக்க, அக்கிராம மக்கள், ஆதி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலாவை’ மீண்டும் உபயோகித்தனர். அதை வைத்து 48 மணி நேரத்தில் தங்கம், நகையை மீட்டுக் காவல்துறைக்கு வேலையில்லாமல் செய்துள்ளனர்.
கிராம மக்களின் யோசனையை ஏற்று ‘அண்டா ஃபார்முலாவிற்கு’ போலீசார் அனுமதி வழங்கினர்.
திருட்டுச் சம்பவம் நடந்த அன்றே, ஊரில் உள்ள எல்லோரது வீட்டிற்குற்கும் சென்று ஒரு போஸ்ட் கவர் அளிக்கப்பட்டது. அதில், ‘திருட்டு நகையை வைத்திருந்தால், இந்தக் கவரில் போட்டு விளக்கு அணைக்கப்படும் நேரத்தில் அண்டாவிற்குள் போட்டு விடலாம்’ என எழுதப்பட்டிருந்தது.
அதன்பின், இரவு 8 மணிக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பெரிய அண்டா வைக்கப்பட்டது.
அதன்பின் கிராமத்தின் மத்தியில் இருக்கும் தெரு விளக்குகளுக்கு அரை மணி நேரம் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
விளக்குகள் மீண்டும் போடப்பட்டபின் அண்டாவிற்குள் பார்த்தபோது அதில் கவர்கள் கிடந்தன. ஒவ்வொன்றாக திறந்து பார்த்தபோது 23 சவரன் நகை மட்டுமே சிக்கியது. இதனை ஊர் பெரியவர் போலீசாரிடம் ஒப்படைக்க, நகையை போலீசார் ராகவனிடம் வழங்கினர்.
ஆனால் திருடு போன மீதி 3 சவரன் நகை, 20,000 பணம் ஆகியவை திரும்பி வரவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)